ஞாயிறு, 20 மார்ச், 2022

இலங்கை தமிழர்களின் பெயர்களில் இருந்த ஜாதி அடையாளங்கள் எப்படி நீங்கின?

May be an image of text
இராதா மனோகர்  :இலங்கை தமிழர்களிடமும்  பெரியாரின் தாக்கம் உண்டு .. ஜாதிபெயர்கள் கிடையாது
பெயர்களில் உள்ள ஜாதி  குறியீடுகளை தமிழகத்தில் மட்டுமல்லாது  கடல் கடந்தது    
இலங்கை தமிழர்களின் பெயர்களிலும் இருந்து அறவே ஒழித்து விட்டது என்பது வியப்புக்கு உரிய மிக பெரிய வரலாற்று செய்தியாகும்!
அங்குள்ள எந்த அரசியல் கட்சியும் பெயர்களில் இருந்த ஜாதி குறியீடுகளை ஒழிக்க வேண்டும் என்று எந்த   காலத்திலும் பேசவில்லை. அவர்கள் எல்லோருமே ஏறக்குறைய ஜாதி ஆதிக்க வாதிகளாகவே இருந்தனர்.
அல்லது போதிய புரிதலற்று இருந்தனர்.  .
எவரும் எந்தக்காலத்திலும் ஜாதி அடையாள பெயர்களை பற்றி பேசாமலேயே  அந்த மக்கள் தங்கள்  ஜாதி குறியீடுகளை பாவிப்பதில்லை.
பெரியாரின் கருத்துக்கள் அங்கு தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.   தமிழக திரைப்படங்கள் பாடல்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் மூலம் தமிழகத்தை பற்றிய அறிவு இலங்கை தமிழர்களுக்கு ஓரளவு இருந்திருக்கிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு இலங்கை தமிழர் பற்றி யுத்ததிற்கு முன்பு வரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை.
சிங்களவர்கள் தமிழர்களை தாக்குகிறார்கள் என்றது தமிழகம் துடித்து எழுந்தது வரலாற்று உண்மை.
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் எம்மவரே என்று கொதித்து எழுந்த  தமிழகத்துக்கு யாழ் மையவாதிகளின் பார்பனீயத்தின் மீதான காதல் பற்றி தெரிந்திருக்கவில்லை.

வெறுமையான தமிழ் தேசியவாதிகளான இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இயக்கவாதிகளுக்கும்  சமூகநீதி  திராவிடம்  பகுத்தறிவு சுயமரியாதை போன்ற சொற்களே வேப்பங்காயாக கசந்ததில் வியப்பில்லை .
கம்யுனிசத்தை விட  மோசமான எதிரியாக திராவிட கோட்பாட்டை வெறுத்தார்கள் .
அதற்கு முக்கியமான ஒரு காரணமாக சாதி மறுப்பு என்று மட்டும் கூறிவிடமுடியாது , அதையும் தாண்டி சுய மரியாதையை சமூகநீதி போன்ற கருத்தியல்கள் இந்த ஒவ்வாமைக்கு காரணம் என்றெண்ணுகிறேன்.

பார்ப்பனீயத்தின் அசல் வாரிசுகளாக இலங்கை  சாதிய கட்டமைப்புவாதிகள் இருக்கிறார்கள்.
இவர்களையும் மீறிக்கொண்டே அங்கு பெரியாரின் தாக்கம் ஈழத்திலும் இருந்திருக்கிறது.

பராசக்தி படமும் அதன் வழி ஒட்டி வந்த ஏராளமான திரைப்படங்கள் சுயமரியாதை கருத்துக்களை ஓரளவு மக்கள் மனதில் விதைத்திருந்தன.

ஜாதி அடையாள பெயர்கள் பாவிப்பது ஒரு மோசமான அநாகரீக பழக்கம்  என்ற கருத்தை ஈழத்தில் பதித்தது நிச்சயமாக திராவிட இயக்கங்கள்தான்.
இன்று பலரும் மறந்து விட்ட வரலாற்று உண்மை இதுவாகும்.

திரைப்படங்கள் மாத்திரம் அல்லாது தமிழக பத்திரிகைகளும்  திராவிட கருத்துக்களை ஓங்கி ஒலித்தமையையும் கருத்தில் கொள்ளத்தக்கது.
தமிழ்நாட்டில்  திராவிட முன்னேற்ற கழகம் சமுக அரசியல் களத்தில் வேகமாக எழுச்சி பெற்று கொண்டு வந்த நிகழ்வுகளை  சிங்கள ஆட்சியாளர்கள் மிகுந்த சந்தேகத்துடனும் கொஞ்சம் திகிலுடனும் நோக்கினர்,

சிங்கள மக்களின் கவனத்தை  திமுக கவர தொடங்கியது
இது தமிழ் தலைவர்களுக்கு ஒரு நம்பிகையை கொடுத்தது .
ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு திமுகவின் பக்கக் பலம் தேவை என்ற எண்ணம் உருவானது.

சிங்கள மேல்மட்ட சமுகத்திற்கு திமுக மீது ஒரு திகைப்பு உருவானபோது அதுவே தமது பலம் என்ற எண்ணம் இலங்கை தமிழ் தலைவர்களுக்கு உருவானது.

 பலம் பொருந்திய சிங்கள தலைமைக்கு ஒரு மறைமுக செய்தியாக திமுக தலைவர்களோடு தங்கள் உறவை  மேம்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டார்கள் .
இலங்கை தமிழரசு கட்சி கூட்டங்களில் பட்டிதொட்டி எல்லாம் "எங்கள் திராவிட பொன்னாடே கலை வாழும் தென்னாடு"  என்ற பாடலே ஒலித்தது.
பராசக்தி வசனங்களே அன்றைய ஈழத்தமிழ் இளைஞர்களின் ஒரே வசனமாக இருந்தது .

1968 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நிகழ்சிகளை  ஒவ்வொரு ஈழத்தமிழரும்  தங்கள் வீட்டு நிகழ்ச்சியாக எண்ணி அன்றாடம் பேசிய நிகழ்வுகள் எல்லாம் ஒரு வரலாற்று பதிவாகும் .
திராவிட முன்னேற்ற கழக தலைவர்களின் காலண்டர் படங்கள் பலரது வீடுகளையும் அலங்கரித்தது ,

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள் பெரியார் அண்ணா கலைஞர் எம்ஜியார் போன்றவர்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும் இடங்களாக இருந்தமை விரிவாக எழுதப்பட வேண்டிய ஒரு வரலாற்று பதிவாகும் .
இலங்கை தமிழ் தலைவர்களுக்கு திமுக மீது ஒரு ஒரு எழுச்சி கலந்த மயக்கம் இருந்தது.

பின்னாளில் வந்த வீரபாண்டிய கட்டபொம்மன்  திரைப்படம் கூட மக்களை ஒரு போருக்கு தயார் படுத்தியதாகவே வரலாறு அமைந்தது.  
திரு . அமிர்தலிங்கம் . திரு .ராஜதுரை  தலைவர் செல்வநாயகம்  சிவசிதம்பரம் கதிரைவேற்பிள்ளை செனேட்டர் நடராசா போன்றவர்கள் தமிழகம் வந்து பெரியார் அண்ணா கலைஞர் நெடுஞ்செழியன் போன்றோரை சந்தித்து கருத்துக்களை பரிமாறினர்.
இந்த நிகழ்வுகளால் திராவிட முன்னேற்ற கழக தலைவர்களின் படங்கள்  இலங்கை தமிழர்களின் வீடுகளின் சுவர்களை அலங்கரிக்க தொடங்கினர் .
பின்பு மெதுவாக குறிப்பாக எம்ஜியாரின் அண்ணா திமுக உருவான பின்பு அதன் தாக்கமோ என்னமோ திராவிட கருத்தாக்கம் மெதுவாக குறையதொடங்கியது .. அந்த இடத்தை வெறும் சமய பிரசாரமும்தமிழ் தேசியமும் நிரப்ப தொடங்கியது .

இலங்கை தமிழர் பகுதிகளில் கண்ணுக்கு  தெரிந்த இடங்களில் எல்லாம் எதாவது ஒரு கோவில் இருந்தே தீரும்  இந்த கோவில் கலாச்சாரத்தை ஒட்டியே அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் தங்கள் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டுள்ளன. அங்கு இந்துக்கள் மட்டும் அல்லாது கிறிஸ்தவர்களும் ஜாதியை பேணுவதில் தங்கள் ரோலை ஓரளவு முன்னிறுத்தியே வந்துள்ளார்கள்

யாழ்ப்பாண கலாச்சாரத்தை கந்தபுராண கலாசாரம் என்று சமுகத்தின் மேல் தட்டு மக்கள்  ( Jaffna Elites ) எப்பொழுதும் பெருமையோடு கூறுவர்.
இந்த யாழ் / கந்த புராண கலாசாரம் என்ற சொற்களில் குறிப்பிடப்படுவது உண்மையில் ஒரு ஜாதி கட்டமைப்பை இறுக்கமாக வைத்திருக்கும் தந்திரம்தான் இந்த கந்த புராண கலாச்சாரம் என்பது.

கருத்துகள் இல்லை: