சனி, 26 மார்ச், 2022

மூப்பில்லா தமிழே தாயே.... முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்

 மாலைமலர் : ஏ.ஆர்.ரஹ்மானின், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல்,
பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

‘மூப்பில்லா தமிழே தாயே’ இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோரின் கூடுதல் குரல்கள் தந்துள்ளனர்.

தற்போது ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் யூடியூப்பில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.


கருத்துகள் இல்லை: