வியாழன், 1 செப்டம்பர், 2016

தமிழகத்தில் சசிகலா புஷ்பாவுக்கு அதி உச்ச பாதுகாப்பு ஏன்? 200 காவலர்கள் புடைசூழ....

கி.மகாராஜன்> உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு விசாரணையில் ஆஜராக வந்த அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, அதிகபட்ச பாதுகாப்பு அளித்தது தொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராகினர். இவருக்கு எதிராக போராட்டம் நடத்த அதிமுகவினர் தயாராக இருந்தனர். சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஏதாவது நடைபெற்றால் தமிழக அரசுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி நீதிமன்றத்தின் அவப்பெயருக்கு ஆளாக வேண் டியது வரும் என்பதால், யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என அதிமுகவின ருக்கு மேலிடத்தில் இருந்து உத்தர விடப்பட்டது.

மேலும் மாற்றுக் கட்சியினர் எதையாவது செய்து அதிமுக-வினர் மீது பழி சுமத்த வாய்ப்பு இருப்பதாகவும், அசம்பாவித சம்பவம் நடைபெற்றால் அதை வைத்து சசிகலா புஷ்பா அனுதாபம் தேடுவதற்கு வாய்ப்பும் உள்ளது எனவும் உளவுத்துறையிடம் இருந்து தகவல்கள் வந்ததால் அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் காலையில் சசிகலா புஷ்பா மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கியது முதல் இரவில் விமானத்தில் திரும்பிச் செல்வது வரை அவருக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு அளித்தனர். விமான நிலையம் முதல் உயர் நீதிமன்ற கிளை வரை வழிநெடுகிலும் 200 போலீஸார் நிறுத்தப்பட்டனர்.
சசிகலா புஷ்பா வாகனத்தின் முன்பு பைலட் வாகனம் ஒன்றும், பின்னால் 2 பாதுகாப்பு வாகன ங்களும் சென்றன. அவரது வாகனம் சாலையில் இடையூறு இல்லாமல் செல்ல போக்குவரத்து போலீஸார் கூடவே சென்றனர்.
போலீஸ் தவிர்த்து கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் சசிகலா புஷ்பா பாதுகாப்புக்காக 30-க்கும் மேற்பட்ட கார்களில் வந்திருந்தனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த அதிமுக கரைவேஷ்டி கட்டியவர்களையும் போலீஸார் விசாரித்தனர். அவர்கள் வேறு வழக்குக்காக வந்தவர்கள் என்பதை உறுதி செய்து விடுவித்தனர். நீதிமன்ற கட்டிடத்தில் அவருக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். மிகவும் முக்கியப் பிரமுகருக்கு அளிக்கப்படும் அதிகபட்ச பாதுகாப்பை சசிகலாவுக்கு மதுரை போலீஸார் வழங்கினர்.
hindu

கருத்துகள் இல்லை: