வியாழன், 31 அக்டோபர், 2013

Thenee.com : ஈழத்தமிழருக்கு ஜனநாயகத்தை பற்றி ஒரு ஐடியாவும் கிடையாது ! எதற்கும் பிரச்சனைதான் ?

ஜனநாயக விரோதமும் தமிழர்களும்‏;-வடபுலத்தான் 
தமிழர்களுக்கும் ஜனநாயகத்துக்கும் வெகு தூரம். சில பழக்கங்கள் சிலருக்குச் சுட்டுப்போட்டாலும் வருவதில்லை. அதைப்போல ஜனநாயகம் என்ற விசயம் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு வரவே வராது. அவர்களுக்கு அது புரியவும் மாட்டுது. >இன்று தமிழர்கள் உலகெங்கும் சிதறிப் பரந்து வாழ்கிறார்கள். >இப்படி அவர்கள் சிதறி வாழவேண்டியேற்பட்டதே ஜனநாயகமின்மையால்தான். ;ஒன்று கொழும்பு அரசியற் தலைமையின் ஜனநாயக விரோதப்போக்கினால் ஏற்பட்டது. மற்றது தமிழ்ச் சூழலில் நிலவும் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளின் விளைவினால். ஆகவே உலகத்திசையெங்கும் அகதிகளாகச் சிதறிப் பல்கிப் பெருகியுள்ள தமிழ்க்குடிக்கு இன்று ஜனநாயகத்தின் அருமை பெருமையெல்லாம் தெரிந்திருக்க வேணும். உள்நாட்டில் நிலவிய ஜனநாயக மறுப்பின் தீமையைப் பற்றியும் தற்பொழுது தாம் வாழுகின்ற நாடுகளில் நிலவுகின்ற ஜனநாயக உரிமைகளின் நன்மை பற்றியும் புலம்பெயர்ந்திருக்கிறவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர்களிற் பலர் நடைமுறையில் ஜனநாயக விரோதிகளாக அல்லது ஜனநாயக மறுப்பாளர்களாகவே உள்ளனர். இதற்கு நல்ல உதாரணம் அவர்களால் நடத்தப்படுகின்ற இணையத்தளங்களும் ஊடகங்களும். மேலும் உதாரணம் வேண்டுமென்றால் அவர்களுடைய முகப்புத்தகங்கள்.இன்னும் சொல்லவேண்டுமானால் அவர்கள் புலம்பெயர் நாடுகளில் நடத்துகின்ற நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள்.
ஆனால் உண்மையில் இவர்களுக்கே ஜனநாயகத்தின் மாண்பு புரிந்திருக்க வேணும். அதன் லாப நட்டங்களை மதிப்பிடக்கூடிய வாய்ப்பு இவர்களுக்கே உண்டு.மட்டுமல்ல அங்குள்ள ஜனநாயகச் சூழலின் வளங்களையும் வாய்ப்புகளையும் இவர்கள் தாராளமான அனுபவிக்கின்றனர்.இவ்வளவும் இருந்தும் இவர்கள் ஜனநாயகத்தை மறுப்பதுதான் புரிந்துகொள்ளக் கடினமானது.இவர்களின் நிலையே இப்படியென்றால் ஆண்டபரம்பரைக் கனவோடும் சாதி மத பிரதேச வெறியோடு வாழுகின்ற உள்ளுர்த் தமிழ்க்குடியின் நிலையைப் பற்றிச் சொல்ல வேணுமா? தமது கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. தமது அணிக்கு மாற்றாக இன்னொரு அணி செயற்பட முடியாது. தாம் சொல்வதற்கு மறு அபிப்பிராயம் கிடையாது. தன்னுடைய தெரிவுக்கு மாற்றுத் தெரிவு நிகழக்கூடாதுஇந்த மாதிரித்தான் தமிழ்ப்பெருங்குடி வாழ்கிறது. வாழ விரும்புகிறது. வாழமுற்படுகிறது.
ஏகப்பிரதிநிதித்துவம் ஏகதலைமை போன்றனவெல்லாம் இந்த வகையினவே.

முன்னர் தமிழரசுக் கட்சி இப்படித்தான் செயற்பட்டது. பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணி. பின்னர் புலிகள். தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி உள்ளிட்ட தமிழ்த்தேசிய (முகமூடி) சக்திகள்.

இவைகளின் அணுகுமுறையும் அரசியலும் ஜனநாயக மறுப்பில்தான் வேர் விட்டுள்ளன.

'தமிழ்த்தேசியத்தின் பெருங்குறைபாடே அது உள்ளும் புறமும் விரிய மறுப்பதனால் ஏற்படுவதே என தமிழ்த்தேசிய அபிமானிகளிற் பலரும் விமர்சகர்களும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

ஆனால் அது ஒரு போதும் விரியாத – விரியக் கூடிய இயல்பற்ற மூடுண்ட அமைப்பாகவே இருக்கிறது.

இதற்கு அண்மைய நல்ல உதாரணம் வட மாகாணசபைக்கான புதிய கட்டிடத்தொகுதியின் திறப்பு விழா தொடர்பாக ஏற்பட்ட பிணக்கும் பிரச்சினையும் சர்ச்சையும்.

இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அழைப்பதாக ஒரு தரப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தனது மறுப்பைத் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சொன்னாராம் அமைச்சர் டக்ளஸ் வருவதாக இருந்தால் அந்த நிகழ்வில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என.

இந்தமாதிரி முடியாட்சிச் சிந்தனை கொண்டவர்கள் இவர்கள் என்பதால்தான் சம்மந்தனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ்ப் பெருமக்கள் கிரீடம் சூடினார்கள்.

தமது விருப்பத்தைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை என்பது ஒரு போதை.

இந்தப் போதையால்தான் இலங்கைத்தீவு இரத்தம் சிந்தியது.

இலங்கையின் இருண்டகாலத்தை உருவாக்கியதும் இந்தப் போதையே.

இதுதான் பிறரிடம் நம்மை மண்டியிட வைப்பதும்.

தற்போது சம்மந்தன் குழு செய்வதும் இதைத்தான்.

கருத்துகள் இல்லை: