சனி, 12 நவம்பர், 2011

முதல் தமிழ் பட நாயகியின் நூற்றாண்டு தினம் இன்று 11.11.1911


தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி
குடும்பம் வறுமையில் வாடுகிறது
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியான மறைந்த டி.பி.ராஜலட்சுமிக்கு நேற்று 100வது பிறந்த நாள். தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்தவர். ஆனால் இன்று அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது.
இது பற்றி அவரது மகள் கமலா மோனி,   ’’எனது தாயார் ராஜலட்சுமி, 1911ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தார். வறுமையில் வாடியே தனது 55 வயதில் அவர் இறந்தார்.

முதல் பெண் இயக்குனரான அவர், பாடல், கதை, படம் தயாரிப்பு, நடிப்பு என பல துறையில் சிறந்து விளங்கினார். முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். ‘மிஸ் மாலினி’, ‘மதுரை வீரன்’ படங்களில் அவரது திறமை பாராட்டப்பெற்றது.
தாத்தா திருவையாறு பஞ்சாபிகேச சாஸ்திரிகள் இறந்த பிறகு, குடும்பம் வறுமையில் வாடியது. குடும்பத்தை காப்பாற்ற நாடகத்தில் நடித்தார். இது அவரது கணவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகள்தான் அம்மாவை நாடக மேடை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
தேச பக்தி பாடல்களை அம்மா மேடைகளில் பாடுவார். இதனால் அவரை வெள்ளையர்கள் சிறையில் அடைத்தனர்.நாடக குழுவினர் தான் சிறையிலிருந்து மீட்டார்கள். இது அடிக்கடி நடக்கும். சம்பாதித்த பணம், சொத்து எல்லாவற்றையும் சினிமா தயாரிப்பிலும் தனது குடும்பத்தினருக்குமே செலவு செய்து இழந்தார்.
வறுமை வாட்டியபோது ‘கலைமாமணி’ விருது கிடைத்தது. அதை உருக்கி தனது பேரனுக்கு தங்க சங்கிலி அணிவித்தார். மனஅழுத்தம், சர்க்கரைநோயால் 52 வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
1964ல் இறந்தார். இன்று அவரது குடும்பம் வறுமையில் இருக்கிறது. அவர் பிறந்த நூற்றாண்டு தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
அரசு அதிகாரிகள் சமீபத்தில் அவரைப்பற்றிய தகவல் மற்றும் போட்டோ சேகரித்து சென்றனர். அரசிடமிருந்து உதவி கிடைக்கும் என்ற எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: