வியாழன், 1 செப்டம்பர், 2016

நக்கீரன் மீது ஜெ. அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் தடை

கடந்த 2011ல் ஜெ. ஆட்சிக்கு வந்தது முதல் நக்கீரன் மீது தொடர்ச்சியாக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 2016ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் நக்கீரன் மீது முதல் அவதூறு வழக்கு போடப்பட்டு மொத்தம் நக்கீரன் ஆசிரியர் மற்றும் நிருபர்கள் மீது 18 அவதூறு வழக்குகள் இதுவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 499வது பிரிவில் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சில விலக்குகளை மீறி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 199 (2)ன் படி நக்கீரன் ஆசிரியர் மற்றும் நிருபர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறது. இதில் ஒரு செய்திக்காக நக்கீரனின் அனைத்து மாவட்ட நிருபர்கள் மொத்தம் 20 பேர் மீதும் வழக்கு தொடர்ந்ததும், மற்றொரு செய்திக்காக சுற்றுலாத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் வேறொரு துறையைச் சேர்ந்த அதிகாரி வழக்கு தொடர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே செய்திக்காக முதல் அமைச்சர் தனி வழக்காகவும், தலைமைச் செயலாளர் தனி வழக்காகவும், அதிகாரிகள் தனி வழக்காகவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 18 வழக்குகளும் செல்லாது என்று அறிவிக்கக் கோரி நக்கீரன் ஆசிரியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. நக்கீரன் சார்பில் வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நக்கீரன் மீதான 18 வழக்குகளுக்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: