வியாழன், 19 செப்டம்பர், 2019

நீதிபதியிடம் முறையிட்ட ப.சிதம்பரம் !நான் பயன்படுத்தியதால் நாற்காலியைக் கூட எடுத்துவிட்டார்கள்!' -

P Chidambaramvikatan :ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு பெறப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 5ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையின் 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டார். பொருளாதாரக் குற்றங்கள் புரிவோர் மற்றும் அதுதொடர்பான வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக இருப்போர் பொதுவாக திகார் சிறையின் 7வது பிளாக்கில் அடைக்கப்படுவார்கள். அதேபோல், அந்த பிளாக்கின் 15வது எண் கொண்ட அறையில் அவர் அடைக்கப்பட்டார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரமும் இதே அறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



14 நாள்கள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பாக ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்ட துஷார் மேத்தா வாதிட்டார். சிபிஐயின் இந்த கோரிக்கைக்கு ப.சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.



அவர் தரப்பில் வாதிட்ட கபில் சிபல், `73 வயதான ப.சிதம்பரம், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்காமல் ஜாமீன் வழங்க வேண்டும்' என்று வாதிட்டார். அதேபோல், ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி, வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே நீதிமன்றக் காவலை நீட்டிக்க முடியும் என்பதை பல்வேறு நீதிமன்றத் திர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதாடினார்.







நீதிபதியிடம் பேசிய ப.சிதம்பரம், `என்னுடைய அறைக்கு வெளியே வழக்கமாக நாற்காலிகள் இருக்கும். பகல் நேரங்களில் அந்த நாற்காலிகளில் நான் அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால், அவற்றை நான் பயன்படுத்துகிறேன் என்பதால், இப்போது எடுத்துவிட்டார்கள். இப்போது வார்டன் கூட நாற்காலி இல்லாமல்தான் இருக்கிறார்'' என்றார்.



அதைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `3 நாள்களுக்கு முன்புவரை அவர் நாற்காலிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார். இப்போது அதை எடுத்துவிட்டனர். அதேபோல், அவருக்கு வழங்கப்பட்டிருந்த தலையணைகளும் இப்போது எடுக்கப்பட்டுவிட்டது' என்றார்.


இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு,`திகார் சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நாற்காலிகள் வைக்கப்படுவதில்லை. இது ஒரு சின்ன பிரச்னைதான். இதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை' என்று வாதிட்டது. இந்தநிலையில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார்.
என்னுடைய அறைக்கு வெளியே வழக்கமாக நாற்காலிகள் இருக்கும். பகல் நேரங்களில் அந்த நாற்காலிகளில் நான் அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால், அவற்றை நான் பயன்படுத்துகிறேன் என்பதால், இப்போது எடுத்துவிட்டார்கள்.
நீதிபதியிடம் ப.சிதம்பரம் முறையீடு
வலுவான காரணங்கள் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது? என சிதம்பரம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு டெல்லி எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ப.சிதம்பரத்துக்கு தினசரி உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை: