வியாழன், 15 ஜூன், 2017

குமுதம் கக்கூஸ்லீக்ஸ் ஐ ஸ்பான்சர் செய்வது அ.தி.மு.க-வா – பா.ஜ.க.-வா ?

ஜெயா உயிரோடு இருந்த போது இருவர் ஜால்ரா – காக்காய் – ஐஸ் – முதுகு சொறிதல் – இன்னபிறவற்றில் அடியாழம் வரை சென்று ஆதரித்தனர். ஒருவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். மற்றொருவர் குமுதம்.
பெட்டிக் கடைகளில் விற்காமல் தொங்கும் “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகையை பார்த்திருப்போம். வாரமிருமுறை வந்தாலும் போட்டி காரணமாகவும், ஆளும் கட்சிகள் – அரசாங்கங்களிடமிருந்து வாங்கும் காசுக்கு மேலேயே கூவி ஆதரிப்பதாலும் குமுதத்தை மக்கள் தவிர்த்து விடுவர். ஆகவேதான் ‘வாரியா’ என்ற வரிசையில் அவ்வப்போது ஆபாச தலைப்புக்களோடு ‘ஆண்களை’ குறிவைத்து வீழ்த்த நினைக்கிறது குமுதம்.
ஜெயாவின் அண்ணன் மகளான தீபாவை “சொப்பன சுந்தரி” என்று அட்டைப் படம் வெளியிட்டு “புரட்சித் தலைவியின்” பொற்பாத சேவையை இன்றும் பக்தியோடு செய்கிறது குமுதம் ரிப்போர்ட்டர் எனப்படும் புரசைவாக்கம் புரோக்கர்.
சமூகவலைத்தளங்களில் எழுந்த கடும் கண்டனம் காரணமாக குமுதம் அந்த சொப்பனசுந்தரியை யாரு வைச்சிருக்கா படம் கொண்ட ரிப்போர்ட்டரை தனது ஃபேஸ்புக்கில் வைத்திருக்கவில்லை. அதே நேரம் இந்தப் பிரச்சினை காரணமாக தனது பெயர் சந்தையில் பரபரப்பாக பேசப்படுவதால் குமதம் ரிப்போர்ட்டரின் ஓனர் வரதராஜ ஐய்யங்கார் கல்லாப்பெட்டிக்கு தனியே பூஜை செய்திருப்பது உறுதி. எந்த ஒரு விபச்சாரத் தரகனுக்கும் வெட்கம், சுரணை, பயம், ஒழுக்கம் இருப்பதில்லை என்றுதான் நாம் நினைக்கிறோம். உண்மையில் இவையெல்லாம் இல்லாமல் இருந்தால்தான் தான் தொழில் செய்ய முடியும் என்பது தரகர்களுக்குத் தெரியும்.

தீபாவை கடுமையாக விமிரசிப்போர்தான் குமுதத்தின் இந்த தரங்கெட்ட செயலை கண்டிப்பதில் முதன்மை வகிக்கின்றனர், காரணம் இந்த நாகரீகம் பெரியார் கற்றுக் கொடுத்தவைகளில் ஒன்று என ஒரு நண்பர் எழுதியிருந்தார். உண்மைதான். ஆனால் கருணாநிதியையும், குஷ்புவையும் இணைத்து இன்னொரு மணியம்மை என்று எழுதியிருந்த ரிப்போர்ட்டருக்கு, இப்போதைய ஏகோபித்த கண்டனம் அப்போது எழவில்லை.
சொல்லப் போனால் இதுதான் இந்தப் பிரச்சினையின் மையம். அதாவது குமுதத்தின் தவறை வெறுமனே பெண்களுக்கு எதிரான ஒன்றாகவோ இல்லை ஆணாதிக்கத்தின் திமிராக மட்டும் பார்ப்பதோ போதாது.
சொப்பன சுந்தரி காமடியை கவுண்டமணி – செந்தில் கூட்டணி மூலம் இன்றும் ரசிக்கும் ரசனை இருக்கும் வரை குமுதம் ஏன் இப்படி அட்டைப்படம் போடாது என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார். குமுதம் பெண்களை இழிவாகப் பார்க்கிறது என்பதற்காக இந்தப் படத்தைப் போடவில்லை. மாறாக ஜெயலலிதாவை விழுந்து கும்பிடும் அடிமைத்தனத்திற்காக இப்படிப் போடுகிறது. இல்லையேல் உடன்கட்டை ஏறத்துடித்த ஜெயலலிதா குறித்து குமுதம் ஏன் அட்டைப் படம் போடவில்லை? ஆகவே இது பெண்ணியம் – ஆணாதிக்கம் சார்ந்த ஒன்றல்ல. அல்லது அதுவே முதன்மையானதல்ல.
கார்ட்டூனிஸ்ட் பாலா குமுதத்தில் வேலை பார்த்த போது (இப்போது அவர் அங்கு இல்லை) லீனா மணிமேகலை குறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விமரிசனம் ஏதோ எழுதினார். உடனே லீனா மணிமேகலை குமுதம் அலுவலகம் சென்று நிர்வாகத்திடம் பேசி பாலாவை மன்னிப்பு கேட்க வைத்தார். பிரச்சினை என்னவென்றால் அந்த நிகழ்வு குறித்து முதலில் லீனா குமுதம் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம்தான். அதில் பெண்களை கண்ணியமாக மதிக்கும் குமுதம் என்று ஏகப்பட்ட பதக்கங்களை திணித்திருந்தார். இதுதான் பிரச்சினை!
தண்டகாரண்யாவின் பழங்குடி மக்களை ஒடுக்கும் டாடாவின் நடத்தையை நன்னடத்தையாகக் காட்டுவதற்கு தேஜஸ்வினி படம் எடுத்த பெண்ணுரிமைப் போராளி லீனா மணிமேகலையின் கண்களுக்கு குமுதம் பத்திரிகை எப்படி பெண்களை மதிப்பதாக தெரிகிறது?
இல்லை அதே கார்ட்டூனிஸ்ட் பாலா குமுதத்தில் வேலை பார்த்த போது கருணாநிதியை கிட்டத்தட்ட அம்மணக்குண்டியாகவெல்லாம் கார்ட்டூன் போட்டிருந்தார். அதே போன்று அவர் ஜெயலலிதாவையோ இல்லை மோடியையோ போட முடியுமா? எனவே குமுதத்தின் பிரச்சினை என்பது பெண் மீதான ஆணாதிக்கம் சார்ந்த ஒன்றல்ல. மாறாக உழைக்கும் மக்களின் மீதான ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை சார்ந்தது.
மேலும் குமுதம் தனது தோற்றத்திலிருந்தே பெண்களை இழிவுபடுத்தவதை அட்டைப்படமாகவோ, கிசுகிசுவாகவோ, நகைச்சுவையாகவோ, ஜெயராஜின் ஓவியங்களாகவோ, கதைகளாகவோ செய்து வருகின்றது. குமுதத்தை 1943-ம் ஆண்டு துவக்கிய எஸ்.ஏ.பி. செட்டியார் தினசரி காலையில் குமுதம் ஆசிரியர் குழுவைக் கூட்டி பகவத் கீதையின் சுலோகம் ஒன்றை படித்து விளக்குவாராம். பிறகு அவர் தனது மேசைக்குச் சென்று நடிகைகளின் கவர்ச்சி படக் குவியலில் இருந்து அந்த வாரப் படத்தை தெரிவு செய்வாராம்.
எஸ்.ஏ.பி. செட்டியார்
இப்படி ஆன்மீகமும், லவுகீகமும் கலந்த காக்டெயில் பத்திரிகையான குமுதத்தின் உத்தியே சினிமா செய்திகளும், கவர்ச்சி படங்களும்தான். 90-களில் வெளிவந்த குமுதத்தின் அட்டைப் படம் ஒன்றில் வெள்ளை பனியன் அணிந்த நடிகை சிம்ரனின் இடையில் தீண்டாமைக் கிராமங்கள் எனும் ஒரு கட்டுரையின் தலைப்பை போட்டிருந்தார்கள். தீண்டாமை எனும் கொடிய சமூக ஒடுக்குமுறையை இப்படி ‘கவர்ச்சியாக’ காட்டும் ஆபாச தைரியம் எவருக்கு வரும்?
சுச்சிலீக்ஸ் விவகாரத்தின் போது மார்கெட் இழந்த நடிகையான கஸ்தூரி ஊடகங்கள் எப்படி நடிகைகளை தவறாக சித்தரிக்கின்றன, அத்தகைய ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் பொங்கினார். இன்று தீபாவை இழிவுபடுத்தும் குமுதத்திற்கு எதிராக மார்கெட் உள்ள நடிகைகள் ஒரு பத்து பேரை புறக்கணிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். சொன்னால் புறக்கணிக்கச் சொன்னவர்களை புரட்டி எடுத்து விடுவார்கள்.
ஆகவே கரகாட்டக்காரன் காமடியை மக்கள் ரசிப்பதை வைத்து குமுதத்தின் குற்றத்தை மக்களின் அதாவது ஆணாதிக்கத்தின் குற்றமாக எளிமைப்படுத்துவது சரியல்ல.
“கதவைத் திற காத்து வரட்டும்” இழி புகழ் நித்தியானந்தாவை தமிழக சந்தையில் இறக்கியதே குமுதம்தான். பிறகு நித்தியானந்தா பிடிப்பட்ட போது கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தாவை விமரிசிக்க – அதாவது அப்போதும் அதை ரஞ்சிதாவின் கவர்ச்சி கதையாக காட்ட – குமுதம் ஓடி வந்தது.
ஜெயா உயிரோடு இருந்த போது இருவர் ஜால்ரா – காக்காய் – ஐஸ் – முதுகு சொறிதல் – இன்னபிறவற்றில் அடியாழம் வரை சென்று ஆதரித்தனர். ஒருவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். மற்றொருவர் குமுதம். கருணாநிதியின் குடும்ப பெண்களை விதவிதமான காம்பினேஷனில் எஸ்.எஸ்.சந்திரன் ஆபாசமாக அர்ச்சிக்கும் போது ஜெயா குலுங்கி குலுங்கிச் சிரிப்பார். விளைவு சந்திரன் நாடாளுமன்றத்திற்கே தெரிவு செய்யப்பட்டார். குமுதத்திற்கு கிடைத்த பரிசு – சொத்துப் பிரச்சினையில் செட்டியார் வாரிசுகளை ஓரங்கட்டி அய்யங்கார் வகையறாக்களுக்கு உரிமை கிடைத்தது. அதன் பிறகு குமுதம் பத்திரிகை குழுமம் ஹாலிவுட்டின் தேர்ச்சி பெற்ற வரைகலை நிபுணர்களே திகைக்கும் வண்ணம் ஜெயாவுக்கு ஆதரவாக தினுசு தினுசாக திரைக்கதைகளை எழுதித் தள்ளியது.
விஸ்வரூபம் பிரச்சினை வந்தபோது கூட மற்ற பத்திரிகைகளெல்லாம் சற்று பயந்து கொண்டு தமிழக அரசைக் கண்டிக்கவில்லை என்றாலும் மொக்கையான கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் கமலை ஆதரித்தன. ஆனால் குமுதம் மட்டும் இந்தப்பிரச்சினைக்கு சதி செய்த காரணகர்த்தா கருணாநிதி என்று ஒரு திகில் நிறைந்த மர்மக்கதையை அட்டைப்படக் கட்டுரையாக எழுதி வெளியிட்டது. அதன்படி அப்பாவி கமல் ஒரு பகடைக்காயாக கருணாநிதியின் கையில் சிக்கிவிட்டதாக எழுதியது குமுதம். இத்தகைய கற்பனை வளம் காமரூனுக்கோ, லூகாசுக்கோ இருக்காது என்று சவால் விடுகிறோம்.
இதற்காக இவர்கள் உருவாக்கிய வரலாறு இன்னும் பயங்கரம். அதாவது இன்று கமல் பலியானது போல அன்று ரஜினி பலியானார் என்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருந்தார்கள். அதன்படி 1991 -இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவை தமிழக மக்கள் அமர்க்களமாக ஆதரித்து தள்ளினார்களாம். அந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் பாட்சா பட விழாவில் மணிரத்தினம் வீட்டு குண்டு வீச்சு தொடர்பாகவும், டிராபிக் ஜாமில் தனது கார் நிற்பதற்காகவும் துக்கப்பட்ட ரஜினி தமிழக அரசைக் கண்டித்தது நினைவிருக்கிறதா? அதை ஊதிப்பெருக்கி ரஜினிக்கும் ஜெயாவுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அடுத்த தேர்தலில் ரஜினியை ஒரு வாய்ஸ் கொடுக்க வைத்து அதிமுகவை தோற்க வைத்தவர் கருணாநிதி என்று போகிறது குமுதத்தின் வரலாறு.
இருப்பினும் இப்படி ஜன்மபகையோடு குமுதம் கருணாதியை அடித்தாலும் உடன்பிறப்புக்கள் கோபம் வந்து புரசைவாக்கம் சென்று அய்யங்காரை உண்டு இல்லை என்று கேட்கவில்லை. அ.தி.மு.க, தி.மு.க இருகட்சிகளிலும் இத்தகைய ஆபாசப் பேச்சுக்கள் அடிப்படையான பொதுக்கூட்ட பண்பு என்பதால் குமுதம் எந்த எல்லைக்கும் சென்று எழுதுகிறது.
2014 பாராளுமன்றத் தேர்தலின் போது குமுதத்தில் துக்ளக் சோவின் அனுபவத் தொடர் வந்து கொண்டிருந்தது. மோடி பிரதமராக முன்னிறுத்தப் பட்ட உடனேயே குமுதம் உரிமையாளரான வரதராஜ அய்யங்காரும், ஆசிரியரான கோசல்ராமும் குஜராத் சென்று மோடியை பேட்டி கண்டு வெளியிட்டனர். அதில் இவர்கள் குஜராத்தைப் பற்றியும், மோடியைப் பற்றியும் நாக்கூசாமல் பொய்யுரைத்தது போல தமிழிசை கூட பேசமாட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
செட்டியாரின் வாரிசான ஜவஹர் பழனியப்பனிடமிருந்து குமுதத்தின் உரிமையை கைப்பற்ற நினைத்த வரதராஜனை கடந்த திமுக ஆட்சியில் போலீஸ் கைது செய்தது. அதனாலேயே அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவை திருப்திப் படுத்தவும் திமுகவை விதவிதமாக திட்டி எழுதியது குமுதம். ஜெயா செத்த பிறகு குமுதம் தன்னுடைய புரோக்கர் விசுவாசத்தை பாஜகவிற்கு சோலோவாக ஒப்பந்தம் போட்டிருப்பதால் கமலாலயத்தின் இயக்கத்தை ஆதரிக்கும் பொருட்டு கூட தீபாவை இப்படி ஆபாசமாக எழுதியிருக்கலாம்.
தற்போது மன்னார்குடி சசிகலா – தினகரன் கும்பலிடம் ஆட்சியும், கட்சியும் இருந்தால் ஆதாயம் என நினைக்கும் குமுதம், அதே போன்று அவர்களை அடக்க ஓபிஎஸ்-ஐ இறக்கும் பாஜகவையும் ஆதரிக்கிறது. எந்த திட்டம் வெற்றி பெற்றாலும் அதை முதலில் ஆதரிக்கும் மாமாத்தானம் தன்னுடைய தனமாக இருக்க வேண்டும் என்று துடிக்கிறது குமுதம்.
ஜெயலலிதாவுக்கு சொம்படித்த மற்றுமொரு பத்திரிகையான தி இந்துவும் கூட விதவிதமான திரைக்கதைகளை ஓரளவு எழுதியது. என்ன இவர்கள் கொஞ்சம் டீஸன்டான அடிமைகள் என்பதால் போற்றிப் புராணத்தில் கொஞ்சம் ‘கண்ணியத்தை’ கடைபிடித்தார்கள். குமுதமோ மலிவான அடிமை என்பதால் கூச்சப்படாமல் ஆபாச அர்ச்சனையை அவிழ்த்து விடுகிறார்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஆட்சியில் கிடைத்த ஆதாயங்களுக்கு பிரதிபலனாக தீபாவை இப்படி பலிகொடுக்கிறது குமுதம். இப்படி தில்லானா வைத்தியே திகைக்கும் புரோக்கரான குமுதத்தை கண்டிக்க வேண்டுமென்றால் இந்த புரோக்கரை வைத்தும் அரசியல் செய்யும் அ.தி.மு.க மற்றும் பாஜக கும்பல்களை தண்டிக்க வேண்டும்.
– வேல்ராசன்

கருத்துகள் இல்லை: