சனி, 15 ஏப்ரல், 2017

BBC :வழக்கு பதிவு .. 3 அதிமுக அமைச்சர்கள்.. ,தளவாய் சுந்தரம் உட்பட ...

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் மூவர் உள்பட ஐந்து பேர் மீது சென்னைக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.;இந்த மாதம் ஏழாம் தேதியன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது சோதனை நடத்தப்பட்ட அவரது வீட்டிற்குள் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தில்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டார் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.
மேலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது விஜயபாஸ்கரின் ஓட்டுனர் உதயகுமார், சில ஆவணங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவுக்கு வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் முரளி கடிதம் ஒன்றை எழுதினார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தில்லிக்கான சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், விஜய பாஸ்கரின் ஓட்டுனர் உதயகுமார் ஆகியோர் மீது சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 183, 186, 189, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை இந்த வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.

கருத்துகள் இல்லை: