புதன், 31 ஆகஸ்ட், 2016

ஞானதேசிகன் சஸ்பெண்ட்: கூடுகிறது ஐ.ஏ.எஸ். சங்கம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டமை அதிகாரிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆகிய இரு அதிகாரிகள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதிரடியாக நடந்த இந்த சஸ்பெண்டுகள் பல கேள்விகளை எழுப்பியநிலையில் கேள்வியோ, விசாரணைகளோ இல்லாமல் அதிரடியாக இப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நடவடிக்கை இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேள்வி கேட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு நாளை கூடவுள்ளது.

2014ஆம் ஆண்டு, மின்சார வாரியத்தின் தலைவராக இருந்தவர் கு.ஞானதேசிகன். அந்தப் பதவியிலிருந்து அவர் திடீரென மாற்றப்பட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் முக்கியமானவராகச் செயல்பட்டதும் ஞானதேசிகன்தான். கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தில் சென்னை சிக்கித்தவித்தபோதுதான் ஞானதேசிகனுக்கு சிக்கல் ஏற்பட்டது. மழைகுறித்த முன்னேற்பாடுகளை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் ஜெயலலிதா அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஞானதேசிகன், தலைமைச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடித்துவந்தார். கடந்த மே மாதம், மீண்டும் அதிமுக அரசு ஆட்சி அமைத்ததும் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் எம்.டி.யாக நியமிக்கப்பட்டார். தற்போது, ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாகச் செயல்படுபவர் என வைகுண்டராஜன்மீது கோபத்தில்தான் இருந்தார் ஜெயலலிதா. இந்த நேரத்தில் வைகுண்டராஜனுக்கு எதிராக வந்த ஒரு பைலில், ஞானதேசிகன் கையெழுத்துப் போடவில்லை என்று சொல்கிறார்கள். இதெல்லாம் முதல்வர் கவனத்துக்குப் போனபிறகுதான் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஏற்கனவே, ஞானதேசிகன் மின் வாரிய சேர்மேனாக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோடு இணைத்து சில குற்றச்சாட்டுகளும் எழுந்தன. தற்போது, அதையெல்லாம் தூசுதட்டி எடுக்கவும் உத்தரவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படி அரசியல் காரணங்களுக்காக ஒரு நேர்மையான அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளநிலையில் நாளை நடைபெறவிருக்கும் ஐ.ஏ.எஸ். அகாடமி பொதுக்குழுவுக்கு அதிருப்தியடைந்திருக்கும் அதிகாரிகள் வந்து தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவார்கள் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: