வியாழன், 22 மே, 2014

அவதூறு வழக்கில் கேஜரிவாலுக்கு 2 நாள் சிறை

பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜாமீன்
பத்திரம் அளிக்க மறுத்ததால், முன்னாள் தில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை இரு தினங்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
ஊழல் செய்ததாகக் கூறப்படும் முக்கிய அரசியல் தலைவர்களின் நாடு தழுவிய பட்டியலை, தில்லி முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் கடந்த ஜனவரி 31லிஇல் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வெளியிட்டார். அதில், பாஜகவின் மூத்த தலைவர் நிதின் கட்கரி பெயரும் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கை நிதின் கட்கரி தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது மே 21லிஆம் தேதி நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜராகுமாறு தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான கேஜரிவாலை ஜாமீனில் விடுவிக்க ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒருநபர் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது, "இந்த மனு அரசியல் தன்மை கொண்டது. கொள்கை ரீதியில் ஜாமீன் பத்திரம் அளிக்க விரும்பவில்லை. அதற்கு மாறாக இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணையிலும் ஆஜராவதாக உறுதியளிக்கிறேன்' என்று கேஜரிவால் கூறினார்.
அதற்கு நீதிபதி, "நீங்கள் ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதியாக உள்ளீர்கள். அதனால், நீங்கள் ஆம் ஆத்மி (சாமான்ய மனிதன்) போன்று நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் விதிகள் ஒன்றாகத்தான் இருக்கும். ஜாமீன் பத்திரம் வழங்குவதில் என்ன பிரச்னை உள்ளது? உங்களிடம் வேறு மாதிரியாக நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, "நான் ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறேன். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அதனால், நான் ஜாமீன் கோரவில்லை' என்று அரவிந்த் கேஜரிவால் கூறினார்.
இதையடுத்து, "குற்றம் சாட்டப்பட்ட நபர் (கேஜரிவால்), ஜாமீன் பத்திரம் அல்லது தனிநபர் ஜாமீன் பத்திரம்கூட அளிக்க மறுப்பதால், நீதிமன்றக் காவலுக்கு அனுப்புமாறு உத்தரவிடப்படுகிறது.
அவரை மீண்டும் மே 23லிஆம் தேதி நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்த வேண்டும்' என்று நீதிபதி கோமதி மனோச்சா உத்தரவில் தெரிவித்தார்.
மேலும், நீதிபதியின் மூன்று பக்க உத்தரவில், "மனுதாரர்களின் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் பொருட்டு நீதிமன்றத்தின் நடைமுறைகளை காற்றில் பறக்க விட முடியாது. சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை மீறும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கில் தொடர்புடையவர் உள்நோக்கத்துடன் ஒரு கோரிக்கையை முன்வைக்கும்போது அதை வேடிக்கை பார்க்கும் விதமாக நீதிமன்றம் செயல்பட முடியாது' என்று அதில் தெரிவித்தார்.
நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, போலீஸார் கேஜரிவாலை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திஹார் சிறையில் அடைத்தனர். முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் நிதின் கட்கரி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிங்கி ஆனந்த், கேஜரிவாலுக்கு ஜாமீன் அளிக்க எதிர்ப்புத் தெரிவித்தார் dinamani.com

கருத்துகள் இல்லை: