வியாழன், 3 ஜூன், 2010

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் போலி டாக்டர்கள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் போலி டாக்டர்கள் செயல்படுவதாக இந்திய மருத்துவ சங்கத்துக்கு புகார்கள் வந்தன. அதன்படி மாவட்ட வாரியாக யார்  யார் போலி டாக்டர்கள், எம்.பி. பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க செயலாளர் டி.என்.ரவிசங்கர் கூறுகையில், போலி டாக்டர்கள் பட்டியலை டி.ஜி.பி.யிடம் ஒப்படைத்துள்ளோம். டி.ஜி.பி.யும், கூடுதல் டி.ஜி.பி.யும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளனர்.

தகுதியில்லாத போலி டாக்டர்கள் தவறானமுறையில் சிகிச்சை அளித்து நோயாளிகளை மேலும் பாதிப்படையச் செய்கிறார்கள். சிலர் ஆபரேஷன் கூட செய்து நோயாளி சாவுக்கு காரணமாகிறார்கள் என்றார்
சில அறைகுறை வைத்தியர்கள் ஆங்கில மருத்துவம் பார்க்கிறார்கள். சில சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கிறார்கள் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே.பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை தலைவர் எஸ்.எஸ்.சுகுமார், சேர்மன் கே.விஜய்குமார் ஆகியோர் கூறுகையில், போலி மருத்துவர்கள் தற்போதுள்ள சட்டப்படி 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ. 1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றனர்.

கருத்துகள் இல்லை: