திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சயாம்-பர்மா மரண ரயில் பாதை: வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற பிரக்ஞையே நமக்கு இல்லை!

thetimestamil.com  :ஒரு பக்கம் சேரன் ஈழத்தமிழர்களை குற்றம் சாட்டுகிறார், இன்னொரு பக்கம் சேரனை எல்லாரும் விமர்சிக்கிறார்கள். வெகுஜன சினிமா சார்ந்துதான் எல்லா வினைகளும், எதிர்வினைகளும் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை சயாம்-பர்மா மரண ரயில் பாதை என்றொரு ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது. குறிஞ்சி வேந்தன் இயக்கிய இந்த படம் பெரும் வரலாற்று ஆவணம். ஆனால் அது படமாக்கப்பட்ட விதத்தில் எனக்கு விமர்சனங்கள் இருக்கிறது. அது இப்போது இந்த கட்டுரைக்கு தேவையற்றது. இன்று காலை மாலனின் ஒரு பதிவை படிக்கும்போது சயாம்-பர்மா மரண ரயில்பாதை சார்ந்த ஒரு ஆங்கிலப் படைப்பிற்கு புக்கர் பரிசு கிடைத்திருப்பதையும், ஆனால் இதே அடிப்படையில் மலேசிய எழுத்தாளர் சண்முகம் எழுதிய படைப்பு கண்டுகொள்ளப்படாமல் கிடக்கிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நேற்றைய படத்தின் வாயிலாக சண்முகத்தின் படைப்பு பற்றி கூட அறிந்து கொள்ள முடிந்தது. நமக்கு வரலாறு மீதோ, ஆவணங்கள் மீதோ கிஞ்சித்தும் அக்கறை கிடையாது. இதே சயாம்-பர்மா பற்றி பர்மா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் வரலாற்று பதிவுகள் ஆவணங்களாக கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில், தமிழத்தில் அது குறித்த ஆவணங்களே இல்லை. இத்தனைக்கும் இந்த மரண ரயில் பாதை திட்டத்தில் அதிகம் உயிரிழந்தது தமிழர்கள். ஆனால் நாம் எப்போதும் போல், உலகின் எட்டு திசைகளும் தமிழன் விரவிக் கிடக்கிறான், உலகை தமிழன் விரைவில் ஆள்வான், தமிழே உலகின் தொல்குடி என்று பழம்பெருமை பேசி நிகழ்கால ஆவணங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்.
நேற்றைய திரையிடல் குறித்தும் கூட இங்கே அதிகம் ஆவணங்கள் இல்லை. ஆனால் சேரன் ஈழத்தமிழர் பிரச்சனை என்று கூகிளில் ஆய்வு செய்தால் ஆயிரக்கணக்கான பதிவுகள் வருகிறது. அதுவும் தேவைதான். ஆனால் அதே நேரத்தில் இத்தகைய வரலாற்றுப் பதிவுகளையும் நண்பர்கள் கொஞ்சம் கவனித்தால் நல்லது.
ஆனால் அதற்கு களத்திற்கு வர வேண்டும். முகநூலில் இருந்து மட்டுமே எல்லாவற்றையும் கவனித்து எழுதிக் கொண்டிருந்தால் பல வரலாற்று பிழைகளை நாம் இந்த காலத்திலும் செய்ய நேரிடும். வரலாற்றை பதிவு செய்யவேண்டும், ஆவணங்களை உருவாக்க வேண்டும், அவற்றை பாதுகாக்க வேண்டும் என்கிற பிரக்ஞை அற்ற சூடு சொரணை இல்லாத ஒரு தேசத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
மோ. அருண், திரை செயல்பாட்டாளர்; படச்சுருள் இதழின் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை: