புதன், 8 டிசம்பர், 2021

கண்டமங்கலம் பாலியல் பலாத்காரம் செய்து தாய்- மகள் கொலை வழக்கில் அதிர்ச்சி

கண்டமங்கலம் அருகே கொலை வழக்கில் திருப்பம்: பாலியல் பலாத்காரம் செய்து தாய்- மகள் கொலை

 மாலைமலர் : தாய்-மகளை கற்பழித்து கொலை செய்த வாலிபரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்டை போலீசாரையும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரம்:  அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் கலித்திராம்பட்டு கண்டச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சரோஜா (வயது 75).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தட்சிணாமூர்த்தி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து சரோஜா அவரது மூத்த மகள் பூங்காவனம் (55) என்பவருடன் வசித்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று சரோஜா அவரது மகள் பூங்காவனம் ஆகிய 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அதிகாலையில் அந்த வீட்டுக்கு மர்ம மனிதர் ஒருவர் வந்தார். அவர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தார். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த தாய்-மகள் 2 பேரையும் சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் சரோஜா, பூங்காவனம் ஆகியோர் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அதன் பின்னர் அந்த மர்ம மனிதர் தாய்- மகளின் கழுத்தில் கிடந்த நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கொலை செய்யபட்ட தாய்-மகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தாய்-மகளை கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதரை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டனர்.

தாய்-மகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வாலிபரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை அடுத்த ஒட்டநந்தல் காலணி பகுதியை சேர்ந்த கவிதாஸ் (வயது30) என்பதும் இவர் சரோஜா மற்றும் அவரது மகள் பூங்காவனம் ஆகிய 2 பேரையும் கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாசை கைது செய்தனர்.

கவிதாசிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவை பின்வருமாறு:-

சரோஜா, பூங்காவனம் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கவிதாஸ் வீடு புகுந்து அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் அவர் மயக்கமடைந்த பிறகு அவர்கள் 2 பேரையும் கவிதாஸ் கற்பழித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அதன் பின்னர் கவிதாஸ் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றார். அங்கு தங்கி வேலை பார்த்த கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்த நாகலிங்கம்-அஞ்சம்மாள் தம்பதியை உருட்டுக் கட்டையால் கவிதாஸ் தாக்கினார்.

இதில் அவர்கள் அலறி துடித்தவாறு கீழே சாய்ந்தனர். அப்போது அஞ்சம்மாளையும், கவிதாஸ் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த கவிதாஸ் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கவிதாஸ் தாக்கியதில் படுகாயம் அடைந்த நாகலிங்கம்-அஞ்சம்மாள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட கவிதாஸ் மீது திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் பாலியல் வழக்கு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. கவிதாசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்-மகளை கற்பழித்து கொலை செய்த கவிதாசை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்டை போலீசாரையும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: