திங்கள், 25 ஜூன், 2012

கைது வாரண்ட் பிறப்பிப்பு?சசிகலா ஆப்செண்ட்

 Again Sasikala Not Appear Bangalore Court
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா இன்றும் ஆஜராகாததையடுத்து அவருக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவின் நியமனமே தவறானது என்று புதிய மனு ஒன்றை சசிகலா தரப்ப்பில் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக முதல்வராக 1991 முதல் 1996ம் ஆண்டுவரை முதல்வர் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சசிகலாவிடம் நீதிமன்றத்தால் அவ்வளவு எளிதாக வாக்குமூலம் பெற்றுவிட முடியவில்லை. மாதக் கணக்கில் பல்வேறு காரணங்களைக் கூறி சசிகலா இழுத்தடித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக கண்ணில் பிரச்சனை என்று கூறி நீதிமன்றத்தில் ஆஜராகமலேயே இருந்து வந்தார். கடந்த முறை விசாரணையின் சசிகலா கண்டிப்பாக இன்றைய விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்றும் அவர் ஆஜராகமல் போனால் இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இன்றைய விசாரணையின் போது சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருமே ஆஜராகததால் நீதிபதி மல்லிகார்ஜூனையா செம கடுப்படைந்தார். இவ்வளவுதூரம் எச்சரித்தும் மூவருமே ஒட்டுமொத்தமாக ஆஜராகததால் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார் நீதிபதி.
மூவராலும் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என்றும் வழக்கின் விசாரணையை 10 நாட்கள் வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மூவர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜூனையா முறைப்படியாக நியமிக்கப்படவில்லை என்று புதிய மனு ஒன்றை சசிகலா தரப்பில் தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வகை செய்யும் வகையில் கைது வாரண்ட்டை நீதிபதி பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக பெங்களூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: