புதன், 2 நவம்பர், 2011

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!

குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!“குஜராத்தைப் பார்! மோடி ஆட்சியின் சாதனையைப் பார்!சு என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, இந்தியா டுடே. “இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்சு என்கின்றன, செய்தி ஊடகங்கள். உணவு விவசாயக் கழகத்தின் துணை நிறுவனமான பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் (International Food Policy Research Institute, Rome) குஜராத்தைப் பின்பற்றுமாறு இந்தியாவின் இதர மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச ஜெயா கும்பலோ, குஜராத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தின் விவசாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு நிபுணர் குழுவை குஜராத்துக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது.
இப்படி நாடு முழுவதும் முதலாளித்துவ நிறுவனங்களும் ஊடகங்களும் பார்ப்பனபாசிச மோடியைச் சிறந்த அரசாளுமை கொண்டவர் என்றும், விவசாயத்தில் வளர்ச்சியைச் சாதித்தவர் என்றும் கொண்டாடுகின்றன. எனில், விவசாயிகளுக்கு குஜராத் சொர்க்கபுரியா? மோடி அரசு விவசாயத்தில் அப்படி என்ன ‘புரட்சியை’ச் செய்துள்ளது?

கடந்த 2005ஆம் ஆண்டு மோடி அரசு விவசாயம் தொடர்பாக இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தது. அதில் ஒன்று, ஒப்பந்த விவசாயத்தைப் பரவலாக்கும் திட்டம். இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்களும் மாநில அரசும் கூட்டுச் சேர்ந்து விவசாயிகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கும். விவசாயிகள் 1 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும். இதற்காக, மாநில அரசின் விவசாய உற்பத்தி விற்பனைக் குழு தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது.
இரண்டாவது, கார்ப்பரேட் விவசாயத்திற்கும் மற்றும் உயிர்ம எரிபொருள் (Bio Feul) விவசாயத்திற்கும் (அதாவது, காட்டாமணக்கு பயிரிட) தரிசு நிலங்களை முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதற்கான சட்டமாகும். இதன் மூலம் அரசுக்குச் சொந்தமான சுமார் 42 இலட்சம் ஹெக்டர் நிலம், அடிமாட்டு விலையில் பெருமுதலாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. மேலும், நன்செய் நிலங்களையும் இம்முதலாளிகள் கையகப்படுத்திக் கொள்ள நில உச்சவரம்பு மற்றும் குத்தகைச் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
இவ்விரு சட்டங்கள் மூலமாக குஜராத் அரசு பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, கார்ப்பரேட்மயமான விவசாயத்தைத் திணித்து வருகிறது. அதாவது, விதை, உரம், பூச்சி மருந்துகள், சேமிப்புக் கிடங்குகள், கொள்முதல், விநியோகம்  என அனைத்தையும் கட்டுப்படுத்தி, பெருந்தொழில் குழுமங்கள் ஆதிக்கம் செய்யக் கதவை அகலத் திறந்துவிட்டுள்ளது. பாரம்பரிய விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செய்யும் இத்தகைய முறையைத்தான் விவசாய வளர்ச்சி என்றும் வறுமையும் வேலையின்மையும் குறைந்து குஜராத் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகவும் முதலாளித்துவ முண்டங்களும் ஊடகங்களும் கதையளக்கின்றன.
2003ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டுவெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை உணவு மற்றும் உணவுப் பதப்படுத்தல் துறையில் முதலீடு செய்ய அழைத்துவரும் குஜராத் அரசு, கடந்த 2009ஆம் ஆண்டில் மட்டும் 204 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. இதன் மூலமாக, சுமார் 32,450 கோடி ரூபாய் அளவுக்கு இம்மாநிலத்தில் தனியார் முதலீடுகள் குவிந்துள்ளன. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்திநுகர்வு சங்கிலியை ஒருங்கிணைக்க சுமார் 3000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இத்தகைய புதிய சட்டங்களாலும் பெருமுதலாளிகளின் முதலீடுகளாலும் குஜராத்தின் விவசாயம் புதிய பரிமாணத்தை எட்டி வருகிறது.
2000ஆவது ஆண்டில் அக்ரோசெல் என்ற நிறுவனம் பருத்தி மற்றும் எள் ஒப்பந்த விவசாயத்தைத் தொடங்கியது. அப்பொழுது 500 விவசாயிகளைக் கொண்டு 2,500 ஹெக்டரில் ஒப்பந்த விவசாயத்தை செயல்படுத்தியது. இது 2008இல் 45,000 விவசாயிகள், 2,18,000 ஹெக்டர் பரப்பளவு என அதிகரித்துள்ளது. தேசாய் , பார்தி முதலான நிறுவனங்கள் சுமார் 7,000 ஏக்கர் பரப்பளவில் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை உற்பத்தி செய்து ஐரோப்பியச் சந்தைக்கு அனுப்புகின்றன. மெக்டொனால்ட் என்ற நிறுவனம் ஆயிரக்கணக்ககான ஏக்கரில் உருளைக்கிழங்கு ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றது. ஏ.சி.ஐ.எல். என்ற நிறுவனம் ஒப்பந்த விவசாய அடிப்படையில் பருத்தியை உற்பத்தி செய்து வருகிறது. சொட்டு நீர்ப்பாசன நிறுவனமான ஜெயின், ஒப்பந்த விவசாயத்தின் மூலமாக வெங்காய உற்பத்தியை மேற்கொள்கிறது. இவ்வாறு குஜராத்தில் பல இலட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் ஒப்பந்த விவசாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தில் சிறு உடைமையாளர்கள், பெரும் உடைமையாளர்களுக்கு நிலங்களைக் குத்தகைக்கு விடுதலும், விற்பதும் அதிகரித்துள்ளதோடு, சராசரி நில உடைமையின் அளவும் அதிகரித்து குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!வருவதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1990 களில் சிறு விவசாயிகளே பெரும் பண்ணையாளர்களிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தில் ஈடுபட்டனர். ஆனால், 2000ஆவது ஆண்டுக்கு பிறகு நவீன பண்ணையாளர்கள், சிறு விவசாயிகளிடம் இருக்கும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, பெரும் பண்ணை ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சிறு விவசாயிகள் படிப்படியாக விவசாயத்திலிருந்தே விரட்டப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டு வருகின்றனர். நவீன உழுபடைக் கருவிகள் மூலம் பண்ணை விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், கூலி விவசாயிகளுக்கும் வேலை கிடைப்பதில்லை. மேலும் ஒப்பந்த விவசாயத்தின் ஓரினப் பயிர் சாகுபடியால், மண் வளம் இழப்பும் பாசன வசதிகள் சூறையாடப்படுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தீவிரமாகி வருகின்றன.
இன்னொரு பக்கம், கார்ப்பரேட் கம்பெனிகள் நிலத்தைக் கையகப்படுத்தி நேரடியாக விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. திடீர் விவசாயியாக அவதாரம் எடுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், அரசின் துணையோடு கையகப்படுத்தியுள்ள 1,700 ஏக்கரில் மா பயிரிட்டுள்ளது. இதில் உற்பத்தியாகும் மாம்பழத்தை “ரிலையன்ஸ் மேங்கோஸ்சு என்கிற பெயரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறது. ஏ.சி.ஐ.எல். நிறுவனம் அரசின் தரிசு நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, பருத்தி விவசாயத்தை நேரடியாகச் செய்து வருகிறது.
மேலும், உயிர்ம எரிபொருள் விவசாயத்திற்கு என்கிற பெயரில் , ரிராயல் எனர்ஜி, டாட்டாலையன்ஸ், எஸ்ஸார், அரவிந்த் மில்ஸ், அவினி சீட்ஸ் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் குஜராத்தில் உள்ள தரிசு நிலங்களைக் கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளன. இம்மாநிலத்தின் கணிசமான தரிசு நிலங்கள் கட்ச், சௌராஷ்டிரம் மற்றும் வடக்குப் பகுதியில் உள்ளன. அங்கு வாழும் மக்கள் இந்நிலங்களை கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாகத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் குஜராத்தின் மக்கள் தொகையில் 5 முதல் 8 சதமாக உள்ளனர்; சுமார் 25 முதல் 40 இலட்சம் குடும்பங்கள் இந்நிலங்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவர்களின் வாழ்வாதாரமாக உள்ள மேய்ச்சல் நிலத்தின் அனுபோக உரிமை பறிக்கப்பட்டு வருவதால், இப்பகுதிவாழ் மக்கள் கால்நடைகளை விற்றுவிட்டு நகர்புறங்களில் நாடோடிகளாக வேலை தேடி அலைகின்றனர்.
ஏற்றுமதி மற்றும் மேட்டுகுடிக்கான விவசாயம் (High value agriculture) ஆகிய வகைகளுக்கு குஜராத்தில் முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.1990களில் 4 இலட்சம் ஹெக்டராக இருந்த காய்கறிபழ உற்பத்திக்கான விவசாயம், 200708இல் 6 இலட்சம் ஹெக்டராக உயர்ந்திருக்கிறது. அதேபோல் பருத்தி 15 இலட்சம் ஹெக்டரில் இருந்து 24 இலட்சம் ஹெக்டராக உயர்ந்திருக்கிறது. இதன் விளைவாக தானிய உற்பத்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
குஜராத்தின் ஒட்டுமொத்த பருத்தி விவசாயத்தில் 54 சதம் பி.டி. பருத்தி விதை (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி) கொண்டு பயிரிடப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பி.டி. பருத்தி விதையை விற்பனை செய்கின்றன. இருப்பினும், இந்நிறுவனங்கள் அனைத்தும் பி.டி. பருத்தி விதைக்குக் காப்புரிமை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களாகும். மான்சான்டோதான் விலையைத் தீர்மானிக்கிறது. இதனால் பருத்தி விவசாயிகளுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இலாபமில்லை; காய் புழு நோயையோ கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
இவை தவிர, குஜராத் அரசு பல்வேறு பயிர்களுக்கான உற்பத்தி மண்டலங்களை உருவாக்கி வருகிறது. மாம்பழம், சப்போட்டா, அனொலா, எலுமிச்சை, வாழை, பப்பாளி, அன்னாசி, பேரிச்சை, கொய்மலர்கள், வாசனை பயிர்கள் போன்றவை, ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட மாவட்டம் அல்லது வட்டங்களை உற்பத்தி மண்டலங்களாக அறிவித்துள்ளது. அங்கு அப்பயிர் உற்பத்திக்கு ஊக்கம் கொடுக்கப்படுகிறது. தேவைப்படும் நிறுவனம் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்முதல் செய்து கொள்ளலாம்; அங்கு பழக்கூழ் மற்றும் பதப்படுத்தல் தொழிற்சாலையை ஆரம்பித்துக் கொள்ளலாம். மேலும், அரசு  தனியார் கூட்டிணைவுடன் பரோடா (வடோதரா) நகரத்தை ஒட்டி, விவசாய விளைபொருட்களைச் சேகரித்தல், தரப்படுத்தல், பதப்படுத்தல், மதிப்பூட்டல் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க “மீப்பெரும் உணவுப் பூங்காக்களை (Mega food parks)” உருவாக்க குஜராத் அரசு முனைந்துள்ளது. இந்த “மீப்பெரும் உணவு பூங்காசுவை ஒட்டிய விவசாய பகுதிகளில் வட்டாரச் சேகரிப்பு மையங்கள் உருவாக்கப்படுவதோடு, இவற்றில் அந்நிய முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. மேலும், தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் 20 க்கும் மேற்பட்ட விவசாய ஏற்றுமதி மண்டலங்களை குஜராத் அரசு உருவாக்கியுள்ளது. இலாபம் உத்திரவாதப்படுத்தப்பட்ட உற்பத்தி  கொள்முதல்  நுகர்வு மற்றும் சந்தைப்படுத்தலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காகவே இவை வேகவேகமாக நிறுவப்பட்டு வருகின்றன.

இன்று குஜராத்தில் ரிலையன்ஸ், அய்.டி.சி., கோத்ரெஜ், ஃப்யூச்சர், மஹிந்திரா, ஹரியாளி கிசான் பஜார், ஏ.சி.அய்.எல்., மகேந்திரா, டீ.சி.ம்.ஸ்ரீராம் போன்ற நிறுவனங்கள் கிராமப்புற சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் இறங்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றின் விளைவாக, முறைசாரா சிறு உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவை ஒழிக்கப்பட்டு அவ்விடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காலூன்றி விட்டன.
இவை தவிர, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் வளர்ச்சி மையங்கள் என்ற பெயரில் வெளிப்படையாக நிலப்பறிப்பிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. நிர்மா லிமிடெட் என்ற சிமெண்ட் நிறுவனத்திற்கு பாவ்நகர் மாவட்டத்தில் சுமார் 3500 ஹெக்டர் வளமிக்க விவசாய நிலத்தைப் பறித்தெடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் சுமார் 50,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, டாடா நானோ கார் உற்பத்தி உதிரிப் பாக உற்பத்திக்காக ஏழு கிராமங்களில் சுமார் 8000 ஏக்கர் நிலம் பறிக்கப்படவுள்ளது.
குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!இத்தகைய தனியார்மயதாராளமய தீவிரமாக்கலால், குஜராத் மாநிலத்தில் நகரமயமாக்கம் 43 சதவீத அளவுக்கு நடந்தேறியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நகரமயமாக்கமும் விவசாயத்தின் அழிவும் தனியார்மயம்  தாராளமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையினால் திட்டமிட்டே முன்தள்ளப்படுபவையாகும். ஒப்பந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளைப் போண்டியாக்கி, பின்னர் அவர்களே நிலத்தை விற்று ஓடுமாறு நிர்பந்தித்து, இன்று எதிர்ப்பே இல்லாமல் கார்ப்பரேட் விவசாயத்தை குஜராத்தில் மோடி அரசு நிலைநாட்டியுள்ளது. மறுபுறம், மோடி அரசின் நிலப்பறிப்பையும் கொத்தடிமைத்தனத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிவரும் தொழிற்சங்க முன்னணியாளர்களும் மனித உரிமை அமைப்புகளின் செயல்வீரர்களும் ‘மாவோயிஸ்டுகள்’ என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால்தான், ஒருபுறம் கார்ப்பரேட் சேவையும், மறுபுறம் தொழிற்சங்க  ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் பாசிச அடக்குமுறையும் கொண்டுள்ள இந்துவெறி பயங்கரவாத மோடி அரசை முன்னுதாரணமாகக் காட்டி, முதலாளித்துவவாதிகளும் அவர்களது ஊடகங்களும் புகழ்ந்து தள்ளுகின்றன.
பாரம்பரிய விவசாயத்தை அழிப்பது, உலகமயமாக்கலுக்கு ஏற்ப விவசாயத்தை ஏற்றுமதிக்கானதாக மாற்றுவது, ஏழை  நடுத்தர விவசாயிகளை நிலமற்ற கூலிகளாகச் சிதறடிப்பது, பன்னாட்டு ஏகபோக விவசாயக் கம்பெனிகளின்  தரகுப் பெருமுதலாளிகளின் வரம்பற்ற ஆதிக்கத்தை நிறுவுவது, இதற்காகப் பெயரளவில் இருந்துவந்த தடைகளை நீக்குவது என்பதுதான் மோடி அரசு செய்துவரும் ‘முன்னுதாரணமிக்க சாதனைகள்’. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் இன்று குஜராத்தில் விவசாய இடுபொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது. இதுதவிர, பொதுவில் நிலவும் விலைவாசி உயர்வானது, உலகத் தரத்துக்கு உயர்ந்துவிட்டது. இவற்றால் விவசாயிகள் கடன் சுமையால் போண்டியாகி, விவசாயத்தை விட்டே விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இதை ‘விவசாயத்தின் வளர்ச்சி’ எனக்குறிப்பிட்டு முதலாளித்துவவாதிகளும் அவர்களின் ஊடகங்களும் காதில் பூச்சுற்றுகின்றனர். இந்த ‘விவசாய வளர்ச்சி’, விவசாயிகளின் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. மாறாக, அவர்கள் தமது துண்டு நிலத்தையும் இழந்து நாடோடிகளாகவும் நிலமற்ற கூலிகளாகவும் மாறியதுதான் நடந்துள்ளது. குஜராத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னையில் கொத்தடிமைகளாக உழலும் குஜராத் உழைக்கும் மக்களின் அவலமே மோடி அரசின் யோக்கியதையை நிரூபித்துக் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: