வியாழன், 13 ஏப்ரல், 2017

மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெற்றி பாதையில் .... மாமூல் போலீசும் டாஸ்மாக் ...

Truth behind protests against TASMACஉச்ச நீதிமன்றத்தில் சமீபத்திய அதிரடி உத்தரவுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் இருந்த 6000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் மூடப்பட்டுவிட்டன. காரணம் இவை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அல்லது அவற்றுக்கு அருகாமையில் அமைந்திருந்ததுதான்.. சாலையில் வெகு எளிதில் மது கிடைப்பதால், வாகன ஓட்டிகள் வாங்கிக் குடித்துவிட்டு ஏற்படுத்தும் விபத்துகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது.
இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். மதுவை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் பாண்டிச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 25 மீட்டருக்கு ஒரு மதுக்கடை இருக்கும். ஆனால் இப்போது நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டதால் அங்கெல்லாம் வெறிச்சோடிவிட்டன.

 மூடப்பட்ட மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளுக்கு அரை கிலோமீட்டர் தாண்டி திறந்து கொள்ள எந்தத் தடையும் இல்லை. மற்ற மாநிலங்கள் சத்தமின்றி புதிய இடங்களில் மதுக்கடைகளைத் திறந்த விற்பனையைத் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில்தான் ஏக சலசலப்பு. புதிய இடங்களில் மதுக்கடைகள் திறக்க ஏக எதிர்ப்பு, போராட்டங்கள், போலீசாருடன் மோதல்கள், போலீசார் தாக்குதல் என தினமும் பரபரப்பு தொடர்கிறது. இன்னொரு பக்கம், தினமும் மாலை வேளைகளில் இருக்கிற ஓரிரு மதுக்கடைகள் முன்பாக அரை கிலோமீட்டர் நீளத்துக்காவது குடிகாரர்கள் க்யூ நீண்டு கொண்டே போகிறது.

ஒரு பக்கம் போராட்டம்... மறுபக்கம் மதுவுக்காக நீ....ண்ட க்யூ. இந்தப் போராட்டங்களின் பின்னணி என்ன?
நிச்சயம் அரசியல்தான். கடந்த ஆண்டு மதுவுக்கு எதிராகப் போராடி உயிரை விட்டார் சசி பெருமாள். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தன்னெழுச்சியாக கிளர்ந்த மது ஒழிப்புப் போராட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரித்தன. ஓட்டரசியல்தான் என்றாலும் போராட்டத்தின் நோக்கம் நல்லது என்பதால் இதுகுறித்து பெரிதாக விமர்சனங்கள் எழவில்லை.

அதன் விளைவுதான் 500 மதுக்கடைகளை மூடுவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட பேரமைதிக்குப் போய்விட்ட மதுவுக்கு எதிரான போராட்டம். இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் மதுவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த முறை அரசியல் கட்சிகள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளவில்லை. மாறாக பெண்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். குடியின் கொடுமையை அதைக் குடிப்பவர்களை விட அதிகம் அனுபவிப்பவர்கள் குடும்பப் பெண்கள் என்பதால் அவர்களையே முன்னிறுத்துகின்றன அரசியல் கட்சிகள்.

அதில் திருப்பூரில் நடந்தது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தாலும், கடைசி பலன் மக்களுக்கே கிடைத்து வருகிறது. எங்கெல்லாம் போராட்டங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் வேறு வழியின்றி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடிவிட்டு வேறு இடங்களைத் தேடுகின்றனர் அதிகாரிகள். இந்தப் போராட்டங்களின் பின்னணி ஓட்டரசியல்தான் என்றாலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட அந்த பின்னணி காரணமாக இருந்தால்... 'ஓட்டரசியலும் நல்லதுதானே!'  tamiloneindia

கருத்துகள் இல்லை: