ஞாயிறு, 5 டிசம்பர், 2021

EXCLUSIVE முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் கொடுத்த மார்க்ஸ் டைம்ஸ் ஆப் இந்தியா கள ஆய்வு!.. நூற்றுக்கு 75

Mariathangaraj Jeyapal -  Samayam Tamil : கனமழை, வெள்ளத்தை தமிழக அரசு எப்படி கையாண்டது? சென்னையின் 16 தொகுதிகளிலும் ‘TOI சமயம் தமிழ்’ நேரடியாக மேற்கொண்ட கள ஆய்வின் முடிவுகள் இதோ!
தமிழகம் வரலாறு காணாத கனமழையை கடந்த மாதம் எதிர்கொண்டது. மாதம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கொரோனா நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் கனமழை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
2015 சென்னை வெள்ளத்தின் போது ஏற்பட்ட மழைப் பொழிவுக்கும் தற்போதைய மழைப் பொழிவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் பாதிப்பை பொறுத்தவரை கடந்த முறையைவிட இப்போது பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு இயந்திரம் வேகமாக இயங்கியதாக ஒரு பக்கம் அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் மீட்பு பணிகள் தாமதமானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. போக்குவரத்து தொடர்ந்து சவாலாக மாறின. இதற்கு அந்த ஆட்சி தான் காரணம், இந்த ஆட்சி தான் காரணம் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.
சுய உதவிக்குழு கடன் ரத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

சரி, சென்னையில் உள்ள சிட்டிசன்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ‘சமயம் தமிழ்’ களமிறங்கியது. சென்னையின் 16 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். சுமார் 300 பேருக்கும் மேற்பட்டோரிடம் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினோம். மக்கள் தங்கள் உள்ளத்திலிருந்து கொட்டிய வார்த்தைகளை அப்படியே பதிவு செய்துள்ளோம்.
எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா உண்ணாவிரதம்? உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

அரசின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண்களும் வழங்கியுள்ளனர் சென்னை மக்கள். அள்ளிக் கொடுத்தவர்களும் உண்டு, கிள்ளிக் கொடுத்தவர்களும் உண்டு, நம் மூலம் அரசுக்கு குட்டு வைத்தவர்களும், கை கொடுத்தவர்களும் கூட உண்டு.. ஒட்டுமொத்த சென்னை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் நடத்திய கள ஆய்வின் மூலம் மிகச் சரியாக புரிந்துகொள்ள முடியும்.

மழை பெய்யத் தொடங்கியதிலிருந்து ஸ்டாலின் களத்திலேயே மக்களோடு மக்களாக இருந்தது பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்தது, அதிகாரிகளையும், ஊழியர்களையும் துடிப்புடன் செயல்பட செய்துள்ளது. சம்பிரதாயத்துக்காக ஒரு நாள் மட்டும் களத்தில் இருப்பது போல் காட்டிக் கொள்ளாமல் முதல்வர் தொடர்ந்து களத்திலேயே இருந்ததை இதற்கு முன் பார்த்ததில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

இதே அரசு இயந்திரம் தான் இதற்கு முன்னரும் இருந்தது, ஆனால் இவ்வளவு வேகமாக இயங்கிப் பார்த்ததில்லை என்கிறார்கள். நிவாரணப் பணிகளும் தொடர்ந்து தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

டைம்ஸ் நவ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஷபீர் அகமது, “சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன் தீப் சிங் பேடி 24 மணி நேரமும் மீட்பு, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தார். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை அலாரம் வைத்து அப்டேட்டுகளை கேட்டுப் பெற்று முக்கிய உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பித்து வந்தார்” என்று கூறினார்

டெக்கன் ஹெரால்டு நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் சிவப்பிரியன் பேசும் போது “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தான் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பல ஆட்டோ ஓட்டுநர்களே கூறுவதை கேட்க முடிகிறது” என்றார்.

மேலும் அவர் முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். “வேட்டியை மடித்துக் கொண்டு களப் பணியாற்றிய முதல்வர்களை தமிழகம் இதற்கு முன்னரும் பார்த்துள்ளது. காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் இது போன்று மக்கள் பணிகளை ஆற்றியுள்ளனர். இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்போதுதான் பார்க்கின்றனர். ஸ்டாலின் அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அந்த வகையில் தற்போது மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஆனால் அடுத்த ஆண்டும் மீட்பு நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டிருக்க கூடாது. பாதிப்புகள் ஏற்படா வண்ணம் செயலாற்ற வேண்டும். அப்போது தான் இதை முழுவதும் மதிப்பிட முடியும்” என்று கூறியுள்ளார்.

* உங்கள் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் எவ்வளவு?

*மழை பாதிப்புகளை சரி செய்வதில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

*சென்னையில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

*தமிழக முதல்வரின் செயல்பாட்டுக்கு நீங்கள் வழங்கும் மதிப்பெண்கள் எத்தனை?

என்ற நான்கு கேள்விகள் தான் மக்களிடம் கேட்கப்பட்டது. மக்கள் ஒளிவுமறைவின்றி தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதில் 1 சதவீதம் மக்கள் 50 மதிப்பெண்களுக்குள் வழங்கினர். 50 முதல் 60 வரையான மதிப்பெண்களை 3 சதவீதம் மதிப்பெண்களை கொடுத்தனர்.

4 சதவீதம் மக்கள் 60 முதல் 70 மதிப்பெண்களை வழங்கினர். 80 முதல் 90 மதிப்பெண்களை இந்த அரசுக்கு வழங்கலாம் என 8 சதவீதம் மக்கள் தெரிவித்தனர். ஆச்சரியமளிக்கும் வகையில் 80 சதவீத மக்கள் 90 முதல் 100 மதிப்பெண்களை வாரிவழங்கியுள்ளனர்.

கனமழை வெள்ளத்தை தமிழக அரசு எப்படி கையாண்டது என்பதற்கு ஒட்டுமொத்தமாக சென்னை மக்கள் வழங்கிய மதிப்பெண்கள் நூற்றுக்கு 75.

கருத்துகள் இல்லை: