ஞாயிறு, 6 ஜூன், 2010

குழந்தை கடத்தல் அகில இந்திய மனித உரிமைகள் கழக பெண்கள் பிரிவுத் தலைவி லலிதா கைது


குழந்தை கடத்தல் விவகாரத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த அகில இந்திய மனித உரிமைகள் கழக பெண்கள் பிரிவுத் தலைவி லலிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

இது குறித்து கிருஷ்ணகிரி காவல்துறை சூப்பிரண்ட் ஏ.ஜி. பாபு உள்ளூர் பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவிக்கையில்:

"குழந்தை கடத்தல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். கடத்தப்பட்ட குழந்தைகள் இன்னும் பல இடங்களில் விற்கப்பட்டதாகவும், தெரிய வந்துள்ளது. யார், யாரிடம் குழந்தைகள் விற்கப்பட்டது என்றும் விசாரித்து வருகிறோம். குழந்தை கடத்தலுக்கு சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கடத்தல் கும்பல் பிடிபட்டதும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் சிலர் தலை மறைவாகி விட்டனர். அவர்கள் பெயர், விபரம் பற்றி விசாரித்து வருகிறோம்.

லலிதாவை காவலில் எடுத்து விசாரிக்கும் போது தான் குழந்தை கடத்தல் சம்பவத்தில் மேலும் யார், யாருக்கு தொடர்பு இருக்கும் என்று தெரியவரும்." என்றார்.

கிரிஜா கடத்தி வந்த குழந்தைகளை லலிதாவிடம் விற்று விடுவார். குழந்தை கடத்தல் கும்பலுக்கு தலைவி போல் செயல்பட்டவர் லலிதா. இவருக்கு குழந்தைகளை கடத்தி தந்தவர் தான் கிரிஜா, தனலட்சுமி, ஆகியோர் குழந்தைகளை கடத்தி ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்றுள்ளனர். இதன் மூலம் லலிதாவிற்கு பணம் குவிந்துள்ளது.

8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள லலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது புதுச்சேரி பகுதியில் புதிதாக கல்யாண மண்டபம் ஒன்றையும் கட்டி வருகிறார். இவருக்கு கிரிஜா தவிர தமிழகத்தில் மற்ற குழந்தை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இவர் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் லலிதாவை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

கருத்துகள் இல்லை: