புதன், 27 ஜூன், 2012

டாஸ்மாக் கடையை மூடு! பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

“டாஸ்மார்க் கடையை இழுத்து மூடுவோம்” என கடந்த 09/06/2012 அன்று மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதலை முன்னணி, சென்னைக் கிளை சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக்தலைமை உரையில் தோழர் சித்ரா பேசும் போது “பகுதிக்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்காத இந்த அரசு வீதிக்கு வீதி டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்துள்ளது” என்றார்.
மாவட்ட செயலர் தோழர் உஷா பேசும் போது
“உழைக்கும் மக்கள் வசிக்கின்ற பகுதியிலேயே சாராயக் கடைகளை வைத்துள்ள இந்த அரசு ரேசன் கடைகளை மட்டும் பல கிலோமீட்டர் தள்ளி வைத்துள்ளது.  இரண்டு அரசு நடத்தும் கடைகள் தான். எது மக்களுக்கு நன்மை தரும் என்பதில் அரசு அக்கறை காட்டவில்லை.

அரசியல் அமைப்பு சாசனத்தில் அரசை நெறிப்படுத்தும் கொள்கையில் பிரிவு     47-ல் போதையூட்டும் பொருட்களை அரசு விற்க கூடாது என உள்ளது. ஆனால், அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்துகிறது.  உழைக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் காவல்துறையினரை குவிக்கின்றது.  இந்த அரசே சட்டத்தை மீறுகிறதே என்று அரசு அதிகாரிகளை இந்த காவல்துறை கைது செய்யுமா?  மேலும் அரசு மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற இலவசங்களை கொடுக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் பல்வேறு மானியங்களை வழங்கி இந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க வழி வகுக்கிறது.  இந்நாட்டின் வளங்களும், நம்முடைய வாழ்க்கையும் மறுகாலனியாதிக்க கொள்கைகளால் பறிபோவதை அறியா வண்ணம் மக்களை ஆளும்வர்க்கம் மக்களை போதையின் மயக்கத்தில் அடிமையாக வைத்திருக்கிறது” என பேசினார்.

பகுதி முழுவதும் சுவரொட்டிகள் மக்கள் கூடுமிடங்களில் ஒட்டப்பட்டன.  பெண்களும் குழந்தைகளும் 60 பேர் கலந்து கொண்டார்கள்.  ஆர்ப்பாட்டம் நடத்திய இடம், குரோம்பேட்டை ரயில் நிலையம் எதிரே என்பதாலும், பேருந்து நிலையம் அருகில் என்பதாலும் மக்களில் பலர் நின்று முழக்கங்களையும், உரையையும் கவனித்தார்கள். சிலர் இந்த போராட்டம் மிக முக்கியமான போராட்டம் என்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்கள். பகுதியில் சுவரொட்டி பார்த்து மக்களில் சிலர் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் செய்ய காவல்துறை தங்களால் ஆன எல்லா இழுத்தடிப்பு வேலைகளையும் கவனமாக செய்தார்கள். முதலில் அனுமதி கேட்ட போது காவல் நிலையத்தில் வேண்டுமென்றே பல மணிநேரம் உட்கார வைத்து பின்னர் அவரைப்பார், இவரைப்பார் என்று இழுத்தடித்தார்கள். அன்று புதுக்கோட்டை தேர்தலுக்காக ஜெயா அந்த இடத்தை கடந்து செல்கிறார் என்றும் நிறைய போலீஸ் படையை நிறுத்தியிருந்தார்கள்.  ஆர்ப்பாட்டம் நடந்த போதும் அருகில் இருந்த டாஸ்மாக் கடையை பாதுகாக்க காவல்துறை ஒரு பெரும் படையை நிறுத்தியிருந்தது. டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று தோழர்கள் முழக்கமிட்டதும், குவிந்திருந்த போலீஸ் படையை லத்தியை தூக்கிக் கொண்டு தோழர்களை சுற்றி வளைத்து தாக்குவது போல நின்றது. ஆனாலும் மக்கள் பங்கேற்புடனும், ஆதரவுடனும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

_______________________________________________________
- பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

கருத்துகள் இல்லை: