புதன், 31 ஆகஸ்ட், 2016

ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இராணி அரசு கஜானாவில் எட்டு லட்சத்துக்கு சாரி வாங்க முயற்சி .. மறுத்து பெண் அதிகார்


மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இரானி. இதற்குமுன் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். வழக்கமாக, ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர். இந்தமுறை புடவை வாங்கிய விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளாகி இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. சமீபத்தில், தனது துறைக்குக் கீழ்வரும் கைவினைத் தொழிற்சாலை ஆய்வு ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கு எட்டு லட்சம் மதிப்பிலான புடவைகள் மற்றும் விநாயகர் சிலையை வாங்கி இருக்கிறார். அதற்கான பில்லை தனது உதவியாளர் மூலம் தனது துறைச் செயலாளருக்கு அனுப்பி, கட்டச்சொல்லி இருக்கிறார்.


ஜவுளித் துறை செயலாளராக இருப்பவர் ராஷ்மி வர்மா. இந்தத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட்டதில் இருந்து, இவருக்கும் அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தமாம். கடந்த ஜூன் மாதத்தில் அமைச்சரோடு கலந்து ஆலோசிக்காமல் வர்மா தன்னிச்சையாகத் துறை சார்ந்த முடிவெடுத்துவிட்டார் என்பதில் இருவருக்கும் முட்டல் மோதல் ஆரம்பித்து இருக்கிறது. அதோடு, இன்னொரு விவகாரத்தில் ஸ்மிருதி இரானி, வர்மாவை சக அதிகாரிகள் முன்னிலையில் திட்டி இருக்கிறார்.

தனக்கு அனுப்பப்பட்ட பில்லைக் கண்டு டென்ஷனான வர்மா, ‘‘இந்த பில்லை அரசு செலுத்த முடியாது. அமைச்சர் தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வாங்கிய பொருட்களுக்கு அரசு பணம் செலுத்தத் தேவையில்லை’’ என்று சொல்லி இருக்கிறார். இதனால், பயங்கர கோபமடைந்திருக்கிறாராம் ஸ்மிருதி இரானி. இது சம்பந்தமாகப் பல புகார்களை அனுப்பியும் வர்மா மீது நடவடிக்கை இல்லை. அதற்குக் காரணம், உள்துறைச் செயலர் பி.கே.சின்ஹாவின் தங்கைதான் இந்த ராஷ்மி வர்மா.

இந்த விவகாரங்கள் தற்போது பிரதமர் நரேந்திரமோடியின் காதுகளுக்கு எட்டி இருக்கிறது. இந்த விஷயத்தில் அவரது நடவடிக்கை எப்படி இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இப்படி ஒரு விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘‘அமைச்சர் பார்க்கும்படி உங்கள் துணிகளைக் காயவைக்காதீர்கள்’’ என்றும், ‘‘இந்த விவகாரம் மட்டும் உண்மை என்றால் ராஜினாமா செய்யவேண்டும்’’ என்றும் சமூக வலைதளங்களில் அவரைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், அது தொடர்பாக எந்த ஒரு பில்லும் ஜவுளித்துறைக்கு அனுப்படவில்லை என்றும் மத்திய அரசின் கைவினைப்பொருட்கள் நிறுவனம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பான சர்ச்சைகள்:

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை பற்றி அவையில் பேசும்போது தவறான தகவல்களைக் கூறிச் சர்ச்சைகளை ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைகழக விவகாரத்திலும் சரியாகச் செயல்படத் தவறிவிட்டார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாகதான் பி.ஏ படித்திருப்பதாக 2004 தேர்தலில் குறிப்பிட்டு இருந்தார். 2014 தேர்தலில் பி.காம் படித்திருப்பதாக உறுதிமொழி விண்ணப்பத்தில் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதோடு வெளிநாட்டில் இருக்கும் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததும், பொய் என்று சுட்டிக்காட்டிய பிறகு, அது ஆறு நாள் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டதற்கான சான்றிதழ் என்று சமாளித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோல சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்துக்குத் தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
விகடன்.com
- சமரன்

கருத்துகள் இல்லை: