திங்கள், 27 பிப்ரவரி, 2023

EWS சட்டம் - உயர்கல்வியில் பார்ப்பன ஆதிக்கத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும்

 Marudhamuthu Radhakrishnan  :  பிரபாகரன், தமிழ்த் தேசியம், தமிழர் என்று மட்டுமே ஓயாமல் உணர்ச்சி பொங்கப் பேசி அரசியல் நடத்தும் பெரியவர் நெடுமாறனும், சிறியவர் சீமானும் ஒரு அடிப்படையான கோட்பாட்டில் ஒன்றாகவே இணைந்து பயணிப்பவர்கள்.
அது என்னவென்றால் இவர்களின் தமிழ்த் தேசிய வரையறுப்பில் பார்ப்பனருக்கு முழுமையான இடம் உண்டு என்பது தான்.
இதற்கேற்ப இந்த குருவும் சீடரும் திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் (பெரியாரையும், அண்ணாவையும், கலைஞரையும், ஸ்டாலினையும்) முற்றாக வெறுத்து ஒதுக்கித் தள்ளி வந்துள்ளார்கள்.
இப்போது கூட நெடுமாறன் அவர்கள் தனது நேர்காணலில் திராவிடம் என்பதற்கு எந்தப் பொருளும் இல்லை என்றும் அதைத் தேவையில்லாமல் தொடர்ந்து உச்சரித்து வருகிறார்கள் என்றும் (ஆர்.எஸ்.எஸ்./பாஜக பாணியில்) தெரிவித்துள்ளார்.
ஆனால் திராவிடமும், பெரியாரும், அம்பேத்கரும் தலைமை தாங்காத தமிழ்த் தேசியம் நூற்றுக்கு நூறு போலியானது.


அத்தகைய தமிழ்தேசியம் தமிழ்நாட்டில் பரவுமானால்,  அதை நொடிப்பொழுதில் இந்துதேசியம் விழுங்கி செரிமானம் செய்து விடும்.  
எனவேதான் நெடுமாறனும், சீமானும் வளர்வதை இந்துதேசிய வெறியர்கள் உள்ளூர வரவேற்கிறார்கள்.
எனது இந்த அழுத்தமான நிலைப்பாட்டை உங்கள் மனதில் நன்கு பதிய வைப்பதற்காக இந்தப் பதிவின் மூலம் தற்போதைய மிகப் பெரிய அதிர்ச்சித் தகவல் ஒன்றை ஆதாரமாகக்  குறிப்பிடுகிறேன்.
அகமதாபாத்தில் ஒரு தலித் மாணவன்.
பெயர் தர்ஷன் சோலங்கி.
வயது பதினெட்டு.
தந்தை பிளம்பர் வேலை பார்ப்பவர்.
தாய் வீட்டு வேலை செய்பவர்.
அசுர உழைப்பு உழைத்து பம்பாய் ஐ.ஐ.டி-யில் பி.டெக் வகுப்பில் இடம் பிடித்துவிட்டார்.
படிக்கத் தொடங்கி மூன்றே மாதம் தான் கழிந்திருந்த நிலையில் கடந்த ஞாயிறு மதியம் (12 பிப்ரவரி) விடுதிக் கட்டிடத்தின் ஏழாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
காரணம் இந்தியாவின் ஐ.ஐ.டி-க்கள் அனைத்திலும் காலம் காலமாக நடந்துவரும் சாதிய வன்கொடுமை!
இதற்கு பலியாகும் சாதியினர் பிசி மற்றும் எஸ்.சி பிரிவினரே ஆவர்.
இந்தக் கொடிய வதை மூலம் சூத்திர பஞ்சம மாணவர்களைத் திட்டமிட்டு மட்டம் தட்டி அவர்களில் பலரைத் தற்கொலைக்கும் தள்ளிவிடுபவர்கள் பார்ப்பனரும் பிற முன்னேறிய சாதியினரும் தான்.
இதற்கு  மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்களும் உடந்தை என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
இதைத் தாங்கமுடியாத பல ஐ.ஐ.டி.க்களில் பயிலும் எஸ்.சி./பிசி  மாணவர்கள் "அம்பேத்கர்-பெரியார்  கல்வி வட்டம்" எனும் அமைப்புகளை  உருவாக்கி இந்தச் சித்திரவதைகளுக்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள்.
(பம்பாய் ஐ.ஐ.டி யில் அம்பேத்கர்-பெரியார்-புலே கல்வி வட்டம் இயங்கி வருகிறது)
மெட்ராஸ் ஐ.ஐ.டி.யிலும் பஞ்சம-சூத்திர மாணவர் அமைப்பு (அம்பேத்கர்-பெரியார்  கல்வி வட்டம் APSC ) இயங்கி வருகிறது.
மறுபுறம்  எதிரிகள் தரப்பிலும் இந்துத்துவா, பார்ப்பனிய வெறிபிடித்த மாணவர் அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. மெட்ராஸ் ஐ.ஐ.டி யின் வந்தேமாதரம் அமைப்பு அத்தகைய பார்ப்பனிய அமைப்பாகும்
பம்பாயில் தலித் மாணவன் தர்ஷன் தற்கொலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் இதே நேரத்தில் மெட்ராஸ்
ஐ.ஐ.டி யிலும் ஒரு சீனியர் மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
இன்னொரு மாணவன் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளான். (விவரங்கள் மர்மமாக உள்ளன)
நண்பர்களே,
இப்போது உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்---
பெரியாரிசம், அம்பேத்கரிசம், திராவிட அரசியல் ஆகியவற்றின் தலைமையை வெறுத்தொதுக்கி விட்டு தமிழ்த் தேசியம் பேசி வரும் நெடுமாறனும், சீமானும் விபீஷணர்களா இல்லையா?
இதையும் விடக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தப் பட வேண்டிய நிலை தான் உள்ளது.
அருள் கூர்ந்து இனி எவரும் தமிழ்த் தேசியத்தை மட்டுமே பேசினால் அவர்களை  ஒருபோதும் நம்பாதீர்கள்.
இத்தகையவர்கள் அனைவரும் பிரபாகரனை மட்டுமே தமிழரின் ஒரே சின்னமாகக் காட்டி, அதன் மூலம்
தந்திரமாகத் தந்தை பெரியாரையும், தந்தை அம்பேத்கரையும், திராவிட அரசியல் நீரோட்டத்தையும் அறவே ஒழித்துக் கட்ட  முயன்று வருபவர்களே,.
அதாவது, இவர்கள் இந்துதேசத்தின் அங்கமாகத் தமிழ்நாட்டை மாற்றுவதையே தங்கள் இலக்காக கொண்டவர்கள்.
உயர் தரக் கல்வியைக் கற்கவேண்டும் என்று துடித்த தலித் மாணவன் தர்ஷன் சோலங்கியின் தற்கொலை நமக்குக் கற்பிக்கும் பாடம் இது.
அன்புடன், மருதமுத்து
இத்துடன் எனது முந்திய வீடியோ ஒன்றை இணைத்துள்ளேன்.  அதை  எனது இந்த விளக்கப் பதிவுடன் இணைத்தே பகிரவும்.
அப்போதுதான்  தர்ஷனுக்கு முழுமையான நீதி கிடைக்கும்.
வேதனையுடன், மருதமுத்து

கருத்துகள் இல்லை: