வியாழன், 3 நவம்பர், 2011

கனிமொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி சிபிஐ கோர்ட்


Kanimozhiடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனால் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் கூடியிருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.
கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி அவர் இன்று காலை திகார் சிறையிலிருந்து டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்துக்கு
அழைத்து வரப்பட்டார். கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் நீதிமன்றம் வந்தனர்.
இந்தத் தீர்ப்பையொட்டி திமுக மத்திய அமைச்சரான அழகிரி, கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும் டெல்லி வந்துள்ளனர். மேலும் கட்சியின் அனைத்து எம்.பிக்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.இந்த ஜாமீன் மனு கடைசியாக கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி
நிர்வாகி சரத்குமார் ரெட்டி, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம்
மொரானி ஆகிய 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகின. ஆனாலும் இந்த வழக்கில் தீர்ப்பை இன்றைக்கு (நவம்பர் 3ம் தேதிக்கு) நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார்.
இந் நிலையில் கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
எழுப்பியது.இதற்கு சிபிஐ தந்த விளக்கத்தில், 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி இன்று விடுதலை ஆகிவிடுவார் என்ற திமுக தரப்பு நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இன்று கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிபதி ஷைனி விசாரித்தார். பின்னர் அனைத்து ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்த அவர் 2ஜி வழக்கின் விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிபதியின் உத்தரவைக் கேட்டதும் கோர்ட்டில் கூடியிருந்த திமுகவினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும், விரக்தியும் அடைந்தனர். அனைவரது முகங்களும் இறுகிப் போயிருந்தன.
4வது முறையாக ஜாமீன் மறுப்பு
கனிமொழி கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை நிராகரிக்கப்பட்டுள்ளன. இன்று 4வது முறையாகநிராகரிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி தரப்பட்ட விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை: