புதன், 30 அக்டோபர், 2013

தேமுதிக: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஜெயலலிதாவே முயற்சிக்கிறார்

தமிழக முதல்வர் எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளானது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாகும் என்றார் தேமுதிக எம்எல்ஏவும், எதிர்கட்சி கொறடாவுமான வி. சி. சந்திரக்குமார்.புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோனைக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தேமுதிக தொடங்கியதிலிருந்து 2011 சட்டப்பேரவைத் தேர்தல் தவிர அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட்டுள்ளது. எனவே ஏற்காடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட நாங்கள் அஞ்சவில்லை. இருப்பினும் தேர்தல் குறித்து பல விஷயங்களை விஜயகாந்த் ஆராய்ந்து கொண்டுள்ளார். உரிய முடிவை விரைவில்அறிவிப்பார்.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் ஒவ்வொரு முறையும் அதிமுக உறுப்பினர்கள் எங்களையும் எங்கள் கட்சியையும் கட்சித்தலைவரையும் ஏதாவது ஒரு குட்டிக்கதைகளை கூறி இழிவுபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அடி கொடுக்கும் வகையில் நாங்களும் குட்டிக்கதைகளை கூறமுடியும். ஆனால் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
சட்டசையில் ஆளும் கட்சிக்கு சாதகமாக பேசும் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இத்தகைய செயல் எல்லா எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதாவே ஈடுபட்டுள்ளார்.
விரைவில் அது போன்ற நிகழ்வு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஜெயலலிதா மக்களுக்கு நல்லது செய்வதை விட்டுவிட்டு எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். இத்தகைய போக்கை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளைகளால் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகி வருவதைஉணர முடிகிறது என்றார்.
- இரா.பகத்சிங்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: