புதன், 27 ஜூன், 2012

அரிசியின் விலை உயர போகுது

தமிழகத்தில், அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலை உயர்வை எதிர்பார்த்து விவசாயிகள், நெல் இருப்பு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அடுத்த ஓரிரு மாதங்களில் கிலோ அரிசி, 45 ரூபாய் என்ற அளவிற்கு, விலை உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டு, அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை; தென்மேற்கு பருவ மழையும், எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நெல் நடவு சீசன் துவங்க வேண்டிய தருணத்தில், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வழக்கமாக ஜனவரி, பிப்ரவரியில் நெல் அறுவடையின் போது, புதிய அரிசி வரத்து அதிகமாக இருந்தது. விலையும் சற்று குறைந்து, மோட்டா ரக அரிசி (ஐ.ஆர்., 20 போன்ற ரகங்கள்) சில்லரையில், கிலோ, 18 ரூபாய், சன்னக ரக அரிசி (வெள்ளைப் பொன்னி, பொன்னி, கர்நாடகா பொன்னி ரகங்கள்) அதிகபட்சமாக, 35 ரூபாய் வரை விற்றது.

வழக்கத்திற்கு மாறாக...: சீசனுக்கு பிறகு செப்டம்பர், அக்டோபரில் தான் அரிசி விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதத்திலேயே, விலை அதிகரிக்க துவங்கி விட்டது. தற்போது மோட்டா ரக அரிசி, சில்லரையில் கிலோ, 24 ரூபாய், சன்னக ரக அரிசி அதிகபட்சமாக, 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இதுவும், நிரந்தரமான விலை இல்லை; தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தவிரவும், ரேஷன் அரிசி வினியோகத்தின் முழு அளவுத் தேவைக்கும், மத்திய அரசிடம் தமிழக அரசு அரிசி கேட்டிருக்கிறது. அது விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன?அரிசி வியாபாரிகள் கூறியதாவது:அணைகளில் நீர் இருப்பு இல்லாததும், பருவமழை பெய்ய ஆரம்பிக்காததும், விவசாயிகளிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், நெல் இருப்பு வைக்க துவங்கி விட்டனர்.நெல் அரவை ஆலைகளுக்கு, போதிய நெல் வரத்து இல்லை. மேலும், விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு பதிலாக, கரும்பு உள்ளிட்ட பணப் பயிர்களுக்கு மாறி வருகின்றனர். இருக்கிற சூழ்நிலையை பார்த்தால், அடுத்தாண்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி கொள்முதல் செய்ய மில்களுக்கு ஆர்டர் கொடுத்தால், ஒரு வாரம், 10 நாள் கழித்து தான் கிடைக்கிறது. அதுவும் புதிய விலைக்குதான் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் மூட்டைக்கு (75 கிலோ) குறைந்தபட்சம், 200 ரூபாய் வரை அதிகரிக்கிறது. சில்லரையில் விற்கப்படும் போது, கிலோவுக்கு நான்கு ரூபாய் வரை அதிகரிக்கிறது. எனவே, அரிசி விலை தொடர்ந்து அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தவிரவும் கடந்த 30 நாட்களில் , கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலையேற்றம் அதிகரித்திருக்கிறது. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து, சன்னக ரக அரிசி வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்குக் காரணம். அதேசமயம், ரேஷன் அரிசி சப்ளை சீராக இருக்கும்போது, ஏனிந்த விலை உயர்வு என்பது புதிராகும்.

இட்லி அரிசி விலையும் உயர்வு: இட்லி (கார்) அரிசி பொதுவாக, சாப்பாட்டு அரிசியை விட விலை குறைவாக இருக்கும். தற்போது சாப்பாட்டு அரிசியை விட, விலை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு துவக்கத்தில் இட்லி அரிசி கிலோ, 18 முதல், 24 ரூபாய் வரை விற்றது. தற்போது படிப்படியாக அதிகரித்து குறைந்தது, 26 முதல், 32 ரூபாய் வரை விற்கிறது.திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் இருந்துதான், இட்லி அரிசி வருகிறது. தட்டுப்பாடு காரணமாக, இந்த மாதத்தில் மட்டும் கிலோவுக்கு நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: