சனி, 17 ஜூன், 2017

தடகளவீரர் மாரியப்பன் மீது கொலை சந்தேக குற்றச்சாட்டு ... சதீஷ்குமார் சேலத்தில் மர்ம மரணம் ..

இளைஞர் மரணம்! மாரியப்பனிடம்  விசாரணை!சேலத்தில் இளைஞர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பனிடம் விசாரணை நடத்தப்போவதாக சேலம் மாவட்ட போலீஸார் இன்று ஜூன் 17ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது ஒலிம்பிக் போட்டியில் பாராலிம்பிக் பிரிவில் தங்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனின் பெரியவடகம்பட்டி கிராமம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மூர்த்தி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய இளைய மகன் சதீஷ்குமார்(19). இவர் ஜூன் 3ஆம் தேதி பெரியவடகம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பைக் சாலையில் இருந்த மணலில் சறுக்கி விழுந்ததில், அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் கார் மீது மோதியுள்ளார். இதில் காரின் பின் பகுதி சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாரியப்பன் அவரது நண்பர் யுவராஜ் மற்றும் சிலர் சதீஷ்குமார் வீட்டுக்குச் சென்று, சதீஷ்குமார் தனது புதிய காரை சேதப்படுத்தியதற்காக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறி மிரட்டியதாகவும், யுவராஜ் சதீஷ்குமாரின் செல்போனை பிடுங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மிரட்டிச் சென்றதிலிருந்து சதீஷ்குமார் காணவில்லை என்று அவருடைய பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, ஜூன் 3ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் இளைஞர் சதீஷ்குமார் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமாரின் பெற்றோர்கள் தனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டிச் சென்றதையடுத்து இளைஞர் சதீஷ்குமார் ரயில்வே தண்டவாளம் அருகே இறந்துகிடப்பதால் மாரியப்பன் மற்றும் அவரின் நண்பர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று மரணமடைந்த இளைஞரின் பெற்றோர்கள் குற்றம்சாட்டுவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், ஜூன் 5ஆம் தேதி சதீஷ்குமாரின் மரணம் தொடர்பாக விசாரிக்க தீவட்டிப்பட்டி காவல்நிலையத்துக்கு மாரியப்பன் அழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அப்போது மாரியப்பன் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளிடம் கூறுகையில், இந்த விஷயத்தில் என்னுடைய பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறது. இனிவரும் போட்டிகளுக்காக நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்று கூறினார்.
மேலும், இது குறித்து மாரியப்பனின் பயிற்சியாளர் கூறியதாவது, ஒரு தடகள வீரரை தேவையில்லாமல் போலீஸ் விசாரணைக்கு அழைப்பது அவருடைய பயிற்சியையும் திறனையும் பாதிக்கும். சதீஷ்குமாரின் பெற்றோர்கள் மாரியப்பன் மீது முறையாக எந்த புகாரும் அளிக்காதபோது, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஒருவரை போலீஸ் விசாரணைக்கு அழைப்பது சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜூன் 17ஆம் தேதி சேலம் மாவட்ட காவல்துறையினர் இளைஞர் சதீஷ்குமார் மரணம் தொடர்பாக மாரியப்பனிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: