வியாழன், 18 பிப்ரவரி, 2021

பாலியல் ரீதியாக துன்புறுத்தி சிறுவன் கொலை: குற்றவாளிக்கு 3 தூக்கு!

minnambalam :  புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் நம்பர்-1 அம்பிகா பார்க் பகுதியைச் சேர்ந்தவர் டானிஷ் படேல் (34). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் அருகே உள்ள ஒரு தனியார் குவாரியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். 2019 டிசம்பரில், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை டானிஷ் படேல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 18 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.... இதுதொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டானிஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று நீதிபதி ஆர்.சத்யா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் 3 பிரிவுகளுக்கு தலா ஒரு தூக்கு என மூன்று தூக்கு தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும், சிறுவனை தனியாகக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.

முன்னதாக புதுக்கோட்டையில், ஏழு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆறே மாதத்தில் குற்றவாளிக்கு நீதிபதி சத்யா 3 தூக்கு தண்டனை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை: