வெள்ளி, 16 ஜூன், 2017

வலி நிவாரணிகளால் உயிரை விடும் அமெரிக்க மக்கள்

vinavu: ப்பியாய்டு மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை அளவுக்கதிகமாக உட்கொள்வதால் உயிரை விடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது.
கடந்த 20 வருடங்களாக அமெரிக்கர்களை ஆட்டிப்படைத்து வந்த இந்த கொடிய போதைப் பழக்கம் 2011-ல் மிக மோசமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது. 2011-ல் மட்டும் 41,340 பேர் உயிரிழந்தனர். 2015-ல் இது 52,404 ஆக அதிகரித்தது. 2016-ல் 59,000-லிருந்து 65,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
35 வயது முதல் 50 வயதிற்குட்பட்டோர், வலி நிவாரணத்திற்கு வழங்கப்படும் ஒப்பியாய்டுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் இறக்கின்றனர். 20 முதல் 30 வயதுடைய இளைஞர், இளம்பெண்கள் வலி நிவாரணம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக அதிகம் பயன்படுத்துவதால் மாண்டு போகின்றனர்.

மருத்துவர்களும் பொது நலன் குறித்த அக்கறையின்றி இளம் வயதினருக்கு ஓப்பியாய்டு வலி நிவாரணியை பரிந்துரைக்கின்றனர்; இதை உட்கொள்ளும் இளம் வயதினர் ஓப்பியாய்டுகளுக்கு அடிமைகளாகும் பட்சத்தில் அதிக தேவைகளுக்காக கருப்புச் சந்தையில் வாங்குகின்றனர். மருத்துவர்களால் இப்படி பரிந்துரைக்கப்படும் ஓப்பியாய்டுகள் கருப்புச் சந்தையில் மிகவும் அதிக விலை விற்கிறது. எனவே அத்தனை காசு கொடுத்து இதை வாங்க முடியாதவர்கள் அப்படியே ஹெராயின் உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.
ஓப்பியாய்டு உபயோகிப்பது குறித்து ஆராய்ச்சி மற்றும் கொள்கை அறிக்கை தயாரித்து வரும் மருத்துவர் டாக்டர் ஆண்ட்ரூ கலாண்டி கூறுகையில் “ஓப்பியாய்டு உபயோகத்தில் மருத்துவர்களின் பங்கு கணிசமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வலி நிவாரணிகளை அளவுக்கதிகமாகப் பரிந்துரைக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த ஒபாமா ஓரளவு முயற்சி செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார். ஆனால் இப்போது நடப்பது டிரம்ப்பின் ஆட்சி. தேர்தல் நேரத்தில் இதுகுறித்து வாய்ச்சவடால் அடித்த டிரம்ப் இப்போது இது பற்றி கண்டுகொள்வதேயில்லை.”
மேலும் அவர் கூறுகையில் “மருத்துவர்கள் ஓப்பியாய்டுகளை அதிகம் பரிந்துரைக்கக் காரணம் என்னவென்றால், மருந்து நிறுவனங்களின் பல்முனைப்பட்ட அழுத்தம் மற்றும் அதி சாமர்த்தியமாக மருத்துவர்களை அணுகி அவர்களைச் சம்மதிக்க வைக்கும் ஒரு தந்திரம் தான். இதை முதலில் செவ்வனே செய்தது பர்டியூ(Purdue Pharma) என்ற மருந்துக் கம்பெனியாகும். அதைத் தொடர்ந்து வந்த மற்ற நிறுவனங்களும் இந்த விற்பனை முறையையே கடைபிடித்து இப்போது அது இத்தனை உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறது.
வலி நிவாரணிகள் என்பவை, குறிப்பிட்ட உடல் உபாதைகளை கடந்து ஆரோக்கியம் மீண்டும் வரவழைப்பதற்குத்தான் என்ற நிலை மாறி  முதலாளித்துவ சமூகம் ஏற்படுத்தும் வலிகளை மறக்க அந்த நிவாரணிகளுக்கு பழகி இறுதியில் அமெரிக்கர்கள் உயிரையே விடுகின்றனர். ஆகவே இது ‘மருந்தின்’ பிரச்சினை அல்ல, ‘நோயின்’ பிரச்சினை!
செய்தி ஆதாரம் :

கருத்துகள் இல்லை: