ஞாயிறு, 24 ஜூன், 2012

மது விற்பனை 2,000 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது

தமிழகம் முழுவதும், கடந்த மாதத்தில் மட்டும் 48 லட்சம் பெட்டி மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம், முதல் முறையாக, ஒரு மாத மது விற்பனை 2,000 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. மதுக்கடைகளுடன் இணைந்த 4,730 மதுக்கூடங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (ஹாட்), பீர் மற்றும் ஒயின் வகைகளும் விற்பனைசெய்யப்படுகின்றன.
சாதனை சாதனை தமிழக ஆட்சியாளர்களின் சாதனை. கல்வெட்டில் பொறித்து வைக்கவும். அதிகரிப்பு:கடந்த முறை அ.தி.மு.க., தமிழகத்தில் ஆட்சியை பிடித்த நிலையில், மதுபான விற்பனையானது தனியார் கையில் இருந்தது. இம்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 2003ம் ஆண்டு மதுவிற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டது. இதன் மூலம், தனியார் செய்துவந்த தீர்வை செலுத்தப்படாத, மதுபான விற்பனை தடுக்கப்பட்டதுடன், அரசிற்கும் வருவாய் தொடர்ந்து அதிகளவில் கிடைத்து வருகிறது. தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு, "டாஸ்மாக்' மூலம் பெறப்படும் நிதியும் பேருதவி புரிந்து வருகிறது. மது அருந்துவதன் தீமைகள், விழிப்புணர்வுமுகாம்கள், பேரணிகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மதுப்பழக்கத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதே நேரத்தில் மறு புறம், கள்ளச்சாராயம், போலி மது மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்களும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது, இதனால், ஆயத்தீர்வை செலுத்தப்படாத மதுவகை விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. அரசுடைமையாக்கப்பட்ட 2003ம் ஆண்டில் மதுவிற்பனையால் அரசிற்கு கிடைத்த வருவாய் 3,639.93 கோடி ரூபாய். இது 2007-08ம் ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து 7,473 கோடி ரூபாயை எட்டியது.

மைல்கல்:இவ்வாறாக ஆண்டு தோறும் சராசரியாக, 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்து வருகிறது. 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 12ஆயிரத்து 498 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010-11ம் ஆண்டில் இந்த விற்பனை, 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. 2011-12ம் ஆண்டு விற்பனை, 19 ஆயிரம் கோடியை எட்டியது.இதன் மூலம், ஆண்டுதோறும் சரக்கு விற்பனை, 4,000 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து, புதிய எல்லைகளைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மேமாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும், மதுபான விற்பனையானது ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கடந்த மாதம் மட்டும், ஐ.எம்.எப்.எல்., மதுபானம் 48 லட்சத்து 300 பெட்டிகளும் (கேஸ்), பீர் வகைகள் 36 லட்சத்து 25 ஆயிரம் பெட்டிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதன் மூலம், ஒரு மாத சரக்கு விற்பனை, முதல் முறையாக 2,025 கோடி ரூபாயை எட்டியுள்ளது.மேலும், இந்த மாதம் இதுவரை, ஐ.எம்.எப்.எல்., மதுபானம் 38 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள் 25 லட்சம் பெட்டிகளும் விற்பனையாகி, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைத்துள்ளது. சமீபத்தில், மதுபான வகைகளின் விலை கணிசமான அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, தற்போதைய கோடை வெப்பத்தின் விளைவாக பீர் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வரும் மாதங்களில் விற்பனையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

காரணம்:மதுபான விற்பனையின் அளவு உயர்வு குறித்து அதிகாரி, மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது,"" மதுபான விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு எந்த பிரசார திட்டத்தையும் மேற்கொள்வதில்லை. கள்ளச்சாராயம் எவ்வளவு வேகமாக அழிக்கப்படுகிறதோ, அவ்வளவு வேகமாக மது விற்பனை அதிகரிக்கிறது. தற்போது, தமிழகத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த அளவுக்கு மது விற்பனை கூடியிருக்கிறது,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: