செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மேலும் ஆறு அமைச்சர்களிடம் வருமானவரி துறை அதிகாரிகள்...

செங்கோட்டையன் ரூ.13 கோடி, திண்டுக்கல் சீனிவாசன் ரூ.13 கோடி, தங்கமணி ரூ.12 கோடி, எஸ்.பி.வேலுமணி ரூ.15 கோடி, ஜெயக்குமார் ரூ. 11 கோடி, செல்லூர் ராஜு ரூ.48 லட்சம் பணப் பட்டுவாடா
அடுத்த அதிரடி  : சிக்கும்  6  அமைச்சர்கள்!
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப் பட்டுவாடா நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகிய மூவரிடமும் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை (நேற்று) விசாரணை நடத்தினார்கள்.
விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் 4 மணி நேரமும், சரத்குமாரிடம் 8 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு திருப்தி தரவில்லை. எனவே, விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகிய மூவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதுபோல விசாரணைக்கு வராமல் நீதிமன்றத்தை அணுகியுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமிக்கும் 2வது தடவையாக நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். இந்த நிலையில், பணப் பட்டுவாடா தொடர்பாக விசாரணை எல்லையை விரிவுபடுத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
விசாரணைக்குள் மேலும் சிலரைக் கொண்டுவந்தால்தான் இதில் முழு உண்மையையும் வெளியில் கொண்டுவர முடியும் என்று கருதுகிறார்கள். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கியதாகக் கூறப்படும் ரூ.89 கோடி பணத்தை அதிமுக அமைச்சர்களில் யார், யார் எவ்வளவு பணப் பட்டுவாடா செய்தனர் என்று வாட்ஸ் அப் மூலம் பட்டியல் வெளியானது. அதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜு ஆகிய 6 அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
செங்கோட்டையன் ரூ.13 கோடி, திண்டுக்கல் சீனிவாசன் ரூ.13 கோடி, தங்கமணி ரூ.12 கோடி, எஸ்.பி.வேலுமணி ரூ.15 கோடி, ஜெயக்குமார் ரூ. 11 கோடி, செல்லூர் ராஜு ரூ.48 லட்சம் பணப் பட்டுவாடா செய்ததாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக அமைச்சர்கள் இந்தப் பட்டியல் போலியாக திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறிவருகிறார்கள். என்றாலும் வருமான வரித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் 6 பேரையும் விசாரிக்கத் தயாராகி வருகின்றனர். அதன்படி, இந்த 6 அமைச்சர்களுக்கும் வருமான வரித்துறை விரைவில் நோட்டீஸ் அனுப்பவுள்ளது.
6 அமைச்சர்களிடமும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெறும். மேலும் இவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் புதிய தகவல்கள் கிடைக்கும் என்று வருமான வரித்துறையினர் எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர்கள் தவிர, அதிமுக எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பழனியப்பன் ஆகியோரது பெயரும் பணப் பட்டுவாடா பட்டியலில் உள்ளது. அதுபோல, நிர்வாகிகள் சுதா பரமசிவம், பாப்புலர் முத்தையா உள்பட சிலரது பெயரும் உள்ளது. இவர்களிடமும் விசாரிக்க அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள். வருமான வரித்துறையின் அடுத்தடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகள் அதிமுக நிர்வாகிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: