வியாழன், 2 மார்ச், 2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நானும் MLA-வாக பங்குபெறுவதில் பெருமை".. EVKS இளங்கோவன் பேட்டி!

 கலைஞர் செய்திகள் - Lenin  :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நானும் எம்.எல்.ஏ-வாக பங்குபெறுவதில் பெருமையாக உள்ளது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
286 முதன்மை அலுவலர்கள், 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 62 அலுவலர்கள் என மொத்தம் 1,206 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.



இந்நிலையில் இடைத்தேர்தலில் தொடர்ந்து திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 53,735 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் 20,041 வாக்குகள் பெற்று கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி உறுதியாகியுள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நானும் எம்எல்ஏ-வாக பங்குபெறுவதில் பெருமையாக உள்ளது.
மதச்சார்பற்ற கூட்டணி மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டதிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றுவேன் " என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: