செவ்வாய், 13 ஜூன், 2017

அன்றே சொன்னது நக்கீரன்! - அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரம் அம்பலம்-

கூவத்தூரில் நடந்த பேரம் குறித்தும், பேரத்தில் பாதி தங்கமாகவும் மீதி ரொக்கமாகவும் தருவதாக முடிவு செய்யப்பட்டதும், ஆனால், பேரம் பேசியபடி ரொக்கமும் தங்கமும் சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கும் கொடுக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் அதிருப்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அன்றே சொன்னது நக்கீரன்</இன்று நிரூபணம் ஆகியிருக்கிறது>சசிகலா அணியினரால் கூவத்தூர் சொகுசு பங்களாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களின் ஆதரவினைப்பெற நடந்த பண பேரம் குறித்த வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.>ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு சசிகலாவை முதல்வராக்க முயற்சிகள் நடைபெற்றன. இதனால், சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என இரு அணியாக மாறியது அதிமுக. இந்த நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல வேண்டி இருந்ததால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார்.  முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெறுவதற்காக பண பேரம் பேசி கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை சிறைவைத்தது சசிகலா அணி.



அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி இரவு முதல்  தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது எம்.எல்.ஏக்களை தங்கள் தரப்பிற்கு ஆதரவளிக்க பெரிய அளவில் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. அது தற்போது வீடியோ ஆதாரத்துடன் அம்பலம் ஆகியுள்ளது.

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன்.  அவர் பின்னர் கூவத்தூர் சொகுசு பங்களாவில் இருந்து வெளியேறி வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.  அவர் பண பேரம் குறித்து பேசிய வீடியோ  தற்போது வெளியாகியுள்ளது.  தனிப்பட்ட முறையில்  தனது நணபரிடம் சரவணன்  பேசியது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகி அந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.   



 அந்த வீடியோ காட்சிகளில்,  ’’ஒரே நேரத்தில் பல கோடி ரூபாய் திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தர முன் வந்தனர்.  சொந்த ஊரில் இருந்து வந்த எம்.எல்.ஏக்களை விமான நிலையத்திலேயே மடக்கிய சசிகலா அணி.  விமான நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏற்றியபோது   எம்.எல்.ஏவுக்கு தலா 2 கோடி என பேரம் பேசினர்.  எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து ஆளுநரை சந்திக்க சென்றபோது 4 கோடி என்று பேரம் பேசினார்கள்.  கூவத்தூர் சேர்ந்தபோது எம்.எல்.ஏக்களுக்கு 6 கோடி தர முன் வந்தனர்.  

அதிமுகவை சாராத 3 எம்.எல்.ஏக்களுக்கு தலா 10 கோடி பேரம் பேசப்பட்டது.  முக்குலத்தோர் புலிப்படைகள் தலைவர் கருணாஸுக்கு 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது.  கொங்குநாடு இளைஞர் பேரவைத்தலைவர் தனியரசுக்கு 10 கோடி ரூபாய் தர முன் வந்தனர்.  மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.  தமிமுன் அன்சாரிக்கு 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது’’ என்று கூறியிருக்கிறார் சரவணன்.  

கருத்துகள் இல்லை: