சனி, 13 நவம்பர், 2021

அண்டார்டிகா பென்குயின்: 2,000 கிலோமீட்டர் பயணித்து வந்தது ஏன்? கடல் சூழலில் மாற்றம் காரணமா?

பிபிசி தமிழ் : தன் இயற்கையான வாழ்விடமான அண்டார்டிகாவைச் சேர்ந்த ஒரு பென்குயின், குறைந்தபட்சம் 2,000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நியூசிலாந்தின் கடற்கரையோரத்தை அடைந்துள்ளது.
உள்ளூர் மக்களால் தற்போது ‘பிங்கு’ என்று அழைக்கப்படும் அடேலி பென்குயின் கடற்கரையில் தொலைந்து போனது போல் காணப்பட்டது.
பிங்கு பென்குயினை முதலில் கண்ட உள்ளூர்வாசியான ஹாரி சிங், அவர் முதலில் அதை ஒரு பொம்மை என்றே கருதியதாகக் கூறினார்.
நியூசிலாந்து நாட்டின் கடற்கரையில் அடேலி ரக பென்குயின்கள் மூன்றாவது முறையாக கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிரைஸ்ட்சர்ச் நகருக்கு தெற்கே உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கும் ஹாரி சிங் மற்றும் அவரது மனைவி, பேர்ட்லிங்ஸ் ஃப்ளாட் என்கிற கடற்கரையில் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வெளியில் நடந்து சென்றபோது பென்குயினை முதலில் கண்டனர்.


“முதலில் நான் பிங்குவை ஒரு மொம்மை என்று தான் கருதினேன், திடீரென்று அந்த பென்குயின் தன் தலையை அசைத்தது, பிறகு தான் அது உண்மையாகவே உயிருள்ள விலங்கு என்பதை உணர்ந்தேன்” என ஹாரி சிங் பிபிசியிடம் கூறினார்.

ஹாரி சிங்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள பென்குயின் காணொளி காட்சிகள், பென்குயின் தொலைந்து போய், தனிமையில் திரிவதைக் காட்டியது.

“அது ஒரு மணி நேரம் நகரவே இல்லை… பார்க்க சோர்வாக இருந்தது” என ஹாரி சிங் கூறினார்.

ஹாரி சிங் பென்குயின் மீட்பவர்களை அழைத்து, அதை காப்பாற்றும் பணிகளைத் தொடங்கினார். காரணம், பென்குயின் தண்ணீரில் இறங்கவில்லை, இதனால் கடற்கரையில் சுற்றித் திரியும் பிற வேட்டையாடும் விலங்குகளுக்கு பிங்கு பென்குயின் சாத்தியமான இலக்காக மாறியது.

“நாயோ, பூனையோ பென்குயினை வேட்டையாடி சாப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

நியூசிலாந்தின் தெற்கு தீவில் சுமார் 10 ஆண்டுகளாக பென்குயின்களை காப்பாற்றி மறுவாழ்வு அளித்து வரும் தாமஸ் ஸ்ட்ரேக்கை ஹாரி சிங் சந்தித்தார்.

பிங்கு பென்குயின், அண்டார்டிக் தீபகற்பத்தில் மட்டுமே பிரத்தியேகமாக வாழும் அடேலி பென்குயின் என்பதைக் கண்டு, ஸ்ட்ரேக் அதிர்ச்சியடைந்தார். ஸ்ட்ரேக் ஒரு கால்நடை மருத்துவருடன் சேர்ந்து, அதே மாலையில் பென்குயினைக் காப்பாற்றினார்.

நீர்சத்து குறைவு

பிங்குவுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்ட போது, அது எடை குறைவாகவும், நீர்ச்சத்து குறைவாகவும் இருப்பதாகக் காட்டியது. எனவே, பிங்குவுக்கு உணவுக் குழாய் வழியாக திரவ உணவு கொடுக்கப்பட்டது.

நாய்கள் இல்லாத, பேங்க்ஸ் தீபகற்பத்தில் ஒரு பாதுகாப்பான கடற்கரையில் பிங்கு பென்குயின் விடுவிக்கப்படும்.

நியூசிலாந்தின் கடற்கரையில் அடேலி ரக பென்குயின்கள் கண்டுபிடிக்கப்பட்டது, வரலாற்றில் மூன்றாவது முறை. இதற்கு முன் 1993 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்ததன.

நியூசிலாந்தில் அடேலி ரக பென்குயின்கள் அரிதாகவே காணப்படுகின்றன, எதிர்காலத்தில் அடேலி ரக பென்குயின்கள் அதிகம் தோன்றினால், அது கவலைக்குரிய அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

“ஆண்டுதோறும் அடேலி பெங்குயின்கள் வரத் தொடங்கினால், கடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என ஒடாகோ பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் பிலிப் செடான் தி கார்டியன் பத்திரிகை வலைதளத்திடம் கூறினார்.

“பெங்குயின்கள் எங்கு செல்கின்றன, அவை என்ன செய்கின்றன, அவற்றின் மக்கள்தொகை போக்குகள் எப்படி இருக்கின்றன என்பது தொடர்பான கூடுதல் ஆய்வுகள் நமக்கு கூடுதல் புரிதலைக்கொடுக்கும். அவை பொதுவாக கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பற்றி நமக்கு ஏதாவது வெளிப்படுத்தும்.” என்றார்.

கருத்துகள் இல்லை: