புதன், 12 ஏப்ரல், 2017

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியரசு கடுமையான எச்சரிக்கை .. கடுமையான விளைவுகளை ...

விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்ப்பார்த்து டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு கடுமையாக மிரட்டியுள்ளது. பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 29-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் இந்த போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். பாடைகட்டி போராட்டம், தழைகீழாக நிற்கும் போராட்டம், பாம்புக்கறி, எலிக்கறி தின்னும் போராட்டம், அரைநிர்வாண போராட்டம் என்று தினம் ஒரு வடிவத்தில் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளாததால் முழு நிர்வாண போராட்டமே நடத்தி இந்தியாவையே அதிர வைத்தனர் விவசாயிகள்.
திருச்சி சிவா எம்.பி. விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் தந்து வந்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. 29வது நாளான நேற்று மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்திய விவசாயிகளை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்துப் பேசினார்.
இந்த சந்திப்பில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், நாளை (இன்று 12.4.2017) நல்ல முடிவை சொல்கிறேன் என்று அனுப்பிவைத்தார். நல்ல முடிவு வரும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வுகிடக்கும் என்று நம்பிக்கையோடு திரும்பியவர்களுக்கு நள்ளிரவில் அதிர்ச்சி தரும்படியாக மத்திய அரசிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது.
போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு ஈவு இரக்கமில்லாமல் கடுமையாக எச்சரித்துள்ளதை நினைத்து அதிர்ந்து போயிருக்கின்றனர் விவசாயிகள்.    நக்கீரன்

கருத்துகள் இல்லை: