வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தூத்துக்குடி பெண் இலங்கையில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்தார்

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து 3 குழந்தைகளுடன், படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இலங்கை, கொழும்பு அருகே பண்டாரநாயகபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்,35. இவர், துாத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் உறவினர் வீட்டிற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தார். அப்போது உறவினர் மகளான தங்கம்,26, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு லத்திகா,6, இஸ்மிகா,5, சிபிசன்,1, என 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 2013ல் இலங்கை சென்றனர். ஓராண்டுக்கு முன் விக்னேஷ்வரன் வேலை தேடி சவுதிஅரேபியா சென்றார். தனது குழந்தைகளுடன் தங்கம் மாமியார், மாமனார் ஆதரவில் கொழும்பில் தங்கி இருந்தார். உணவு கொடுக்காமல் தங்கத்தையும், குழந்தைகளையும் அவர்கள் கொடுமைப்படுத்தினர்.
இதையடுத்து தங்கம் குழந்தைகளுடன் இலங்கை, மன்னாரில் இருந்து கள்ளப்படகில் புறப்பட்டார். இலங்கை படகோட்டிகள் அவர்களை தனுஷ்கோடி அருகே 3ம் மணல் தீடையில் இறக்கி விட்டுச் சென்றனர். மண்டபம் மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் அவர்களை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தங்கம் கூறுகையில், ''எனது கணவர் வெளிநாடு சென்ற பின் மாமியார் உள்ளிட்டோர் எங்களை கொடுமைப்படுத்தினர். என் நகையை விற்று, படகுக்கு ஒரு லட்சம் ரூபாய் (இலங்கை பணம்) கூலி கொடுத்து தனுஷ்கோடி வந்தேன்,'' என்றார்.  தினமலர்

கருத்துகள் இல்லை: