புதன், 17 பிப்ரவரி, 2021

கனலரசன் கைது ..`ராமதாஸின் தூண்டுதலே காரணம்..!’ -சொல்கிறார் காடுவெட்டி குரு மனைவி

vikatan - க.குணசீலன் : அன்புமணியின் வளர்ச்சிக்கு நாங்க தடையாக இருப்போம் என்கிற காரணத்தால் ராமதாஸ் எங்க குடும்பத்தினரை பல வகையில் சித்ரவதை செய்வதாக காடுவெட்டி குரு குடும்பத்தின் தரப்பில் குற்றம் சாட்டி வந்தனர். அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள காடுவெட்டி குருவின் சமாதிக்கு வந்த அவரின் மனைவி சுவர்ணலதா, “என் மகன் கனலரசன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராமதாஸ் தான் காரணம். அவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த கைது நடந்துள்ளது. உடனடியாக அவனை விடுதலை செய்யவில்லை என்றால், நான் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவேன்” என எச்சரித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சங்க தலைவராக இருந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு, கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து குரு குடும்பத்தினருக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

“அன்புமணியின் வளர்ச்சிக்கு நாங்க தடையாக இருப்போம் என்கிற காரணத்தால் ராமதாஸ் எங்க குடும்பத்தினரை பல வகையில் சித்ரவதை செய்கிறார்” என காடுவெட்டி குரு குடும்பத்தின் தரப்பில் குற்றம்சாட்டி வந்தனர். குரு மறைவுக்கு பிறகு அவரது மனைவி சுவர்ணலதாவை ராமதாஸ் மிரட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும் பின்னர் ராமதாஸ் செயலை உணர்ந்து வெளியே வந்து விட்டதாகவும் கூறி வந்தனர்.

காடுவெட்டி குரு மகன் கனலரசன்
காடுவெட்டி குரு மகன் கனலரசன்

இந்நிலையில் காடுவெட்டி குருவின் மகன், மஞ்சள் படை என்ற அமைப்பை நடத்தி வருவதுடன், அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். மஞ்சள் படையின் கொடியினை பல்வேறு இடங்களில் ஏற்றி வந்தார். இதற்கு பா.ம.க தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாக சொல்லப்பட்டது. இதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்ற சென்ற கனலரசனை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் பழைய வழக்கு ஒன்றில் 15 நாட்கள் ரிமாண்ட் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “ராமதாஸின் தூண்டுதலின் பேரில் ஆட்சி மேலிட உத்தரவால் கனலரசன் கைது செய்யப் பட்டதாகவும், அரியலூர் வந்த தி.மு.க தலைவர் வந்த ஸ்டாலினை கனலரசன் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக ராமதாஸ் காய்களை நகர்த்தி போலீஸுக்கு அழுத்தம் கொடுத்து கனலரசனை சிறையில் அடைத்து விட்டதாக” குருவின் தங்கை செந்தமாரை குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் காடுவெட்டியில் அமைந்துள்ள குருவின் சமாதிக்கு அவரது மனைவியும், கனலரசனின் அம்மாவுமான சுவர்ணலதா இன்று வந்தார். கண்கள் கலங்க குருவின் போட்டோ முன் நின்று வணங்கியவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மஞ்சள் படையின் கொடியினை ஏற்ற சென்ற என் புள்ளை கனலை கைது செய்து சிறையில் அடைச்சிருக்காங்க.. ராமதாஸின் தூண்டுதலில் பேரிலேயே இந்த கைது நடந்துள்ளது. உடனே அவனை விடுதலை செய்ய வேண்டும். தேர்தல் நேரம் இல்லையென்றால் பெரிய பிரச்னை ஆகிவிடும்.

 விடுதலை செய்யப்படவில்லை என்றால் நானே களத்தில் இறங்கி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன். மஞ்சள் படையின் கொடியை எங்கும் ஏற்றுவேன். குருவோட புள்ளை கொடி ஏற்றாமல் வேறு யார் ஏற்றுவார்? அதுமட்டுமில்லாமல் கொடி தானே ஏற்றினான்..? வேறு எதாவது பிரச்னை செய்தானா..? கொடி ஏற்றுவதில் என்ன தவறிருக்கிறது.

ஏன் இப்படி பண்றாங்க அவன் வளரக்கூடாது என்பதற்காகவே இதனை செய்றாங்க. சின்ன பைனான என் புள்ளைய கைது செய்ய காரணம் என்ன. ஏற்கனவே அவன படிக்க விடாம செஞ்சாங்க. அவன் மேல ஆயிரம் கேஸ் போட்டாங்க. என் கணவர் குரு இருந்திருந்தா யாராவது கிட்ட வந்திருப்பாங்களா வந்திருக்க முடியுமா?

எந்த இடத்திலும் காடுவெட்டி குரு படம் தெரியக்கூடாது, அவர் குடும்பம் எங்கும் வரக்கூடாது, வளரக்கூடாது என்பதற்காக ராமதாஸ் தூண்டுதலின் பேரில் இவை நடக்குது. எனது கணவர் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளின் போது அவரது நினைவிடத்திற்கு வந்து யாரையும் மரியாதை செய்ய விடாமல் போலீஸார் தடை உத்தரவு போட்டு தடுப்பது ஏன்?

ஜெயலலிதா, கருணாநிதியின் நினைவிடத்திற்கு 144 தடை உத்தரவு போடாத நிலையில் என் கணவரின் நினைவிடத்திற்கு வருவதற்கு மட்டும் ஏன் தடை உத்தரவு போடுகின்றனர்? இது கண்டிக்கதக்கது. எனக்கும் பா.ம.க-வுக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் ராமதாஸிடம் பேசுவதில்லை.

எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் என் அம்மா வீட்டில் வசித்து வந்தேன். குரு இருந்தவரை நாங்க வெளியே தெரியாமல் இருந்தோம். உடனடியாக கனலரசனை விடுதலை செய்ய வில்லை என்றால் நான் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவேன்” என எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை: