வியாழன், 11 ஜூலை, 2013

குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் !

எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்: இஷ்ரத் ஜகான் குடும்பத்தினர் பரபரப்பு
குற்றச்சாட்டு" குஜராத் மாநிலத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடந்த என்கவுண்டரில் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இது போலி என்கவுண்டர் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பியதையடுத்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தி முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் இஷ்ரத் கொலை போலி என்கவுண்டர் என்று கூறியுள்ள சி.பி.ஐ., உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 7 போலீஸ்கார்களை குற்றவாளிகளாக சேர்த்திருந்தது. இந்நிலையில், இஸ்ரத் ஜகானின் உறவினர்கள் தங்கள் உயருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


இதுதொடர்பாக அவர்கள் இன்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "நள்ளிரவு 2.30 மணிக்கு சிலர் எங்கள் வீட்டின் கதவை தட்டி திறக்கும்படி மிரட்டுகின்றனர். யார் என்று ஆறேழு முறை கேட்டபிறகு, அவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்கின்றனர். நள்ளிரவில் வீட்டிற்கு வந்து கதவைத் திறக்க வற்புறுத்தும்படி எந்த சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது? தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக உணரவில்லை. எங்கு சென்றாலும் எங்களை கார்கள் பின்தொடர்கின்றன" என்றனர்.

அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்களின் வழக்கறிஞர், அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இஷ்ரத் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க தயாராக இருப்பதாக மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி. கூறியிருந்தார். கடந்த மாதம் இஷ்ரத்தின் தாய் மற்றும் உறவினர் இருவரும் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சென்றபோது, அவர்களின் கார் மீது சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து இஸ்ரத்தின் குடும்பத்தினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை அனுப்பினால் பாதுகாப்பு வழங்குவோம் என்று உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே கூறுகிறார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: