வெள்ளி, 16 ஜூன், 2017

காலா என் அப்பா! திரவிய நாடாரின் மகள் விஜயலட்சுமி பேட்டி

விகத்ணன் :ஆர்.வைதேகி`காலையில பொழுது விடியும்போதே வீட்டுவாசல்ல பெருங்கூட்டம் நிற்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னை இருக்கும். எல்லாத்தையும் அப்பா பொறுமையா விசாரிச்சுத் தீர்த்து வெச்சிட்டிருப்பார். சில நேரங்கள்ல அப்படி உதவி கேட்டு நிக்கறவங்கள்ல போலீஸ்காரங்களும் இருந்திருக்காங்க... மக்கள் அப்பா கால்கள்ல விழறதும், அவருக்கு வணக்கம் வைக்கிறதும் வழக்கமான காட்சிகளா இருந்திருக்கு. அந்தக் கூட்டத்துக்கும் களேபரத்துக்கும் நடுவுலதான் நாங்க ரெடியாகி ஸ்கூலுக்குக் கிளம்பிப் போவோம்...' இப்போது அமெரிக்காவில் வசிக்கும் விஜயலட்சுமி, தன் அப்பா பற்றி விவரிப்பதைக் கேட்கும்போது நமக்குக் கண்முன்னே விரிகின்றன `நாயகன்' படக் காட்சிகள். ஐம்பதுகளில் மும்பையைக் கலக்கிய பிரபல தாதாக்களில் முக்கியமானவர் திரவியம் நாடார். `நாயகன்' கமலுக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை. ஆனால், 'காலா' ரஜினிக்கும் திரவியம் நாடாருக்கும் நிறையவே தொடர்பிருக்கிறது.
 பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிற `காலா' திரைப்படம், மும்பையின் முன்னாள் தாதா திரவியம் நாடாரின் வாழ்க்கை தொடர்பானது என்கின்றன ஊடகச் செய்திகள் சில. அப்படியா? அவரின் மகள் விஜயலட்சுமியிடம் விளக்கம் கேட்டோம்.`அப்பாவுக்குப் பூர்வீகம் திருநெல்வேலி.   கடுமையான வறட்சியும் பஞ்சமும் நிலவிய காலகட்டம் அது. ஏராளமான மக்கள் காலராவால் இறந்துக்கிட்டிருந்தாங்க. அப்பாவோட கடைசித் தம்பியும் இறந்தார். அப்போ எல்லாரும் திருநெல்வேலியைவிட்டு பர்மாவுக்கோ, ஸ்ரீ லங்காவுக்கோ போயிட்டிருந்தாங்க. அப்பா சென்னைக்கு ஓடிவந்தார். அவருக்கு அப்போ 16 வயசு.   சென்னையில் மளிகைக்கடையில வேலை பார்த்திட்டிருந்த அவங்க அண்ணனைத் தேடிப் போயிருக்கார். `நீ ரொம்ப சின்னப் பையன்... உனக்கு இன்னும் விவரம் பத்தலை'னு அண்ணன் விரட்டவே, அந்தக் கோபத்துல அப்பா சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்திருக்கார். அங்கே கிளம்பத் தயாரா இருந்த ஒரு ட்ரெயின்ல ஏறியிருக்கார்.  அந்த ட்ரெயின் மும்பைக்குப் போயிருக்கு. சாப்பாடு கிடைக்காமலும், தங்கறதுக்கு இடமில்லாமலும் பல நாள்கள் அவதிப்பட்டிருக்கார்.

சேலத்தைச் சேர்ந்த சிலருடைய நட்பு கிடைச்சு, அவங்கதான் அப்பாவுக்குச் சாப்பாடும் தங்கறதுக்கான இடமும் கொடுத்து உதவியிருக்காங்க.  அதுக்குப் பதிலா, சேலத்தைச் சேர்ந்த அந்தப் பெண்கள் பண்ணிட்டிருந்த வெல்ல பிசினஸுக்கு அப்பா பாதுகாப்பு கொடுத்திருக்காங்க. ஹிந்தியில `கூடு'ன்னா வெல்லம். அதனாலதான் அப்பாவுக்கு `கூடுவாலா சேட்'னு பேர் வந்தது.'' - விஜயலட்சுமியின் அறிமுக வார்த்தைகள் மெயின் பிக்சரைப் பார்க்கும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.`அப்பா, வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் - இவங்க மூணு பேரும் மும்பையின் பிரபல தாதாக்கள். மூணு பேரும் நல்ல நண்பர்கள். அவங்கவங்களுக்குன்னு தனித்தனி ஏரியா இருந்தது. அப்பாவுக்குத் தாராவி. மூணு பேரும் அடுத்தவங்க வேலையில தலையிட்டதில்லை. அவங்களோட கடத்தல் பிசினஸ்ல அப்பாவுக்கு உடன்பாடு இருந்ததில்லை.
ஆனாலும், அதைத் தாண்டி அவங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு இருந்தது.ஒரு தாதாவோட மகளா என்னுடைய டீன்ஏஜ்ல கொஞ்சம் வருத்தமா ஃபீல் பண்ணியிருக்கேன். மத்த பிள்ளைங்களோட அப்பா அம்மா மாதிரி என் பெற்றோரும் படிச்சவங்களா இருக்கணும்னு நினைச்சிருக்கேன். ஸ்கூல்ல நான் டாப் ஸ்டூடன்ட். அப்பா படிக்காதவர் என்பதில் எனக்கு வருத்தம் இருந்திருக்கு. அப்பா நல்ல உயரம். 100 கிலோவுல ஆஜானுபாகுவா இருப்பார். அவருடைய தோற்றத்தைப் பார்த்தாலே மக்கள் பயப்படுவாங்க. என் அப்பாவும் சாதாரண மனிதரா இருந்திருக்கக் கூடாதான்னு நான் ஏங்கியிருக்கேன். அந்த ஏக்கமெல்லாம் ஒருநாள் மாறிச்சு.21 வயசுல நான் க்ரைம் அண்ட் இன் வெஸ்ட்டிகேஷன் ஜர்னலிஸ்ட்டானேன். மனிதர்களோட வாழ்க்கையை நெருக்கத்துல பார்க்க முடிஞ்சது. அப்பாவுடைய வாழ்க்கையும் புரிஞ்சது. அப்பாவோட முக்கியத்துவம் தெரிஞ்சது. நான் சந்திச்ச பல பணக்காரர்களும் அவங்கவங்க குடும்பங்களுக்காக உழைக்கிறவங்களா இருந்தப்ப, எங்கப்பா மட்டும் ஊருக்கு உழைக்கிறவரா இருந்ததும் தெரிய வந்தது. எங்க வீட்டுக்கு வந்த யாரும் பசியோடு திரும்பிப் போனதில்லை. எத்தனையோ பேர் தினமும் ஊர்லேருந்து ஓடி வந்திருப்பாங்க. அவங்களைப் பார்த்த உடனே அப்பா சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுவார். எப்போதும் 50, 60 பேர் சாப்பிடற அளவுக்கு எங்க வீட்ல சமையல் தயாராகிட்டே இருக்கும். கையில காசு கொடுத்து, தங்கறதுக்கு இடம் ஏற்பாடு பண்ணி அனுப்புவாங்க. சின்ன வயசுல அப்பாவைப் பத்தி எனக்குள்ள பதிஞ்சிருந்த பிம்பமெல்லாம் அப்பதான் உடைய ஆரம்பிச்சது. அப்பாமேல மரியாதை கூடினது. மும்பையில கலவரம் நடந்தபோது மற்ற பத்திரிகையாளர்கள் எல்லாரும் போலீஸ் பாதுகாப்போட வந்தாங்க. நான் மட்டும் தனியா கிளம்பினேன். எதைப் பத்தியும் நான் பயப்படலை. அதுக்குக் காரணம் அப்பா.

1960-ல் பால் தாக்கரேவின் சிவசேனா கட்சி, தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை கள்ல ஈடுபட்டது. அந்த நேரத்தில் அப்பா, வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் மூணு பேரும் அதைக் கடுமையா எதிர்த்தாங்க. அப்புறம்தான் சிவசேனா ஆட்கள் அந்த நடவடிக்கைகள்லேருந்து பின்வாங்கி னாங்க. திருநெல்வேலியிலேருந்து வந்த நிறைய பேருக்கு நிதி உதவி செய்து, பிசினஸ் தொடங்க வழிகாட்டியிருக்காங்க அப்பா. அவங்கள்ல பலர் இன்னிக்கு மும்பையிலயும் சென்னையிலயும் பெரிய பிசினஸ் ஆட்களா இருக்காங்க...'' - பெருமையாகச் சொல்பவர், `காலா' கதைக்குள் வருகிறார்.  
`` `காலா' படம் ஹாஜி மஸ்தானைப் பத்தின கதை இல்லைன்னும் எங்க அப்பாவோட வாழ்க்கையைத் தழுவினதா இருக்கலாம்னும் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். அந்தச் செய்தியில எங்கப்பாவைப் பத்தின நிறைய தகவல்கள் இருந்தன. அவர் திருநெல்வேலி மக்களுக்கு உதவினது, `கூடுவாலா சேட்'னு அழைக்கப்பட்டதுன்னு அந்தத் தகவல்கள் `காலா' படம் அப்பாவின் கதையா இருக்கலாமோன்னு நினைக்க வைத்தன. உடனடியா டைரக்டர் இரஞ்சித்தைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தினார்.  ஆனா, பல விஷயங்கள் அப்பாவின் வாழ்க்கையைத் தழுவினதா இருக்கிறதா நான் ஃபீல் பண்றேன். `காலா' கதை 100 சதவிகிதம் எங்கப்பாவோட வாழ்க்கையைப் பத்திப் பேசற பயோபிக் இல்லைன்னாலும், எங்கப்பாவோட வாழ்க்கையால இன்ஸ்பையர் ஆன கதைன்னு நினைக்கிறேன்.

`காலா' எங்கப்பாவையோ, வேறு  தனிப்பட்ட நபர்களையோ பத்தின கதை இல்லைன்னு இரஞ்சித் சொன்னார். நிகழ்கால தாராவியைப் பத்தின படம்னு சொல்றாங்க. ஆனா, `காலா' பட போஸ்டர்ல ரஜினி சார் உட்கார்ந்திருந்த  அந்த ஜீப்போட நம்பர், கதை நடக்கிற காலம் 1956-ம் வருஷம்கிறதைக் குறிப்பால உணர்த்துற மாதிரி இருக்கு..  ரஜினி சார் உட்கார்ந்திருந்த அதே ஸ்டைல்ல எங்கப்பா பலமுறை உட்கார்ந்து பார்த்திருக்கேன். அப்பா கறுப்பு நிறத்துல டிரெஸ் போட மாட்டாங்க. வெள்ளை குர்தாவும் வெள்ளை வேட்டியும்தான் உடுத்துவாங்க. ஆனா, அதே மாதிரிதான் காலைத் தூக்கி உட்காருவாங்க. அந்த போட்டோவைப் பார்த்ததும் எனக்கு சர்ப்ரைஸா இருந்தது. 1956-ம் வருஷம் எனக்கு ரொம்ப முக்கியமானது. மும்பை, தாராவி ஏரியாவுல அப்பா பவர்ஃபுல்லா மாற ஆரம்பிச்ச நேரம் அது.   
`காலா'ங்கிற டைட்டிலுக்கு இரஞ்சித்  சொன்ன காரணம் எதுவா வேணா இருக்கட்டும். என்னைப் பொறுத்தவரை தாராவிங்கிறது ஓர் இருட்டு உலகம். அங்கே தண்ணீர் கிடையாது. மின்சாரம் கிடையாது. வெறும் சாக்கடை. அந்தக் கறுப்பு உலகத்துலேருந்து நிறைய மக்கள் வெளியில வந்து அவங்கவங்க வாழ்க்கையை அமைச்சுக்கிட்டிருக்காங்க.  அதனால அதைக் குறிக்கிற பேராதான் நான் இதைப் பார்க்கறேன். அப்பா இறந்து 15  வருஷங்களுக்குப் பிறகும் அவரைப் பத்திப் பேசறாங்கங்கறது நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு...'' -வார்த்தைக்கு வார்த்தை அப்பா பற்றிக் குறிப்பிடாமல் பேசவே முடியவில்லை விஜயலட்சுமியால்.

``அப்பாவுக்கு நாங்க நாலு பிள்ளைங்க. என் ரெண்டு தம்பிகள் பிசினஸ் பண்றாங்க. ஒருத்தர் பத்திரிகையாளரா இருக்கார். எல்லாரும் நல்லா படிக்கணும்கிறதுதான் அப்பாவின் ஆசை. அதனால, கரடுமுரடான வாழ்க்கையிலேருந்து எங்களை எல்லாம் விலக்கியே வெச்சிருந்தாங்க. அவருடைய தாதா வாழ்க்கை எங்களுக்குத் தெரிய வேண்டாம்னு நினைச்சாங்க. அதை அவர் எங்களுக்குக் கொடுத்த பாதுகாப்பாதான் நான் பார்க்கிறேன். அப்பா எங்களுக்காகப் பெரிய சொத்தெல்லாம் சேர்த்து வைக்கலை.

அப்பாவோட இறப்பு எங்க எல்லாருக்கும் ரொம்பவே வலியைக் கொடுத்தது. பத்து வருஷங்களா உடம்புக்கு முடியாம இருந்தாங்க. மும்பையையே கலக்கின ஒரு தாதா திடீர்னு யாரையுமே நினைவு வெச்சுக்க முடியாம படுக்கையில விழுந்ததை சகிச்சுக்க முடியலை. திடீர்னு அவருடைய உலகமே மாறிடுச்சு. அவரைச் சந்திக்க வர்ற மக்களோட எண்ணிக்கை குறைஞ்சது. அதெல்லாம் அவருக்கு ஒருவித மன அழுத்தத்தைக் கொடுத்தது. தனக்கு வயசாகுதுங்கிறதை ஏத்துக்க முடியலை. 2003 பிப்ரவரியில அப்பா தவறிட்டாங்க. சொந்த பந்தங்களையும் நண்பர்களையும் உதவின்னு கேட்டு வந்தவங்களையும் தாங்கி, அடைக்கலம் கொடுத்த ஆலமரமே விழுந்தது மாதிரி இருந்தது. எத்தனையோ பேருக்கு எங்கப்பா இன்னிக்குக் கடவுளா இருக்காங்க. அவங்க பண்ணினதெல்லாம் சரியா தப்பாங்கிற விவாதமே தேவையில்லைன்னு தோணுது. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை...''  - `நாயகன்' வசனத்துடனேயே முடிக்கிறார் தாதா மகள்!

கருத்துகள் இல்லை: