வெள்ளி, 14 ஏப்ரல், 2017

இரண்டாவது புத்தன் .. டாக்டர் அம்பேத்கார்

stanly rajan :இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால்
அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான்.
தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது.
அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான காலத்திலும் அவர் படித்தார், கல்வியோடு ஜோதிராவ் புலேவின் சீர்திருத்தங்களை உள்வாங்கி படித்தார், வறுமையோடும், அடக்குமுறை சமூகத்தோடும் அவர் போராடிய போராட்டம் கொஞ்சமல்ல, தாழ்த்தபட்டவன் ஒருவேளை உணவினை நன்றாக உண்டாலே பொறுக்கா சமூகம், அவனின் கல்வியினை எப்படி ஆதரிக்கும்?

அவரது பெயர் பீமாராவ் தான், ஆனால் தனக்கு கல்வி தந்து பராமரித்த பிராமண ஆசிரியரான அம்பேத்கர் என்பவரின் பெயரை தன் பெயரோடு இணைத்துகொண்டார், மகர் எனும் தாழ்த்தபட்ட சாதியில் பிறந்த பீமாராவினை, அவனது அறிவுகூர்மைக்காக அணைத்துகொண்ட பிராமண ஆசிரியருக்காக அந்த ஏழைமாணவன் காட்டிய நன்றி இது, பின்னாளில் அப்பெயர் சரித்திரமாக மாறிற்று.
புத்திகூர்மை அவருக்கு இயல்பாய் வாய்த்தது, கல்வியில் நம்பர் 1 என தடம்பதித்த அவரை, பரோடா மன்னர் ஆதரித்தார், படித்துமுடித்து தன் சமஸ்தானத்தில் 10 வருடபணி என்ற ஒப்பந்தத்தில் அவரை மேல்நாட்டுக்கு அனுப்பினார், அங்குதான் பீமாராவ் எனும் ஒடுக்ககட்ட சாதி மாணவன், அம்பேத்கர் எனும் மாமனிதனாக அஸ்திவாரம் இடபட்டது.
பெண்ணுரிமை, சாதி இல்லா சமூகம் , சாதி பார்க்கா மதம் என அவர் இந்திய சமூக கொடுமைகளை ஒப்பிட்டு தன் நாட்டு நிலையினை எண்ணியது அங்குதான், ஒடுக்கபட்ட‌ இனத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என அவர் தீர்மானித்ததும் அங்குதான்.
அத்தனை பட்டங்கள் பெற்று இந்தியா திரும்பினார், ரயில்நிலையத்தில் அவரை வரவேற்க ஆளில்லை, அவர் தங்க விடுதிகொடுப்பாரும் இல்லை. பாவபட்டு இடமளித்த பார்சி கூட அவர் தாழ்த்தபட்டவர் என தெரிந்து அவரை விரட்டினார். அந்தோ பரிதாபம் குளத்தில் கைகால் அலம்பும்போது கூட மேல்சாதியினர் அவரை அடித்துவிரட்டினர்.
மெத்தபடித்த அவருக்கே அந்நிலை என்றால், மற்ற மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?
அவர் போராடினார், இந்து மதம் சாதிகளின் கூடாரம் என அறுதியிட்டு சொன்னார். அலெக்ஸாண்டர் காலம் வரை அவ்வளவு ஏன் அரேபியரின், செங்கிஸ்கானின், தைமூரின் காலம் வரை இந்து என்ற வார்த்தை எங்கே வந்தது? இந்து என்பது அவர்கள் சூட்டிய பெயரே அன்றி அப்படி ஒரு மதம் இருந்ததா? என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
உங்கள் கோயிலுக்குள் நாங்கள் நுழையமுடியாது, உங்கள் வீதிகளில் நாங்கள் நடக்கமுடியாது, உங்கள் உடைகளை போல நாங்கள் அணியமுடியாது, உங்கள் கிணறு எமக்கு நீர் தராது, காரணம் எங்களை தீண்டினாலே பாவம் எனும் நிலையில், நீனும் நானும் மதத்தால் ஒன்று என்றால் எப்படி? என்ற அவரின் கேள்விக்கும் இன்றுவரை பதில் இல்லை.
இஸ்லாம், சீக்கியம், ஐரோப்பிய கிறிஸ்தவம் எல்லாம் சாதி இல்லா மதங்கள், இந்து மதம் அந்த வரிசையில் வராது, உண்மையில் இந்து மதம் என்பது சமூக உட்பிரிவுகளின் தொகுப்பு என அறுதியிட்டு சொன்னபொழுது, இந்து சமூகம் அவரை நச்சுபாம்பு என்றது.
சாதிகளை ஒழிக்க வேண்டுமானால், தீண்டாமையினை ஒழிக்கவேண்டுமானால் சட்டம் இயற்றினால் போதாது மாறாக மதசீர்திருத்தம் வேண்டும் என்ற அவரின் முழக்கம் சாதரணம் அல்ல.
தென்னாட்டில் படிக்காத அம்பேத்கரான பெரியார் இதனைத்தான் சொன்னார், இந்துமதம் சீர்திருத்தபடமால் சாதி ஒழியாது.
என்னதான் விலக்கினாலும், எத்தனை விளக்குகள் வைத்தாலும் வைரத்தின் ஒளி மங்காது, அப்படி தவிர்க்க முடியாத சக்தியான அம்பேத்கர் இந்தியாவின் தலைவர்களில் ஒருவராக அடையாளம் கொண்டார், வட்டமேசை மாநாடு உட்பட பல பெரும் மாநாடுகளில் பங்குபெற்றார்.
ஒரு குடியரசு நாட்டின் ஒரே அடையாளம் அந்நாட்டின் குடியரசுக்கான சட்டதிடங்கள், அவர் காலத்தில் அதனை எழுதும் தகுதி அம்பேத்கரை தவிர யாருக்கும் இல்லை. ஒரு தாழ்த்தபட்டவனிடம் சட்டமியற்ற சொல்லி சமத்த்துவம் பேணிய இந்தியா என்பதெல்லாம் சும்மா, தவிர்க்கமுடியா தகுதி இருந்ததால் அப்பணி அவரிடம் வந்தது.
உலகின் மிக சிறந்த ஜனநாயக சட்டமுள்ள நாடு என இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்குமாறு அச்சட்டம் அவரால்தான் எழுதபட்டது, இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கபட்டதில் ஒரு பொருளாதார நிபுணராக அவர் பங்கு பெரிது.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தபோதும் சாதி ஒழிய, இந்துமத சீர்திருத்த சட்டம் ஒன்று கொண்டுவந்தார், சமத்துவம் பேசிய நேருவால் கூட அதனை சட்டமாக்க முடியவில்லை, காரணம் நேருவினையே அசைத்துபார்க்கும் சாதிபாடு அன்று இருந்தது, பெரியார் காங்கிரசை ஒழிப்பேன் என கிளம்ப அதுதான் காரணம், அது பின்னாளிம் அம்பேத்கர் வெளியேறவும் வழிகோலிற்று.
புத்தம், ஜைனம்,சீக்கியம்,இஸ்லாம், கிறிஸ்தவம் என ஜாதி கொடுமை இல்லா மதமாக செல்லுமளவிற்கு அவர் மனம் நொந்தார், இதில் இஸ்லாம் அதிதீவிரமாக நாட்டை பிளந்து நின்றது, கிறிஸ்தவம் தொட்டால் இவன் மதமாற்றுக்காரன் என்பார்கள், சீக்கியம் சாதி இல்லை என சொன்னாலும் சில கட்டுப்பாடுகளை உடையது, மிக பொருத்தமான வழி புத்தனுடையது.
வரலாற்று ஆசிரியர் என்பதால் மிக தெளிவாக சொன்னார், புத்தன் இந்த மதத்தின் ஜாதிகொடுமைகளை எதிர்த்து தனிவழி கண்டான், அதில் வெற்றியும் பெற்றான். இந்தியா முழுக்க அல்ல கிழக்காசியா வரை அவன் கொண்டாடபட்டான், சங்கரரின் எழுச்சிக்கு முன்பு வரை சாதியில்லா புத்தமதம் இருந்திருக்கின்றது, நான் அந்த புரட்சிக்கு செல்கின்றேன் என பெரும் மக்களுடன் புத்தமதம் தழுவினார்,
பெரியார் இதனில் அதிரடி, கடவுளே இல்லை என சொல்லி கடுமையாக சாடினார். இருவருமே மறக்ககூடியவர்கள் அல்ல,
சாதி ஒழிப்பு எனும் இலக்கினை நோக்கி போராடியவர்கள்.
இப்படியாக தாழ்த்தபட்ட குலத்திலிருந்து வந்து இந்திய சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு என சகல துறைகளிலும் தனித்து நிற்கும் அம்பேத்கர் போல் இன்னொருவர் ஒரு காலமும் இந்நாட்டிற்கு சாத்தியமில்லை.
ஆனால் இந்தியா அரசோ, காங்கிரசோ அவ்வளவு ஏன் காங்கிரசின் எதிராக உருவான ஜனதாவோ அவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையினை கொடுத்தார்களா? என்றால் இல்லை. இவ்வளவிற்கும் காந்திக்கும், நேருவிற்கும் கொஞ்சமும் குறையாத இடம் அம்பேத்கருக்கு உண்டு.
ஆனால் அம்பேத்கரை தூக்கி பிடிக்க கூட வேண்டாம், அவர் பெயரினை உச்சரித்தாலே வட இந்தியாவில் காங்கிரசோ, ஜனதாவோ ஓரிடம் கூட வாங்கமுடியாது, இந்துக்களுக்கு அவர் நச்சுபாம்பு, மேல்சாதியினருக்கு தன் இருப்பினை ஆட்டிவைத்த ஒரு சாமானியன், அவன் பெருமை ஓங்ககூடாது, அவன் புகழ் வளர்தால் அது பெரும் ஆபத்து, பின் எப்படி விடுவார்கள்?
அவர் ஓரங்கட்டபட்டார், கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கபட்டார். காந்தி நேரு புகழ்பாடும் பாடதிட்டங்களில் ஒரு ஓரமாக இந்திய சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர் என ஒற்றை வரியோடு அவர் நிறுத்தபட்டார், அவருக்கான இடத்தினை இறுதிவரை காங்கிரஸ் அரசோ, ஜனதா அரசோ கொடுக்கவே இல்லை. இந்நாளைய பாஜ அரசும் அவ்வழியே.
காரணம் அம்பேத்கரினை உச்சரித்தால் அது வோட்டு வங்கியினை பாதிக்கும். அதுதான் இந்திய அரசியல், நாசமாய் போன வோட்டு அரசியல்.
1978ல் வட இந்தியாவில் ஒரு கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டவிருந்த விவகாரம் பெருங்கலவரத்தில் முடிந்து அந்த முயற்சி கைவிடபட்டது, இந்திய கல்லூரிக்கு அவர் பெயரினை விட பொருத்தமான பெயர் உண்டா? ஆனால் முடியவில்லை.
வராது வந்த மாமணியாக இந்திரா ராஜிவ் இல்லா காலத்தில், அத்வானி பாபர் மசூதியினை சுற்றி சுற்றி ஒப்பாரி வைத்த காலத்தில் ஆட்சிக்கு வந்த விபி சிங் அவர்கள் செய்யாததை செய்தார். அம்பேத்கருக்கு செய்ய வேண்டியதை செய்தார்.
1990ல்தான் இந்நாட்டிற்கு சட்டமியியற்றிய அம்மாமனிதனின் திருப்படம் பாராளுமன்றத்தில் திறக்கபட்டது, 1990ல் தால் அவருக்கு "பாரத ரத்னா" எனும் உயரிய விருதே வழங்கபட்டது, கவனியுங்கள் சுதந்திர போராளியாக, சட்ட வித்வானாக, ரிசர்வ் வங்கி உருவாக்கியவனாக, தாழ்த்தப்ட்ட மக்களுக்கு புரட்சியாளனாக உருவான அம்பேத்கருக்கு 1990ல் தான் பாரத ரத்னா.
ஆனால் உள்ளம் கொதிக்கும் உண்மை இது, கேமரா முன் ஒப்பனை இட்டு ஆடிய ஒரு கூத்துக்காரனுக்கு, நடிப்பினை தவிர ஏதும் தெரியா ஒரு அரசியலாதியான எம்ஜிஆருக்கு 1988ல் "பாரத ரத்னா" வழங்கபட்டது
இப்படியாக அம்மாமனிதனை இந்நாடு எப்படி எல்லாம் பழிவாங்கி இருக்கின்றது? எப்படி எல்லாம அவமானபடுத்தி இருக்கின்றது? அவன் செய்த பாவம் என்ன? ஒரே பாவம் தாழ்த்தப்ட்ட சாதியில் பிறந்தது, இன்னொரு பாவம் அதனை கண்டித்து போராடி புத்தன் வழியில் சென்றது.
விபி சிங் எனும் நல்ல பிரதமரால் அம்பேத்கருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது, பின் என்ன ஆனது? அம்பேத்காரினை கொண்டாடிய விபிசிங் அரசியிலலிருந்து விரட்டபட்டு அனாதையாய் மரித்தார். இதுதான் இந்தியாவின் மறைமுக ஆட்சி.
சாதி இல்லாமல் அரசியல் இல்லை, கொள்கை, தத்துவம், சேவை, ஊழல், கொள்ளை எல்லாம் சாதிக்கு பின்னால்தான்.
இதோ தமிழக தேர்தல் களம், என்னதான் காங்கிரஸ் தேசியம், கலைஞரின் திராவிடம், பாஜகவின் காவி இந்தியா, அன்புமணியின் வளர்ச்சி தமிழ்நாடு, சீமானின் தமிழ்தேசியம் என எத்தனை கொள்கைகள் இருந்தாலும் சாதி பார்க்காமல், சாதி பலமில்லாமல் வேட்பாளர் நிறுத்தபட்டிருக்கின்றாரா? என பாருங்கள், ம்ஹூம்.
இந்த சாதி வோட்டு அரசியல்தான் அம்பேத்கரினை விரட்டியது, போராடி பார்த்துவிட்டு அவர் புத்தனிடம் சரணடைந்தார். இன்று கிறிஸ்துவத்திலும் ஜாதி புகுந்துவிட்ட கொடும் காலமிது, புத்தம் அவரின் மிக சரியான தேர்வு என்பதை காலம் நிரூபித்துகொண்டிருக்கின்றது.
சாதி கொடுமையின் வலியில் உருவானார் அம்பேத்கர், அதனால் தான் அந்த சமூகத்தின் அடையாளமாக அவர் மாறிப்போனார். இன்றும் தாழ்த்தபட்ட மக்கள் தங்கள் அடையாளமாக அவரை கொண்டாடுகின்றனர், ஆனால் அவர் வழியில் அவர் போதனைகளை ஏற்றுகொள்கின்றார்களா என்பது பற்றி நாம் பேசகூடாது.
ஆனால் இப்படிபட்ட பெரும் ஆளுமையினையே டிஸ்யூ பேப்பராக தூக்கி எறியும் சாதி வன்மம், எப்படி சாமானியவர்களை விடும், பின் கவுரவ கொலைகள், ஆணவ கொலைகள், மர்ம தற்கொலைகள் இந்த தேசத்தில் நடப்பதில் என்ன ஆச்சரியம்?
நெடுநாளைக்கு பின் அம்பேத்கர் அரசியல் இயக்கமான கன்ஷிராமின் கட்சி பிரபலமானது, ஒரு கட்டத்தில் அது ஆட்சியும் பிடித்தது, அந்த கன்ஷிராம் ஒருவரை கன்னத்தில் அடித்து அது சர்ச்சையும் ஆனது, எல்லா இந்திய ஊடகமும் அவரை சாடின, நாகரீகமில்லாதவர் என்றெல்லாம் அவரை வசைபாடின.
ஒரு மேற்கத்திய ஊடகம் மட்டும் சொன்னது, எல்லா இந்திய ஊடகமும் அடிவாங்கியர் பக்க நியாயத்தினை முன் வைக்கும் மர்மமும், கன்சிராமிடம் ஒரு வார்த்தை கூட கேட்காத மர்மத்திற்கும் ஒரே விடைதான். சுதந்திர இந்தியாவில் இன்னமும் தாழ்த்தபட்டோருக்கு என்று ஒரு செய்திதாளோ, ஊடகமோ இல்லை.
இதுதான் இந்தியாவின் இன்னொரு முகம், என்னதான் இப்பாரத நாட்டினை நாம் அம்பேத்கர் போல நேசித்தாலும், சாதி எனும் அரக்கனை ஒழிப்பதில் இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டும், பெரியாரும், அம்பேத்கரும், ஜோதிராவ் புலேயும் சொன்னபடி இந்துமதத்தினை சீர்படுத்தாமல் ஜாதியினை ஒழிக்கமுடியாது.
ஆனால் நிலமை மகா விபரீதமாய் சென்றுவிட்டது, கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி தலைவிரித்தாடுகின்றது, கத்தோலிக்கர்களாவது போப் வந்து சொன்னால் பர்சீலிப்பார்கள், பிரிவினை வாதிகளுக்கு சாட்சாத் இயேசுநாதர்தான் வரவேண்டும், அடிக்கடி அவர்களுக்கு காக்காவலிப்பு போல் வரும் பரிசுத்த ஆவி, அந்நிய பாஷையில் சொன்னாலும் இவர்கள் சாதி ஒழிக்கமாட்டார்கள்.
மீறி சொன்னால் பைபிள் வேண்டுமானால் எறியபடுமே ஒழிய சாதி ஒழியாது, இது சமூக கூறு.
எப்படியும் சாதி முழுவதும் ஒழிய பன்னெடுங்காலம் ஆகலாம், குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகள் காலவோட்டத்தில் மறைந்தது போல, சாதியும் மறையும் வாய்ப்பு உண்டு, ஆனால் அரசியல் கலக்காது இருந்தால் சாத்தியம்.
இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள், கடந்த வருடம் அவர் பிறந்தநாளில் மஹாராஷ்டிர அரசு நல்ல அறிவிப்பினை செய்தது, லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீடு உண்டு, அதனை கடந்தவருடம் மஹாராஷ்டிர அரசாங்கம் ஏலத்தில் எடுத்து அம்பேத்கர் நினைவிடமாக மாற்றி இருக்கின்றது.
காரணம் அந்த வீட்டில் வசிக்கும்பொழுதுதான், இந்தியாவில் தனக்கு மிக பழக்கமாகிவிட்ட சாதி இழிவினினை மாற்றும் சாத்தியம் உண்டு என அம்பேத்கர் நம்பினார், லண்டன் வாழ்க்கை முறைபோல இந்தியாவிலும் சாத்தியம் என அவர் மனமார நம்பிக்கை பெற்ற போதிமரம் அது.
தமிழகத்து அக்கட்சிக்காரர்கள் விசித்திரமானவர்கள், கை வெட்டுவது, நாக்கு வெட்டுவது, பச்சை குத்துவது எல்லாம் அவர்கள் 1972லே தொடங்கிவிட்டார்கள், 1987ல் எம்ஜிஆர் மறையும் பொழுது அவரது உடலை பெரும் புரட்சியாளன் லெனின், மாவோ, ஹோசிமின் போல அழியாமல் காக்க வேண்டும், காரணம் இவர் "புரட்சி தலைவர்" என நன்கு ஒப்பனையிடபட்ட அந்த உடல்முன் போராட்டம் நடத்தியவர்கள்.
டெல்லி அரசு மட்டும் மறைமுகமாக எச்சரிக்காவிட்டால் இன்று அந்த வீபரீதம் நடந்திருக்கும், இன்று அப்படி பாதுகாக்கபட்ட சடலத்தை எடுத்துகொண்டு தெருதெருவாக வருவார்கள். அவர்கள் அப்படித்தான் . நல்ல வேளையாக அப்படி ஒரு ஆபத்து நமக்கு வரவில்லை.
எனினும் மஹாராஷ்டிர அரசினை பின்பற்றி அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனியினை வாங்கி, "பொன்மன செம்மல் புண் ஆற்றிய இடம்.." என்று அறிவிக்கும் எண்ண்ம வராததால் கொஞ்சம் நிம்மதி. சொல்லமுடியாது, எம்ஜிஆர் அம்பேத்கருக்கு முன்னமே "பாரத ரத்னா" பெற்ற தகுதி உள்ளவர் அல்லவா?
ஜெயலலிதா இருந்த அப்பல்லோ அறையினையும் விரைவில் அடையாளம் ஆக்கினாலும் ஆக்குவார்கள், அவர்கள் அப்படித்தான்
வட இந்தியாவில் இன்றும் சுலபமாக அம்பேத்கர் பெயரினை உச்சரிக்க முடியாது, கொலை கூட விழும், தமிழகத்தில் ஓரளவு அவரை பற்றி பேசமுடிகின்றது, விவாதிக்க முடிகின்றது என்றால் அதுதான் பெரியாரின் புரட்சி அல்லது பெரும் சாதனை.
பெரியார் தமிழருக்கு என்ன செய்தார்? என கேட்கும் பதர்கள் எல்லாம் இதனை உணரமாட்டா? இந்த கேள்விகேட்கும் உரிமையினை தொடங்கி வைத்தவரே பெரியார்தான், இல்லையென்றால் வடமாநிலங்களை விட தமிழகம் பின் தங்கி சென்றிருக்கும்.
கல்வி ஒரு மனிதனை உயர்த்தும், கல்வி ஒரு மனிதனை சிந்திக்க செய்யும், கல்வி சாதியினை ஒழிக்கும், கல்வி எந்த சாதிகாரனையும் உயர்த்தும் என இப்பாரத திருநாட்டில் கை காட்டவேண்டுமானால் இருவரினைத்தான் காட்ட முடியும், ஒருவர் அம்பேத்கர், இன்னொருவர் அப்துல் கலாம்.
இன்று அம்பேத்கரின் பிறந்த நாள், இந்திய சாதிகொடுமை எவ்வளவு கொடுமையானது என்பதனை காண, அம்பேத்கரின் வாழ்வும், அவரின் போராட்டமும் பெரும் சான்று.
நெடுங்காலம் தாழ்த்தி ஆட்சி பற்றி கவலைபடாமல் அவருக்கு அங்கீகாரம் வழங்கிய விபிசிங் இந்நாட்டில் ஜாதியின்றி அரசியல் இல்லை என்பதற்கு சுதந்திர இந்தியாவின் பெரும் கால கல்வெட்டு.
மூடபழக்கமும் கணக்கு வழக்கில்லா
காட்டுமிராண்டிதனமும் கொண்டிருந்த, மனிதனை மிருகத்தினை விட கீழான நிலையில் வைத்திருந்த சமூகத்தில் புரட்சி செய்து மாற்றம் கொடுத்தார் புத்தர்.
நவீன காலத்திலும் சாதி ஒழிக்க பாடுபட்ட ஒப்பற்ற போராளியும் , வன்முறை போதிக்கா அஹிம்சாவாதியும், பெரும் சிந்தனைவாதியுமான அம்பேத்கர் நிச்சயம் இந்தியாவின் இரண்டாம் புத்தன்.
அந்த புத்தனுக்கு , அவரது பிறந்த நாளில் புன்னகையோடு கூடிய வணக்கம், அம்பேத்கார் இந்தியாவின் மாமனிதன்  mukanool pathivu

கருத்துகள் இல்லை: