புதன், 31 ஆகஸ்ட், 2016

ஒரு பறப்பையன் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கிறான், உன்னால முடியாதா? ஒரு ஆசிரியனின் சாதிவெறி!

thetimestamil.com :கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமையை கடைப்பிடிப்பதாக இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கல்வி துறை அதிகாரிகளிடம் ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவர்கள் பேசினர்.
வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆசிரியர் தலித் மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்குவதாகவும் டியூசனும்கூட எம்பிசி (வன்னியர்) மாணவர்களுக்கு எஸ்சி மாணவர்களுக்கு என தனித்தனியாக நடத்துவதாகவும் கூறினர்.

பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்வது, ஆசிரியர் உண்ட தட்டை கழுவது, ஆசிரியர்களின் பைகளை சுமப்பது போன்ற ஒடுக்குமுறைகளையும் அந்த ஆசிரியர் ஏவியதாக அவர்கள் கூறினர். ஆசிரியர் ஆறுமுகம் மாணவர்களை சாதிப் பேர் சொல்லியே தலித் மாணவர்களை அழைத்திருக்கிறார்.
இதில் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. “சந்துரு அண்ணன் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினதுக்கு, ‘ஒரு பறப்பையன் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கிறான், உன்னால முடியாதா?’ கிளாஸ்ல எல்லோர் முன்னாடியும் அந்த சார் இப்படி கேட்கிறாரு. நாங்க என்ன அவ்வளவு கேவலமா போயிட்டோம்? அவர் மேல நடவடிக்கை எடுத்தே ஆகணும். இது இன்னையோட முடியணும்? எங்களுக்கு டிசி கொடுக்கட்டும் பார்க்கலாம். நான் இப்ப ஒன்பதாவது படிக்கிறேன். இப்ப எனக்கு டிசி கொடுக்கட்டும் இப்ப என்னால டென்த் எக்ஸாம் எழுதமுடியும். இந்த ஸ்கூல்ல படிக்கிற மத்தவங்க சார்பா இதைச் சொல்றேன். அங்குச்செட்டிப்பாளையம்னு கேட்டா அவங்களுக்குப் பயம் வரணும். இந்த உலகத்துல யாரும் எஸ்சிக்கு எதிரா பேசக்கூடாது” என்று அந்த மாணவி பேசினார்.
மேலும் அவர், “எங்களுக்கு ஏபிசிடிகூட தெரியாதுன்னு சொல்றாங்க. நாலு வருசமா இங்க அவங்க டீச்சரா இருக்காங்க. அவங்களால் அதைக் கூட ஒழுங்கா சொல்லித் தர முடியலையா?” என்றவர், நாங்க என்ன இங்க குப்பை அள்ளவா வந்தோம்? ஆமாம் நாங்க செஞ்சோம். ஆனால் எங்களுக்கு எப்பவும் 3500 ரூபாய் சம்பளத்தை கொடுக்கலையே?  அவங்களே தான எடுத்துக்கிறாங்க. தலித் ஸ்டூடண்ட் மட்டும்தான் டாய்லெட் க்ளீன் பண்ண கூப்பிடுவாங்க. எங்கக்கூட யாரையும் பேசக்கூடாதுன்னு சொல்வாங்க. அவங்க எப்படி எங்களை பற பசங்கன்னு சொல்லலாம்?” என்றும் ஆவேசமாக அந்த மாணவி கேட்டார்.
பெற்றோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றனர். கல்வி அதிகாரிகள் முன்னிலையில் முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர். இந்நிலையில் அந்த இரு ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோ இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன…
சமூக செயல்பாட்டாளர் ஜோஷ்வா ஐசக் ஆசாத் முகநூல் பதிவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.

கருத்துகள் இல்லை: