சனி, 12 நவம்பர், 2011

மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கத்திற்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 21ம் தேதி வரை செல்லும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக கடந்த புதன்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அந்த வேலையில் உடனடியாக நீக்கப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்கட்சியினரும் குற்றம் சாட்டினர்.
பணி நீக்க உத்தரவை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர் முன்னேற்றச்சங்க தலைவர் மதிவாணன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், மக்கள் நலப்பணியாளராக 13 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை வேலை நீக்கம் செய்தது முறையல்ல. வேலை இழந்தவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பணி நீக்க உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்று கூறியிருந்தார்.
இடைக்காலத் தடை:
இந்த மனுவை நீதிபதி சுகுணா விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மனுதாரர் சார்பில் வக்கீல் வைகை ஆஜராகி அவசரம் கருதி இன்றே இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி, மக்கள் பணியாளர்களின் பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த இடைக்கால உத்தரவு நவம்பர் 21ம் தேதி வரை செல்லும் என்று கூறிய நீதிபதி வழக்கில் உள்ள சங்கங்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: