சனி, 17 ஜூன், 2017

ஸ்டாலின் ஆளுநர் சந்திப்பு ... ஆட்சியை கலைக்க கோரிக்கை!

குதிரை பேரத்தில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டு ஆட்சியை கலைக்க வேண்டும்
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இன்று ஆளுநரை சந்தித்து, கூவத்தூர் பண பேர வீடியோ தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியதுடன், ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். சென்னை: தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கை மாறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேட்டியளித்ததாக ஒரு ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று சரவணன் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனையை சட்டசபையில் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் வற்புறுத்தி வருகிறார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆதாரம் இல்லாமல் எதைப் பற்றியும் சபையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார். இதனால் நேற்று ஆதாரத்தை தர தயாராக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனாலும் சபையில் பேச அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் பணம் கைமாறியதற்கான உரையாடல் அடங்கிய சி.டி.யை நிருபர்களிடம் காண்பித்து பேட்டி அளித்தார். தேவைப்பட்டால் கவர்னரையும் சந்திப்பதாக கூறினார். இந்த சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று மாலை சென்னை வந்தார். ராஜ்பவனில் அவரை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் சென்றனர்.

எம்.எல்.ஏ.க்களுக்க பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தனது கருத்துக்களை ஆளுநரிடம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி உள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் குதிரை பேரத்தின் அடிப்படையில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்கள். அப்போதே ஆளுநரிடம் இதுபற்றி புகார் கொடுத்தோம். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், பேரத்தில்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஆங்கிலத் தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏ. சரவணன் தனது பேட்டியில் தெளிவாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து மூன்று நட்களாக நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி சார்பில் பிரச்சினை எழுப்பினோம். ஆனால், அதற்கு சபாநாயகர் சம்மதிக்கவில்லை. அவர் ஆதாரத்தை கொடுத்துவிட்டுத்தான் பேச வேண்டும் என தொடர்ந்து இரண்டு நாட்களாகச் சொன்னார். நேற்று அந்த ஆதாரத்தை சட்டமன்ற அவையில் கொடுத்தபோது, தனது அறையில்தான் தரவேண்டும் என்று சொன்னார். அவரது அறைக்கு சென்று கொடுத்தோம். இனியாவது அது தொடர்பாக பேச அனுமதி அளிப்பாரா? என்று தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் இன்று ஆளுநரை சந்தித்து நடந்த சம்பவத்தை விரிவாக கூறினோம். உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு போடவேணடும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினோம். குதிரை பேரத்தில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். மாலைமலர்

கருத்துகள் இல்லை: