திங்கள், 6 செப்டம்பர், 2021

எடப்பாடி விரைவில் கைது?; ஆதாரம் சிக்கியதாக தகவல்!

Josephraj V | Samayam Tamil  :  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பது ஆவணங்களில் தெளிவாக இருப்பதாகவும், அவர் சிறைக்கு செல்வது உறுதி என்றும் தமிழக முக்கிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கணித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதன் பிறகு முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பஞ்சமி நிலங்களை மீட்டு நிலம் இல்லாத பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரச்சனையில் பிஜேபியும், ஆர்எஸ்எஸ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாற்று கருத்துகளை பரப்புகின்றனர்.

யாரை முட்டாளாக்குவதற்கு என்று தெரியவில்லை. எனவே இக்கருத்தினை வன்மையாக கண்டிோம். தமிழகத்தில் கடந்த 12 வருடங்களாக பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.
அதை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பது ஆவணங்களில் தெளிவாக உள்ளது. எனவே, அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்படுவது உறுதி.

இந்தியாவில் உள்ள பட்டியலின மாணவர்களின் மேற்படிப்பு கனவை சிதைப்பதற்காக தான் மத்திய பிஜேபி அரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்.

பட்டியலின கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு முத்துசாமி கூறினார். இந்த பேட்டியின்போது மாநில பொருளாளர் முருகன் மற்றும் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிச்சைமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை: