சனி, 26 மார்ச், 2022

வேலூரில் எலக்ட்ரிக் பைக் விபத்து: அரசியல் தலைவர்கள் கோரிக்கை!

 மின்னம்பலம் : வேலூரில் நேற்றிரவு சார்ஜ் போட்டிருந்த எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலூர் அல்லாபுரத்தில் மின்சார இருசக்கர ஊர்தி வெடித்ததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை துரைவர்மா, 13 வயது மகள் பிரீத்தி ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.


அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். மின்சார இரு சக்கர ஊர்தியை சார்ஜரில் இணைத்து விட்டு உறங்கியதால், அதிக மின்சக்தி ஏறியவுடன் அதை தாங்க முடியாமல் பேட்டரி வெடித்தது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணையின் முடிவில் தான் இதை உறுதி செய்ய இயலும். மின்சார இரு சக்கர ஊர்தியும், அதில் மின்னேற்றம் செய்வதும் தமிழகத்திற்கு புதிய தொழில்நுட்பம் ஆகும். அத்தொழில்நுட்பத்தை அனைவரும் பழகும் வரை மின்னூர்திகளை இயக்குவது, மின்னேற்றம் செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுகுறித்து அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வரும் முன்பே அதனுடைய தரம் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்,

“இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார், பைக்குகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில், பைக் சார்ஜ் செய்யும் போது பேட்டரி வெடித்து இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது மக்களிடையே ஒருவித அச்ச உணர்வையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும் போது தானாகவே வெடிப்பது என்பது அதன் தரத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. எனவே, எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வரும் முன்பே அதனுடைய தரம் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதன்மூலம் தரமற்ற வாகனங்கள் விற்பனை செய்வது தடுக்கப்படுவதோடு, விபத்துகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அப்போதுதான் மக்களுக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது நம்பிக்கையும் ஏற்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த தந்தை மகள் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட எலக்ட்ரிக் பைக் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: