சனி, 20 பிப்ரவரி, 2021

காந்தி சிலை - கரூர் எம்பி ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்

minnambalam : கரூரில் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் 70 ஆண்டுகள் முன் நிறுவப்பட்ட காந்தி சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கரூர் பயணத்தை ஒட்டி அகற்றிவிட்டு புதிய சிலையை வைக்க முயன்றிருக்கிறார்கள்.ஆனால் எவ்வித அனுமதியும் நிர்வாக நடைமுறைகளுமில்லாமல் அந்த காந்தி சிலை அகற்றப்பட்டிருக்கிறது என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நேற்றே குற்றம் சாட்டினார். மேலும் புதிய சிலைக்கான பீடம் மிகவும் பலவீனமான முறையில் தரமற்ற பொருட்கள் கொண்டு கட்டப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இன்று இதைக் கண்டித்து காங்கிரஸார் சார்பாக போராட்டம் நடைபெற்றபோது ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர் போலீசார். இதனால் நிலைகுலைந்து போன ஜோதிமணி போலீஸுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினார். இது கரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது,

இதுகுறித்து ஜோதிமணி, “கரூரில் 70 ஆண்டுகள் முன் நிறுவப்பட்ட காந்தி சிலையைஅகற்றியுள்ளார்கள். அந்த இடத்தில், அஸ்திவாரம் இல்லாமல் தரமற்ற,கையால் உரசினாலே பொரிந்துவிழுகிற ஒரு திடீர் கட்டுமானத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த தரமற்ற கட்டுமானம் சிதைந்து விழுந்தால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் . இதை தட்டிக் கேட்ட எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கிறது அதிமுக அடிமை அரசு! ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரையே இவ்வளவு கண்ணியமற்று நடத்தும் இந்த எடப்பாடி அரசில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது? ஊழலும்,அராஜகமும் தலைவிரித்து ஆடுகிற எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது” என்று கூறியுள்ளார். கரூர் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி இதுகுறித்து,

“எவ்வித அரசாணையும் இல்லை. எவ்வித டெண்டரும் விடவில்லை. தன் இஷ்டத்துக்கு காந்தி சிலையை அகற்றி, சிலைக்கு அஸ்திவாரம் கூட இல்லாமல் வேலையை துவக்கி, கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா காந்தி சிலையை அவசர கதியில் உறுதியின்றி வேக வேகமாக கட்டி, அதை பழனிசாமி வந்து திறந்து வைக்க அரசு வேக வேகமாக வேலை பார்க்கிறது. 50 ஆண்டு வரலாறு அந்த சிலைக்குள்ளது. அதை மறைத்து திறப்பாளர் என பழனிசாமியின் பெயரை வைக்க நாடகம் நடக்கிறது. அதை தட்டிக்கேட்ட கரூர் எம்பி ஜோதிமணியை ஒரு பெண் என்றும் பாராமல் பலவந்தமாக கைதுசெய்துள்ளது காவல்துறை.இந்தக் கைது கண்டனத்துக்குரியது. ஆட்சியில் இருந்தால் எல்லாமே தங்கள் சொத்து, தங்கள் விருப்பம், தான் வைத்ததே சட்டம் என்ற அதிமுகவின் மமதை அழியும் நாள் வெகுதூரத்தில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இதுகுறித்து உடனடியாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில்,

“கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை சிதிலமடைந்த காரணத்தால் புதியதாக சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த சிலை அமைக்கும் பணியை பார்வையிட சென்ற கரூர் மக்களவை உறுப்பினர் எஸ். ஜோதிமணி கட்டுமானப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாக கூறி கடும் ஆட்சேபனையை தெரிவித்தார். சிலையின் பீடத்தில் கை வைத்ததுமே, அவை அனைத்தும் உதிர்ந்து போகிற வகையில் தரமற்ற வகையில் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், மகாத்மா காந்தியின் சிலைக்கு அமைக்கப்படுகிற அடித்தளம் வலுவானதாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினார்.

இதற்கு அரசு அதிகாரிகள் எந்த உத்தரவாதத்தையும் தராத நிலையில், போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்த மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் எஸ். ஜோதிமணியை காவல்துறையினர் கைது செய்து, குண்டுக்கட்டாக பலவந்தமாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி உள்ளனர். இந்த காட்சியை பார்க்கிற போது தமிழகத்தில் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு விரோதமான அடக்குமுறையை ஏவிவிடுகிற காட்டாட்சியாகவே தமிழக ஆட்சியாளர்களை கருத வேண்டியிருக்கிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: