வியாழன், 19 செப்டம்பர், 2019

இனியாவது உணரட்டும் ஹிந்தி வெறியர்கள்.

Muralidharan Pb : 350 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவன் கூட நாங்கள் வணிகம் செய்ய வந்திருக்கிறோம் என்றான். அன்று அதை அறியாத மன்னர்கள் நம்பி ஏமாந்து போனார்கள். பிறகு மக்கள் அவனுக்கு அடிமையானோம்.
அவனை விரட்ட நூறாண்டிற்கு மேல் பெரும் கூட்டத்தை உருவாக்கி, ஒன்றிணைத்து, போராடிய போது தானே வெளியேறினான்? நம் சொத்துக்களை வரி என்ற பெயரில் சிறிது சிறிதாக எடுத்துச் சென்றான்.
இன்று இந்தியா முழுவதும் இணைப்பிற்கு இந்தி கட்டாயம் வேண்டும் என்று கூறிவிட்டு, எதிர்ப்பு சொந்த கட்சி ஆளும் மாநிலத்திலேயே வந்தபடியால் திக்கு தெரியாது அமித் ஷா வேறு வழியின்றி மாற்றி பேசி சமாதனங்கள் கூறி பிரச்சனையை அழுத்தி விட்டார்.
மெய்யில் இவர்கள் மிக மிக மோசமானவர்கள். இதில் காங்கிரஸ் பாஜக பாகுபாடே கிடையாது. இரண்டு கட்சிகளும் ஒன்று தான்.
இந்தியைக் கொண்டு இந்தியாவை இணைக்க எத்தனிக்காமல் இந்தியர் அனைவரும் ஒன்று என்றாலே இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். இதை பலமுறை தமிழகம் குறிப்பாக திராவிட இயக்கம் சொல்லியும் கேட்காததன் விளைவு இன்று வரை குழுப்பம்.
இவ்வளவு ஏன்? ஆரம்பத்தில் இந்தி கட்டாயம் வேண்டும் என்று கூறிய ராஜாஜி கூட இறுதியில் தமிழகம் இந்தியை தவிர்த்தது தவறல்ல என்று உணர்ந்துக் கொண்டார்.
இப்போது, பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய முயலாமல் திசை மாற்றம் செய்ய என்ன முடியுமோ அதை செய்கிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எத்தனை காலம் தொடரும்?
இந்தி கற்றுக் கொள்ளாமல் போனதால் தமிழனோ, கன்னடனோ, தெலுங்கனோ, மலையாளியோ பின் தங்கியிருந்தால் அவர்கள்(காங்கிரஸ்-பாஜக) சொல்வது ஏற்புடையது.
இந்தியை ஏற்று தாய்மொழியை மறந்த மாநிலங்களில் ஏன் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது?

தாய் மொழி மற்றும் ஆங்கிலம் கற்ற தென்னிந்தியன் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்ததையும் இந்தி மட்டுமே பேசும் மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் ஏன் எல்லா விதத்திலும் பின்னடைந்து போய் கிடக்கின்றனர்?
சாதி, மதமாச்சர்யம் முதன்மையானவை. இன்னொரு காரணி தாய்மொழி. நமக்கு கிடைத்த நல்ல தலைவர்கள் அங்கு கிடைக்காமல் போனதும் ஒரு காரணி. ஆனாலும் இங்கு தோன்றிய தலைவர்களின் பங்களிப்பை பாராட்ட மனமில்லாமல் சங்கிகளும், அவர்களின் அடிமைகள் என பல குழுக்களாக சுற்றும் மற்ற அடிப்படை வாத இயக்கங்களும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து ஏளனமாக பேசினாலும், உண்மையை மறைக்க முடியாது.
தமிழகம் செய்ததை கடைபிடித்து இருந்தால் தென் இந்தியா போல் வடகிழக்கு, வட இந்தியாவும்(சில மாநிலங்கள் தவிர்த்து) வளர்ச்சி அடைந்திருக்கும்.
இனியாவது உணரட்டும் ஹிந்தி வெறியர்கள்.

கருத்துகள் இல்லை: