செவ்வாய், 8 நவம்பர், 2011

மலிவான விளம்பரத்துக்காக பொய் செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு நோட்டீஸ்!

சென்னை: சன் குழும தலைவர் கலாநிதி மாறன் குறித்து தவறான செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு அவர் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 7ம் தேதி வெளியான தினமணி நாளிதழில், கலாநிதி மாறன் குடும்பத்துடன் பின்லாந்து பயணம் என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த கட்டுரை முழுக்க பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது. கலாநிதி மாறன் பின்லாந்து செல்லவில்லை. எது உண்மை என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே அவருடைய மதிப்பையும் மாண்பையும் கவுரவத்தையும் கெடுக்கும் ஒரே நோக்கத்துடன் தினமணியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.தொழில் தொடர்பாக அடிக்கடி வெளிநாடு செல்பவர் கலாநிதி மாறன். இதற்கு தவறான காரணம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். இது முறையற்றதும், காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலுமே தவிர வேறெதுவும் இல்லை. அந்த கட்டுரையில் நீங்கள் பிரசுரித்துள்ள அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, துளிகூட உண்மையில்லாத, உள்நோக்கம் கொண்ட, அவதூறான, நற்பெயரை கெடுக்கிற சிறுமைப்படுத்துகிற செய்தியாகும். இப்படிப்பட்ட மோசமான குற்றச்சாட்டுகளை கொண்ட கட்டுரையை பிரசுரிப்பதற்கு முன்பு, எது உண்மை என்பதை கேட்டு தெரிந்திருக்க வேண்டும். அதை நீங்கள் செய்ய தவறிவிட்டீர்கள்.

ஒட்டுமொத்த கட்டுரையில் துளி கூட உண்மையில்லை. முழுவதும் பொய்யானது. எனது கட்சிக்காரருக்கு எதிராக பொய்யான, உள்நோக்கம் கொண்ட, அடிப்படை ஆதாரமற்ற, நற்பெயரை கெடுக்கிற, செய்தியை வெளியிட்டிருப்பதன் வாயிலாக உங்கள் அலுவலகத்தின் பொறுப்பற்ற செயல் தெளிவாக தெரிகிறது. எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் மலிவான விளம்பரத்துக்காக இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள். கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட செய்திகள் உண்மையானது தானா என்பதை அறிந்து கொள்ள நீங்கள் முயற்சிக்கவில்லை.

பத்திரிகை சுதந்திரம் என்ற போர்வையில் நீங்கள் வரம்பு மீறியுள்ளீர்கள். உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் முற்றிலும் பொய்யான கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள். மலிவான விளம்பரத்துக்கும், பத்திரிகை விற்பனையை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துக்காகவும் இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள். இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுவது நாட்டின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகைக்கு அழகல்ல. இந்த கட்டுரை முழுவதும் பொய்யானது என்பது உங்களுக்கு தெரியும்.

எனது கட்சிக்காரருக்கு எதிராக உங்கள் பத்திரிகையில் வெளியான கட்டுரை, நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகை தர்மத்துக்கு உகந்தது அல்ல. எந்த ஒரு கட்டுரையையும் வெளியிடும் முன்பு அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டியது பத்திரிகையின் பொறுப்பாகும். அதுவும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் எனது கட்சிக்காரர் குறித்து எந்த ஒரு செய்தி வெளியிடும் முன்பும் அதன் உண்மை குறித்து ஆராய வேண்டியது மிகவும் முக்கியம். இந்த கட்டுரை எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் தினமணி நிர்வாக இயக்குனர் மனோஜ்குமார் சொந்தாலியாவின் சிந்தனையில் உருவான கட்டுரையாகும்.

சொந்தாலியாவின் உத்தரவுப்படி, நிருபர் சர்ப்ராஸ் எழுதிக் கொடுத்த கட்டுரையின் உண்மையையும் நம்பகத்தன்மையையும் விசாரித்து அறியாமல் வெளியிட்ட நாளிதழின் ஆசிரியர் என்ற வகையில் வைத்தியநாதனும், அச்சிட்டவர் மற்றும் பதிப்பாளர் என்ற வகையில் ஜுன்ஜுன்வாலாவும் தவறுக்கு பொறுப்பாளி ஆகிறீர்கள். இதுபோன்ற பொய் கட்டுரை வெளியிடுவது இது முதல்முறையல்ல. மலிவான விளம்பரத்துக்காக எனது கட்சிக்காரரின் புகழை கெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலரும் எனது கட்சிக்காரரை தொடர்பு கொண்டு விசாரித்து வருவது அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சமுதாயத்தில் எமது கட்சிக்காரருக்கு இருக்கும் நற்பெயரையும், புகழையும் களங்கப்படுத்தி இருக்கும் இந்த தவறான கட்டுரைக்கு எடிட்டர், பிரின்டர், பப்ளிஷர் மற்றும் ரிப்போர்ட்டர் ஆகிய அனைவருமே கூட்டுப் பொறுப்பாளி ஆகிறீர்கள். தவறான கட்டுரை வெளியிட்டதற்கு நீங்கள் அனைவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த மன்னிப்பை உடனடியாக உங்கள் பத்திரிகையில் பிரதான இடத்தில் வெளியிட வேண்டும். எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும். தவறினால் உங்கள் அனைவரின் மீதும் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: