ஞாயிறு, 7 நவம்பர், 2021

முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை : செம்பரம்பாக்கம் ஏரி மீது கண் இருக்கட்டும்..அதிகாரிகளுக்கு உத்தரவு

 Rayar A  -   Oneindia Tamil :   சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் வரும் 9.11.2021 அன்று வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தகவல் வந்துள்ளது.


எனவே மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும்.
சார்நிலை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு அணைகளிலும், ஏரிகளிலும் நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக பல இடங்களில் இருப்பதால், பெய்து வரும் மழையுடன் கூடுதல் நீர் சேர்ந்து அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கவனமாக கண்காணித்து, ஏரிகள் மற்றும் ஆறுகளின் கரையோரங்களையும் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறைகள் செயல்பட வேண்டும்.

24 மணிநேரமும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணித்து, அதன் நீர் இருப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்றையே நாம் வெற்றிகரமாக சந்தித்து விட்டோம். கொரோனா காலக்கட்டத்தில் நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து நான் அறிவேன். தமிழ்நாடு வெற்றிகரமாக கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தியது குறித்து பிற மாநிலங்கள் பேசி வருகிறது. வெளிநாடுகளில் கூட புகழ்ந்து பேசக்கூடிய அளவிற்கு நாம் பணியாற்றி இருக்கிறோம்.

கொரோனா போல் அல்லாமல், வெள்ள பாதிப்பு குறித்து நமக்கு நன்றாக தெரியும். கனமழை ஏற்பட்டால் எந்தப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும், உயிர்சேதங்கள் எப்படி ஏற்படும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது, இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும். வெள்ளப் பாதிப்பிற்கு தற்காலிக தீர்வு மட்டுமே காணாமல், நீண்டக் கால நிரந்தர தீர்வுகளையும் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வென்றதைப் போல் இந்த பருவமழையும், புயலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள உங்கள் அனைவரும் ஒத்துழைப்பும் வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: