புதன், 8 செப்டம்பர், 2021

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர், உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (08/09/2021) காலை 09.33 மணிக்குச் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
புலமைப்பித்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவரும் நிலையில் தற்பொழுது சசிகலா அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

‘எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில்’ படத்தில் இடம்பெற்ற 'நான் யார் நான் யார்...' என்ற பாடலை எழுதியவர் புலமைப்பித்தன். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பல்வேறு பாடல்களை எழுதிப் புகழ் பெற்றார். குறிப்பாக, ‘இதயக்கனி’ படத்தில் இவர் எழுதிய 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...' என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது

கருத்துகள் இல்லை: