வியாழன், 20 ஜூன், 2019

மஞ்சுநாதனிடம் இருக்கும் வீடியோ; போட்டோக்களை அழியுங்கள்!' - கமிஷனரிடம் நடிகை நிலானி

vikatan.com - எஸ்.மகேஷ் - கே.ஜெரோம் : `என் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் போட்டோக்கள் மஞ்சுநாதனிடம் உள்ளன. அவற்றைக் கைப்பற்றி அழித்துவிடுங்கள்' என்று நடிகை நிலானி, போலீஸ் உயரதிகாரிகளிடம் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் நடிகை நிலானி. இவர், இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``கடந்த 9 மாதங்களுக்கு முன் சில நிகழ்வுகளால் என்னைக் குறித்த செய்திகள் வெளியாகின. அதைப்பார்த்த சிலர் எனக்கு உதவி செய்வதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் மஞ்சுநாதன். அவர் என்னிடம் வெளிநாட்டில் இருப்பதாகவும் இந்தியா வரும்போது உதவி செய்வதாகவும் கூறினார். என்னுடன் நண்பர்போல பழகினார். நேரில் என்னைச் சந்தித்தபோது மஞ்சுநாதன், தனக்கு திருமணமாகவில்லை. இதனால் என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகக் கூறினார். நானும் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மஞ்சுநாதனிடம் உங்களுடைய பெற்றோர் சம்மதித்தால் திருமணத்துக்குச் சம்மதம் என்று கூறினேன். இந்தச் சமயத்தில் எனக்கு செல்போன் வாங்கித் தந்தார். ரகசியமாகத் திருமணம் செய்ய என்னை வற்புறுத்தினார்.
நான் அதற்கு மறுத்ததால் செல்போனை எடுத்துச் சென்றுவிட்டார். அதன் பிறகு தன்னுடைய தாயாரை என்னுடன் பேச வைத்து என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் மஞ்சுநாதன். அப்போதுதான் மஞ்சுநாதனுக்குத் திருமணமாகி குழந்தையும் இருக்கும் தகவல் தெரியவந்தது. அதை அவரின் மாமனாரும் மனைவியும் என்னிடம் கூறினர்.
 இதுகுறித்து மஞ்சுநாதனிடம் கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. இதனால் மஞ்சுநாதனின் மனைவி மற்றும் மாமாவின் ஆலோசனை பேரில் அவரிடமிருந்து விலகி வேறு இடத்துக்குச் சென்றுவிட்டேன். போன் நம்பரையும் மாற்றினேன். ஆனால், மஞ்சுநாதன் என்னை விடாமல் என் போனிலிருந்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் செய்து சைக்கோபோல ஆபாசமாகப் பேசினார். ஒரு நாளைக்கு 400 போன் கால் செய்து தொல்லை கொடுத்தார். மேலும், என்னைப்பற்றி அவதூறான தகவல்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்தார். இதன்காரணமாக மஞ்சுநாதன் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்தச் சமயத்தில் எப்படியோ என் போன் நம்பரைக் கண்டுபிடித்த மஞ்சுநாதன், என்னிடம் திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டுகிறார். இல்லையெனில் என்னுடைய குளியல் வீடியோக்களையும் அவர் எடுத்திருப்பதாகவும் செல்போனில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டுகிறார். அதோடு மட்டுமல்லாமல் என்னைக் கொலை செய்துவிடுவதாகவும் ஆசிட் வீசுவதாகவும் குழந்தைகளைக் கடத்துவதாகவும் கூறுகிறார். கடந்த மூன்று மாதங்களாகப் பல நம்பர்களிலிருந்து எனக்குத் தொல்லை கொடுத்துவருகிறார்.
அவமானத்துக்கு பயந்தும் அவரின் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டும் கடந்த 13.6.2019-ல் விஷம் குடித்தேன். அதன் பிறகும் மஞ்சுநாதன் என்னை விடவில்லை. பலரிடம் என் நம்பர்களைக் கொடுத்து ஆபாசமாகப் பேச வைக்கிறார். இதனால் வேலை இழந்து மனஉளைச்சலில் உள்ளேன். எனவே, எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு சட்டரீதியான நடவடிக்கையை மஞ்சுநாதன் மீது எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
போலீஸ் உயரதிகாரியைச் சந்தித்த நிலானி, `மஞ்சுநாதனிடம் உள்ள என் சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்களைக் கைப்பற்றி அழித்துவிடுங்கள்' என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
 நடிகை நிலானி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடிகை நிலானியைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தில் நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்றார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புதிய சர்ச்சையில் சிக்கிய அவர், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நிலானி, பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் பின்வழியாகச் சென்றுவிட்டார்

கருத்துகள் இல்லை: